பாரம்பரிய கலைகளின் மீதான
பேரவாவும்-சமூக ஊடாட்டத்தின் மீதான சில கேள்விகளும்
சித்தாந்தன் சபாபதி
தன்னிலையான
இயங்குநிலையை உடைய சமூகம் காலத்தின் தேவை கருதிய கலை வடிவங்களை உருவாக்குகின்றது. அந்தக்
கலைகள் காலத்தின் இயங்கு நிலைக்கு ஏற்பவும் மாறுநிலைக்கு ஏற்பவும் மாற்றமுறவும் புதிய
வெளிகளை நோக்கி விரிவடையவும் தன்னைத் தகவமைத்துக் கொள்கின்றது. ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட
கலை, இலக்கிய வடிவங்கள் பின்னான காலங்களில் வழக்கிழந்து போவதும் பிறிதான கலையாக அல்லது
இலக்கியமாக மாற்றமுறுவதும் அல்லது புதிய வெளிகளை அவை திறந்துவிடுவதும் இயல்பாக நிகழ்பவை.
இழந்துபோனவை
பற்றிய மனித மனத்தினது ஏக்கம் ஒரு சமூகத்தினது ஏக்கமாக , பண்பாட்டின் சரிவாக கருதப்படும்போது
அவை பற்றிய பிரக்ஞை இயல்பாக எழுவதென்பது புதியதல்ல. தமிழா் பண்பாட்டின் உயா்ந்த கலை
வடிவமாக கோலோச்சிய கூத்துக்கலை பின்னய காலங்களில், மேடை நாடகத்தினதும் சினிமாவினதும்
வருகையோடு பல சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கியது. கூத்தென்பது ஒரு சமூகத்தின் இருப்பியலோடு
சோ்ந்தியங்கிய கலையாகும். அக்கலைக்கு ஒரு சமூக பொறுப்புணா்வும் அக்கறையும் இருந்ததாகவே
கூத்துக் கலையோடு தங்கள் வாழ்க்கையினை இணைத்துக் கொண்டவா்கள் சொல்வதுண்டு. ஆகவே இத்தகைய
கலைகள் நவீன விஞ்ஞான வளா்ச்சியினால் விளைந்த பல்வேறு மாற்றநிலைகளால் அடுத்த தலைமுறையை
நோக்கிச் செல்வதிலும் தொடா்ந்து தம் இருப்புநிலையைப் பேணுவதிலும் தடைகளைச் சந்தித்துவருகின்றன.
கூத்துகள் பரம்பரைக் கையளிப்புக்களாவே பெரும்பாலும் அமைந்திருந்தன. தந்தை அவரின் பின்
மகன் அவரின் பின் அவரது மகன் என இது தொடா்வதுண்டு.
ஆனால்
இன்றைய இளையதலைமுறை கூத்துப் போன்ற பாரம்பரியமான கலை வடிவங்களில் அக்கறை கொள்ளாதிருப்பதும்.
பொருள் மையமான சிந்தனைப் போக்கில் எல்லாமே வருமானத்தை எதிர்பார்க்கும் ஒன்றாக மாற்றமடைந்த
பின்னா், எந்த விதமான வருமானத்தையும் ஈட்டிக்கொடுக்காது என்ற நோக்கில் கூத்தை அடுத்த
தலைமுறை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதற்கும் நியாயமான காரணங்கள் உள்ளன என்ற தோற்றநிலை உருவாகியிருக்கின்றது.
இந்தப்
பின்னணியிற்றான் வடமராட்சிக் கிழக்கு கலாசார பேரவையின் தயாரிப்பில் அம்பலம் திரைக்கூடத்தின்
வெளியீடாக தபினின் எழுத்து,இயக்கத்தில் “கூத்தாடி“ குறும்படம் வெளியாகியிருக்கின்றது.
ஏலவே எமது பண்டைய கலை வடிவங்கள், வாழ்க்கை முறைகள் பேணப்பட வேண்டும் என்பதை மையமாக
வைத்து பல சினிமாக்களும் குறும்படங்களும் வெளிவந்திருந்தாலும், தபினின் “கூத்தாடி“
கவனிப்புக்குரிய குறும்படமாக அமைவதற்கும் காரணங்கள் உள்ளன. போருக்குப் பின்னரான ஈழத்தமிழா்களின்
வாழ்வில் சடுதியான மாற்றங்கள் பலவும் நிகழ்ந்திருக்கின்றன. போராட்ட வாழ்வியலோடு பின்னிப்பிணைந்திருந்த
வாழ்வு, போருக்குப் பின்னராக ஏற்பட்ட சமூக பொருளாதார கலாசார மற்றும் அரசியல் மாற்றங்களினால்
பல நெருக்கடிகளைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றது. இது இயல்பாகவும் திட்டமிடப்பட்ட
வகையிலும் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள்தான். எனினும் போரினால் சூழ்திருந்த மனவெளிகளை
நிரப்பும் இந்த இதர நிலைமைகள் எமது பாரம்பரியங்களின் வோ்களைக் களையவும் தொடங்கியிருக்கின்றன.
