13 மே, 2008

நிகழ்கணத்தின் வலி


சித்தாந்தன்
----------------------------------------------------------
எங்களுக்கிடையில் பொம்மை
தன்சாகசங்களை நிகழ்த்துகிறது
எம் இருசோடிக் கண்களுக்கப்பாலும்
அதன்கண்கள்
சூரியனிலிருந்து வந்திறங்குகின்றன

பொம்மையுடனான சிநேகிதம்
எம்மையும் பொம்மைகளாக்கிவிட்டது
நாம் சிரித்தோம்
அது பொம்மையின் சிரிப்பு
நாம் அழுதோம்
அது பொம்மையின் அழுகை
நாம் கூத்தாடினோம்
அது பொம்மையின் களிப்பு

மேலும் புதிய புதிய பொம்மைகளால்
எமதுஅறையை அலங்கரிக்க விரும்பினோம்
எமது உலகத்தினது அற்புதங்களை
பொம்மைகளிலிருந்து ஆரம்பிக்கலானோம்

பொம்மைகளுக்கிடையில்
பொம்மைகளாய் வாழ்வதிலும் கொடிது
மனிதர்களுக்கிடையில்
பொம்மைகளாய் வாழ்வது

இன்றைய விருந்தினர்கள்
பொம்மைகளையே பரிசளிக்கின்றனர்

ஒரு பொம்மை பற்றிய கவிதையை
பொம்மையிலிருந்து ஆரம்பிப்பதை விடவும்
எம்மிலிருந்து தொடங்குவதே நல்லது

நீண்டோடிய நாட்களின் பின்
இன்றுதெருவுக்கு வர நேர்ந்தது
மனிதர்கள் எம்மைச்சூழ்ந்து கொண்டு
கற்களை வீசினர் தூசித்தனர்
உடல் கிள்ளிக் கொண்டாடினர்

எமது அழுகையை
பொம்மைகளினது அழுகை என்றனர்
எமது கண்ணீரை
பொம்மைகளினது கண்ணீர் என்றனர்

கடைசியில் நாம்
பொம்மைகளாகவே இறந்துபோனோம்
------------------------------------------------------------------