12 நவம்பர், 2009

புனைவுக் காலத்தினுள் அமிழ்ந்த உண்மை முகம்


சித்தாந்தன்
....................................................
வேண்டாம்
கொடும் இரவுகளில் புனையப்பட்ட
பிணக்கதைகளிலிருந்து
ஒரு பூ பூக்குமென்றோ
அதன் நடனமிடும் விழிகளில்
சூரியன் உதிக்குமென்றோ
யாருமே நம்பவேண்டாம்

வாழ்வு குறித்த மெல்லிய கவிதையில்
புனைவுக்காலக் கதையாடல்கள்
வளர்ந்த போதுதான் நான் புரிந்தேன்
எந்த முகத்தின் வசீகரத்திலும்
உண்மை முகம் இல்லை என்பதை

புனைவுக்காலச் சொற்கள் முழுவதிலும்
எனது கண்ணீரும் குருதியும்

சாவின் இழைகளைப் பின்னியபடி
என் மீதான நிறங்களை
உரித்தெடுத்த நீங்களே
ஓரிரவில் என் நிர்வாணத்திற்காக
கண்ணீர் பெருக்கினீர்கள்

சூரியனின் ஒளியாய்
குருதி வழிந்தபோதும்
கனவுகளில் தேள்கள் குற்றி
வலியெடுத்த போதும்
கருகாத உங்கள் புன்னகையை
மலக் குழியினுள்ளோ
நாறும் கழிவோடையினுள்ளோ
கொட்டித் தீருங்கள்

நான் நிர்வாணமாக மட்டும் இருக்கிறேன்
உங்களின் புனைவுக் காலத்தில்

என் நிர்வாணம்
உங்களது நிர்வாணத்தின்
அடியிலிருந்தே துளிர்த்தது
நான் நிர்வாணமாக மட்டுமே இருக்கிறேன்

2 comments:

M.Rishan Shareef சொன்னது…

//வாழ்வு குறித்த மெல்லிய கவிதையில்
புனைவுக்காலக் கதையாடல்கள்
வளர்ந்த போதுதான் நான் புரிந்தேன்
எந்த முகத்தின் வசீகரத்திலும்
உண்மை முகம் இல்லை என்பதை//

அருமை !

சித்தாந்தன் சொன்னது…

வருகைக்கு நன்றி ரிஷான்