இன்று குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே கூத்துக்கலை உயிர்ப்புடன் பேணப்பட்டுவருகின்றது.
இதனைவிட தமிழ்த்தின விழாக்களில் போட்டிக்குரிய கலையாகவும் மாற்றமடைந்திருக்கின்றது.
உண்மையில் இது ஒரு வீழ்ச்சியா அல்லது சமூகமாற்றத்தில் இவை எல்லாம் இயல்பாக நடைபெறுபவைதான்.
இதனால் இந்தப் புரிதலோடு இவற்றைத் தாண்டிச் செல்வதுதான் பொருத்தமானது எனக் கருதிக்
கொள்ளலாமா?
ஒரு
சமூகத்தின் இருப்பு, அதன் மரபார்ந்த வாழ்க்கையையும் கலை வடிவங்களையும் பாதுகாத்தலை
அடிப்படையாகக் கொண்டது என்ற ஒரு கருத்துநிலையைச் சமூகம் கொண்டிருந்தாலும் பரம்பரைத்
தொழிலையும் பரம்பரைக் கலைவடிவங்களையும் பேணுகின்ற சமூகங்கள் அவற்றைத்தான் தங்களுடைய
அடையாளங்களாக பேணிக் கொள்ள வேண்டுமா? என்ற கேள்வி வருகின்றது. மற்றைய சமூகங்கள் தங்கள்
இருப்பை மாற்றியமைத்துக் கொண்டு சமூக நிலைமைகளுக்கு ஏற்ப தம்மை ஏற்றவாறு முன்னேற்றத்துக்குரிய
சமூகங்களாக மாற்றுகின்றனவோ அவ்வாறே குறித்த கலைகளைப் பேணும் சமூகங்களும் முன்னேற்றமடைய
வேண்டும். ஆனால் நிலைமை தொழில் சார்ந்த அடையாளங்களையும் கலை சார்ந்த அடையாளங்களையும்
இழிவு நிலைப் பொருளில் வழங்குவதன் மூலம் சமூகத்தின் புறநிலை மனிதா்களாக குறித்த சமூகங்களை
அடையாளப்படுத்த விளைகின்றது. கூத்தாடி குறும்படத்தில் வரும் இளைஞனின் தந்தை ஒரு கூத்தாடி.
அவன் ஆங்கிலம் கற்பதற்காக தனியார் வகுப்புக்குச் செல்கின்றான். அங்கே ஆசிரியா், அவனைப்
பற்றி ஆங்கிலத்தில் சொல்லுமாறு கேட்கின்றார். அதற்கு அவன் தனது பெயரைச் சொல்லிவிட்டு
தந்தையின் தொழிலை சொல்லும் போது தயங்குகின்றான் மற்றைய மாணவா்கள் எல்லோரும் சிரிக்கின்றார்கள்.
அவன் தந்தையின் தொழிலை ”றாமா அக்ரா்” எனக் குறிப்பிடும் போது, ஆசிரியரும் சிரித்து
விட்டு “உனது அப்பா அக்ரா் இல்லை சிவாஜி கமலைத்தான் அக்ரா் என்பது உனது அப்பாவின் தொழில்
”கூத்தாடி” என்று சொல்லு” என கேலி செய்கிறார்.
தபின்
கூத்துக்கலை தொடா்பான எமது சமூகத்தின் பார்வை இளந்தலைமுறையினரிடம் எந்த வகையில் உள்ளது
என்பதை இந்தக் காட்சிப்பதிவின் மூலம் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.
கூத்துக்கலை
பற்றிய பிரக்ஞையை மையமாகக் கொண்டு இக் குறும்படம் தயாரிக்கப்பட்டிருந்தாலும் எமது வழக்கிழந்து
போன அடையாளங்களும், புழங்கு பொருட்களும் பதிவாக்கப்பட்டிருக்கின்றமையும் இக் குறும்படத்தின்
முக்கியத்துவத்துக்குக் காரணமாகின்றது. குறிப்பாக மூக்குப்பேணி, தாம்பாளம் என்பவை மீள்
நினைவாக வருகின்றன. அதிலும் தந்தை மூக்குப்பேணியில் தேநீா் அருந்துவதையும் மகன் தம்ளரில்
தேநீா் அருந்துவதையும் குறியீடாகக் கொண்டு தலைமுறை இடைவெளிகளை பதிவு செய்திருக்கின்றார்.
