13 மே, 2008

நிகழ்கணத்தின் வலி


சித்தாந்தன்
----------------------------------------------------------
எங்களுக்கிடையில் பொம்மை
தன்சாகசங்களை நிகழ்த்துகிறது
எம் இருசோடிக் கண்களுக்கப்பாலும்
அதன்கண்கள்
சூரியனிலிருந்து வந்திறங்குகின்றன

பொம்மையுடனான சிநேகிதம்
எம்மையும் பொம்மைகளாக்கிவிட்டது
நாம் சிரித்தோம்
அது பொம்மையின் சிரிப்பு
நாம் அழுதோம்
அது பொம்மையின் அழுகை
நாம் கூத்தாடினோம்
அது பொம்மையின் களிப்பு

மேலும் புதிய புதிய பொம்மைகளால்
எமதுஅறையை அலங்கரிக்க விரும்பினோம்
எமது உலகத்தினது அற்புதங்களை
பொம்மைகளிலிருந்து ஆரம்பிக்கலானோம்

பொம்மைகளுக்கிடையில்
பொம்மைகளாய் வாழ்வதிலும் கொடிது
மனிதர்களுக்கிடையில்
பொம்மைகளாய் வாழ்வது

இன்றைய விருந்தினர்கள்
பொம்மைகளையே பரிசளிக்கின்றனர்

ஒரு பொம்மை பற்றிய கவிதையை
பொம்மையிலிருந்து ஆரம்பிப்பதை விடவும்
எம்மிலிருந்து தொடங்குவதே நல்லது

நீண்டோடிய நாட்களின் பின்
இன்றுதெருவுக்கு வர நேர்ந்தது
மனிதர்கள் எம்மைச்சூழ்ந்து கொண்டு
கற்களை வீசினர் தூசித்தனர்
உடல் கிள்ளிக் கொண்டாடினர்

எமது அழுகையை
பொம்மைகளினது அழுகை என்றனர்
எமது கண்ணீரை
பொம்மைகளினது கண்ணீர் என்றனர்

கடைசியில் நாம்
பொம்மைகளாகவே இறந்துபோனோம்
------------------------------------------------------------------

பாறைகளுக்கடியில் விழித்திருப்பவனின் இரவு

சித்தாந்தன்

---------------------------------------------------------------
இந்த இரவு
பிணமாய் விறைத்துக் கிடக்கிறது
காற்று உருகி இலைகளில் வழிகிறது
மழை இருளிலேறித் தாண்டவமாடுகிறது
உறங்கும் தீக்குச்சியை உரச மூண்ட தீ
பெருங்காடாய் எரிகிறது

திசைகளின் முரண்களிலிருந்து
ஈனத்தில் பிறப்பெடுக்கும் வனமிருகங்களின்
ஒழுங்கற்ற ஒலிக்குறிகளை
வாசித்தபடி புணரத்தொடங்கினோம்
ரூபங்களின் இணைவில்
பொங்கிய பாலிமையின் உச்சத்திலிருந்து
வடிந்து வற்றத்தொடங்கியது பசி

நீயற்ற வெளி என்மீது கவிகையில்
எம் அந்தரங்கங்களில்
இதழுதிர்ந்த காதல் சருகின் படபடப்பு

மழை தாண்டவமாடுகிறது
இரகசியக் கால்வாய்களில் பெருகும் வெள்ளம்
பாறைகளை இழுத்துச் சுழிக்கிறது
எம் படுக்கையின் கீழ் கடல்
நீ உன் கடலில் இறங்கி நடக்கலானாய்
நான் என் கடலில் இறங்கி நடக்கத்தொடங்கினேன்
வெறும் படுக்கைதான்
தெப்பமாக மிதந்துகொண்டிருக்கிறது
----------------------------------------------------------------------------

மெய் உறங்கும் நாட்களின் கோடை

சித்தாந்தன்
-----------------------------------
எம்மிடை விரியும் வெளியில்
ஊதுபத்தியின் வாசனை கமழ்வதாய் சொல்கிறாய்
புறக்கணிக்கப்பட்ட ஒரு கவிதைக்கு
இசை மதுவூற்றி கிண்ணங்களை ததும்ப வைக்கிறாய்
ததும்பி வழிந்த மதுவில்
என் கனவுகள் குமிழியிட்டுடைவதாய்
நொருங்கிச் சிதறும் சொற்களால் பாடுகிறாய்

இன்றேன் எம் புன்னகையில் ஈரம் வடிந்திற்று
காலாற நிழலற்ற பெருந்தெருவில்
கானலில் ஈர்ப்புற்று அலையும்
நாய்களின் இளைப்பின் அதிர்வு
சாகடிக்கப்பட்ட கணங்களாய் நீள்கிறது.

இனி இரவுகள் தொங்கும் கயிற்றில்
விழிப்பின் நிறங்களை உரித்தெடுத்தபடி
நீ செல்லப் போகிறாய்
எத்தனை ஆந்தைகள் அலறுகின்றன என்னுள்
மழையற்ற நெடுங்காலமிது
பாழாக்கப்பட்ட கட்டடங்களின் மேலிருந்து
சிறகுலர்த்துகிறது கொண்டைக்குருவி ஒற்றையாய்
இடிபாடுகளுக்குள் கேட்கும் குரல்
வெளவால்களை துரத்திச் செல்கிறது
அவற்றின் பறப்பெல்லைவரை.

நீ காலியான மதுக்குவளைகளை முகர்கிறாய்
மீதமிருக்கும் போதையையும்
அவற்றின் நெடியால் நிறைக்கிறாய்
பின்னும்
விழிப்பின் நிறங்களை உரித்தெடுத்தபடி
எனது காலத்தை நிர்வாணப்படுத்துகிறாய்
எச்சிலாய் வழிகிறது மிஞ்சியுள்ள சொற்களும்.
நீ சொல்கிறாய்
எம்மிடை விரியும் வெளியில்
ஊதுபத்தியின் வாசனை கமழ்வதாய்

வாழ்தலின் இழையறுத்து வலைபின்னுகிறது காலம்
கத்திக்கும் வாளுக்குமான பேதந்தான் எமக்கு
நீ செல்லப்போகிறாய்
காரணமற்ற குரோதத்தின் பழியுணர்ச்சியுடனும்
நான் பருகமறுத்த மதுவின் போதையுடனும்.

உனக்கு வழிவிடப்போகும் கடலை
விசமாக்கிற்று உனது பார்வை.

மீன்கள் செத்து மிதக்கின்றன
கடல் நாறி மணக்கிறது
இன்னும் நீ சொல்கிறாய்
எம்மிடை விரியும் வெளியில்
ஊதுபத்தியின் வாசனை கமழ்வதாய்.

27-05-2007 இரவு- 11.51
------------------------------------