08 ஏப்ரல், 2010

வலியுணர்தல்-1

சித்தாந்தன்
.........................................................................

சரி செய்யப்படாத பிரச்சினைகளால்
நிறைந்திருக்கும் அறையில்
நீயும் நானும் தனித்திருக்கின்றோம்

புதிதாகக் கொண்டுவரப்பட்ட நிலைக்கண்ணாடி
பலமுறையும் புறக்கணிக்கிறது என் விம்பத்தை

முழுமையும் சிதறிய குளிர் நீர்
ஆவியாகத் தொடங்கிவிட்டது
உஷ்ணமான மூச்சால் நிறைகிறது அறை

நீ சூசகமாய்த் தவிர்க்கும்
என்னுடலின் தவிப்பைத் தின்று தொலைக்கின்றன
சுவரில் புணரும் பல்லிகள்

உனது ஆழ்ந்த உறக்கத்தின் மூச்சொலி
துரத்திச் செல்கிறது
விடுபட்ட நாட்களின் வார்த்தைகளை

அறையை மூடியிருக்கிறோம் நாம்
அல்லது
நம்மை மூடியிருக்கிறது அறை

சாவித் துவாரத்தின் வழி
வெளியேறிச் செல்கிறது காற்று

புணர்ந்து களைத்து நகர்ந்த பல்லிகளின்
வெறுமையினிடத்தில்
தெறித்து வழிகிறதென் சுக்கிலம்