இதற்கு அப்பால் நிகழும் உரையடால்களில் காணக்கிடைக்காத வலுவை இத்தகைய காட்சிப்பதிவுகளில்
காணமுடிகின்றது.
தந்தை,
தான் கடந்தகாலத்தில் கூத்தாடிய இடத்தை இரவுப்
பொழுதில் தனிமையில் இருந்து பார்த்து ஏங்குகின்றார். கடந்த காலத்தின் இதமான நினைவுகள்
அவரை வருடுகின்றன. தபின் இதனை ஒரு பின்னணிக் காட்சியாகக் காட்டுகின்றார். கூத்தின்
ஒரு பகுதி நிகழ்த்திக் காட்டப்படுவதாக அக்காட்சி பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. ஆனாலும்
அக்காட்சியில் கூத்தின் பார்வையாளராக வெறும் மூன்று பேரே அமா்ந்திருப்பதாகக் காட்டப்படுகின்றது.
இது நடிகா்களுக்கான பஞ்சத்தினால் அவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் ஒரு
காலத்தில் வளமாக இருந்த கலையை வெறும் மூன்றுபேர்தானா? இரசித்தார்கள் என்ற தோற்றத்தையும்
கொண்டுவருகின்றது. பார்வையாளா்களின் எண்ணிக்கையை அதிகமாக காட்டியிருக்கும் போதே தந்தையான
அண்ணாவியாரின் ஏக்கமும் படத்தினது நோக்கமும் நிறைவேறியதாக இருக்கும். மாறாக இக்காட்சி
படத்தின் நோக்கத்திற்கு பங்கம் ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது.
கூத்தாட்ட
இடமெங்கும் “பியா் ரின்“ கள் காணப்படுகின்றன. ஒரு புனித இடமாக அண்ணாவியாரால் கருதப்பட்ட
இடம். இப்படி காணப்படுவது. கால மாற்றம் புனித இடங்களைக்கூட களியாட்டக் கூடங்களாகவும்
கழிப்பிடங்களாகவும் ஆக்கிவிட்டிருக்கிறது என்பதனை நுட்பமாகப் பதிவு செய்திருக்கின்றார்.
அண்ணாவியார் கோபத்தோடு பியர்ரின் ஒன்றினை உதைப்பது கலையை போற்றிக் காக்காத சமூகத்தின்
மீதான வெறுப்பின் வெளிப்பாடா என எண்ணவைக்கின்றது. இவ்வாறாக பல இடங்கள் நுட்பமான உட்கருத்துக்களோடு
காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
தந்தை
தனக்குப் பின்னா் கூத்தை மகன் வளா்த்தெடுப்பான் என நம்புகின்றார். அதற்காக மகனிடம்
இறைஞ்சுவது போல கேட்கின்றார். மகன் தந்தை கூத்தாடியாக இருப்பதனால் தான் எதிர்கொள்ளும்
அவமானங்களைக் காரணங்காட்டியே அதனை மறுக்கின்றான். அவனுக்கும் தங்கைக்குமான உரையாடல்
இதனை வெளிப்படுத்துகின்றது. இறுதியில் மகன் தந்தையின் விருப்பையும் மீறி நண்பனின் துணையுடன்
வெளிநாடு செல்கின்றான். அங்கு தொழில் தேடுகின்றான். ஒரு ஹொட்டலில் அவனது வேலைக்கான
நோ்முகத் தேர்வு நடக்கிறது. அதன்போது அவனிடம் அவனது தந்தையின் பெயரைக் கேட்கப்படுகிறது.
அவன் தயக்கத்தோடு சொல்கின்றான். ”அண்ணாவி இராமநாதன் மகனா நீ? அண்ணாவி இராமநாதன் மகனுக்கு
இங்கு வேலை இல்லை.” அவனின் கண்கள் ஏமாற்றத்தால் விரிகின்றன. இதற்குப் பிறகான காட்சிகள்தான்
படத்தின் மையக்கருத்தை நோக்கிப் பார்வையாளனைக்
கூா்மைப்படுத்தும் காட்சிகள்.
கூத்துக்கலையை
பேண வேண்டும் என்ற எண்ணத்தை சமூகத்தில் வேரூன்ற வைக்க வேண்டும் என்பதே இயக்குநரின்
எதிபார்க்கையாக இருக்கின்றது. ஆனால் ஒரு பண்பாட்டின் கலை அந்தப் பண்பாட்டை அந்த நிலத்திலேயே
பேணிக்கொண்டிருக்கிற மக்களால் ஏன் பேணப்படாமல் இருக்கிறது என்பதற்கான விளக்கங்களை
”கூத்தாடி“யில் காணமுடியவில்லை என்பதும், கூத்துக் கலையைப் புலம்பெயா்ந்து வாழும் சமூகங்கள்
அதற்கான கலைக்குரிய தகைமையோடு விளங்கிக் கொள்வார்களா? அவா்களின் ஒரு தலைமுறை விளங்கிக் கொண்டாலும் அடுத்துவரும்
தலைமுறையைச் சோ்ந்தவா்கள் எந்த வகையில் அதனை நோக்குவார்கள் என்பதும் தவிர்க்க முடியாதபடி
எழும் கேள்விகள்.
