12 நவம்பர், 2009

புனைவுக் காலத்தினுள் அமிழ்ந்த உண்மை முகம்


சித்தாந்தன்
....................................................
வேண்டாம்
கொடும் இரவுகளில் புனையப்பட்ட
பிணக்கதைகளிலிருந்து
ஒரு பூ பூக்குமென்றோ
அதன் நடனமிடும் விழிகளில்
சூரியன் உதிக்குமென்றோ
யாருமே நம்பவேண்டாம்

வாழ்வு குறித்த மெல்லிய கவிதையில்
புனைவுக்காலக் கதையாடல்கள்
வளர்ந்த போதுதான் நான் புரிந்தேன்
எந்த முகத்தின் வசீகரத்திலும்
உண்மை முகம் இல்லை என்பதை

புனைவுக்காலச் சொற்கள் முழுவதிலும்
எனது கண்ணீரும் குருதியும்

சாவின் இழைகளைப் பின்னியபடி
என் மீதான நிறங்களை
உரித்தெடுத்த நீங்களே
ஓரிரவில் என் நிர்வாணத்திற்காக
கண்ணீர் பெருக்கினீர்கள்

சூரியனின் ஒளியாய்
குருதி வழிந்தபோதும்
கனவுகளில் தேள்கள் குற்றி
வலியெடுத்த போதும்
கருகாத உங்கள் புன்னகையை
மலக் குழியினுள்ளோ
நாறும் கழிவோடையினுள்ளோ
கொட்டித் தீருங்கள்

நான் நிர்வாணமாக மட்டும் இருக்கிறேன்
உங்களின் புனைவுக் காலத்தில்

என் நிர்வாணம்
உங்களது நிர்வாணத்தின்
அடியிலிருந்தே துளிர்த்தது
நான் நிர்வாணமாக மட்டுமே இருக்கிறேன்

01 நவம்பர், 2009

தெருநாயின் வீணீர் இழுபடும் மனித முகத்தின் சூனியம்

சித்தாந்தன்
........................................................
சீழ் வடிந்த காயத்தின் உலரா முகத்தோடு
வீரிட்ட குழந்தையின் அழுகையில்
ஈக்கள் மொய்த்தன

ஏழு கடல்களையும் புரட்டியெடுத்து
இமைகளுக்குள் பொத்தி
தாகம் தணியாத உவர் நீரை
உள்ளிழுத்துப் பொருமிய
உதடுகளின் தெறிப்பில்
கண்களின் ஒளியுதிர்ந்து போனதெனக்கு

நீண்ட கால்களையும்
அதனது பருத்த தொடைகளையும்
பிடுங்கி எறிந்திடக்கிடந்த
பெண்ணின் மார்பிடுக்கின் வழியே
தாய்மையின் குருதி வழிந்தோடியது

நூற்றுக்கணக்கான ஜீவ பிரசவிப்பின்
பின்னான இரவொன்றில்
மூடக்கிழவியொருத்தி பிணமானாள்

துயில் தேவதைகளின் கரிய துகில்களினால்
மறைப்புண்டு
புழுக்கள் கெம்பி நெளிய
அவளது மரணம் நிகழ்ந்தேறியது

குழந்தைகளின் பாற்பற்களில் விஷமேற்றி
நடுநிசிகளில் அலையவிட்டு
தாலாட்டுப் பாடல்களைப் பாடிய
கொந்தளிக்கும் அலையில்
கடல் நடுங்கிச் செத்தது
(நட்சத்திரங்களும் பூக்களும் பிந்தித்தான் ஜனித்தன)

கருநீல நிறத்தையுருக்கி வளையமாக்கி
ஒளியூட்டி விழிகளுக்குள் சொருகிய கடவுள்
இருட்டில் அதன் ஓளியைப் பறித்தெடுத்து
தன் கபாலங்களுக்குள் ஊற்றி வைத்தான்

நிழல்களின் அசைவுகளில்
பச்சைக் குழந்தைகள் கோடுகள் வரைய
அவை பாம்புகளாகி அலைந்தன புவிவெளியில்

நரகமோ சுவர்க்கமோ
என்ற புரியாச் சொற்களின் இடைவெளிகளுக்கிடையில்
ஆதிக்கிழவி அழுத
ஏராளமான வார்தைகளின் ஈரம்
குருதிப் பிசுபிசுப்போடிருந்தது
கடவுளின் பெயரால்
சிதைவுகளிலிருந்து மீண்ட மனிதன்
அவற்றின் வலியிலிருந்து மீளாதவனாய்
கடவுளைச் சபித்தான்

சாபங்களின்கடவுளோ
வனதேவதைகளின்
இறுகிய மார்புக் குவடுகளுக்குள்
கண்களை மூடிக்கிடந்தான்

மனிதர்களின் குரல்
நிராதரவாய் காற்று வெளியில்
அலைகிறது அர்த்தமற்று