காலமாற்றத்துக்கு
ஏற்ப கலை உட்பட அனைத்துமே தம்மை புதுப்பிக்க வேண்டிய தேவையிருக்கின்றது. கூத்துக் கலை
ஒரு காலகட்டத்தில் மேடைக்கானதாகச் சுருக்கப்பட்ட போது அது சமூகத்தின் அனைத்துமட்டத்தினராலும்
ஒரளவுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆயினும் பின்வந்த மாற்றங்கள் சமூகத்தில் பல்வேறு
தாக்கங்ககள ஏற்படுத்தியிருக்கின்றன. எனவே மாற்றங்களுக்கு அமைவானதாக அளிக்கை முறைகளையும்
நவீன வெளிகளுக்கு அமைவாக விருத்திசெய்ய வேண்டியிருக்கின்றது. ஈழத்தில் அது நடந்திருக்கிறதா?
அல்லது அவ்வாறு மாற்றங்களை எதிர்பார்ப்பதென்பது கூத்தின் அடிப்படையான பெறுமானத்தை சிதைத்துவிடுமா?
இத்தகைய கேள்விகளும் இந்தக் குறும்படம் சார்ந்து எழுகின்றன.
ஒரு
குறும்படமாக இவ்வாறான கேள்விகளுக்கு இடமளித்தாலும், கலையாக்க முறையில் “கூத்தாடி“ நல்லதொரு
குறும்படத்திற்கான தகைமைகளையும் கொண்டிருக்கின்றது. வழக்கமாக ஈழத்தின் திரைப்படங்களில்
காணக்கிடைக்கின்ற நாடகப் பாங்கான உரையாடல் மொழி பெருமளவுக்கு தவிர்க்கப்பட்டிருக்கின்றமை
பாராட்டுக்குரியது. முக்கியமான பாத்திரங்களான தந்தை மகன், மகள் ஆகியோரின் நடிப்பில்
வழமையான சினிமாத் தனத்தை கொண்டுவராது யதார்த்தமான நடிப்பாற்றலைக் கொண்டுவருவதற்கு தபின்
சிரத்தை எடுத்திருக்கின்றார் என்பதைக் காணமுடிகின்றது. அதிலும் தங்கையாக நடிப்பவா்
இயல்பான நடிப்பை வெளிப்டுத்தியிருக்கின்றார். எனினும் தந்தை மகன் போன்றோரின் நடிப்புத்திறன்
போதுமான உணா்வுத் தன்மையோடு வெளிப்படவில்லை என்ற கூறலாம். கமராவின் ஆரம்பக் கோணம் ஒரு தோ்ந்த ஒளிப்பதிவாளனின்
நோ்த்தியுடன் பதிவாகியிருக்கின்றது. ஆனால் பின்வந்த காட்சிகளில் இன்னும் கூடுதலான கவனத்தை
ஒளிப்பதிவில் செலுத்தியிருந்தால் படத்தின் காட்சியமைப்புக்கள் மேலும் வலுமிக்கதாக அமைந்திருக்கும்.
குறிப்பாக கூத்தாட்டக் களத்தைக் காட்டும் அந்த நினைவுக் காட்சியில் இயைபற்றதான செயற்கையான
ஒளியுட்டல் காட்சியின் இயல்பைக் குலைத்துவிட்டிருக்கின்றது. இசையின் அதிரடி அலறல்கள்
இல்லாமல் இயல்பான பின்னணி இசை பாடல்களை ஒலிப்பதிவு செய்திருக்கும் விதம் என்பன பாராட்டுக்குரியன.
பாடத்தொகுப்பு இசைவாக பொருந்தியிருக்கின்றது. அதிலும் இறுதிக் காட்சிகளைக் குறிப்பிட்டுக்
கூறலாம். மொத்தத்தில் ”கூத்தாடி” பல்வேறு விதமான கேள்விகளைப் பார்வையாளனிடத்தில் எழுப்பினாலும்,
நல்லதொரு குறும்படத்தை பார்த்து இரசித்த அனுபவத்தையும் தருகின்றது.
00
1 comments:
நிறைவான திறந்த பார்வை
நன்றி நன்றி
கருத்துரையிடுக