15 ஜூன், 2008

தருணம்/1

சித்தாந்தன்
----------------------------------------------------------
யாருமற்ற வீட்டை
அவசரமாக பூட்டிவிட்டு நடக்கிறேன்
உள்ளேயிருந்து யாரும்
அழைத்துவிடுவார்களோ என்ற பதட்டத்துடன்

எப்படியோ ஒரு கடலை உள்விட்டுவந்த பதட்டம்
வந்துவிடுகிறது

நீ கைகளைப்பிசைந்து பாவனைகளுக்குள்
காதலை மூழ்கடித்துக்கொண்டிருந்தாய்
எனது பதட்டம்
யாருமற்ற வீட்டின் கதவுகளுக்குப் பின்னால்
கேட்டுக்கொண்டிருக்கும்
அருபங்களின் உரையாடலில் குவிந்திருந்தது

வீடு திரும்புகையில்
மதுப்புட்டிகள் காலியாகிக்கிடக்கின்றன
கவிதைகளில் ப+ச்சிகள்
காதல் ததும்பும் சொற்களை அரித்துவிட்டிருக்கின்றன
என் தலையணை உறைகளில்
எண்ணை பிசுபிசுப்பு ஒட்டிக்கிடக்கிறது
சமையலறை நீர்க்குழாய் திறந்து விடப்பட்டிருக்கிறது
ஆடைகள் கலைந்துகிடக்கின்றன
சாப்பிட்டுவிட்டு கழுவாமலே கிடக்கும் கோப்பைகளில்
ஈக்கள் மொய்த்தபடியிருக்கின்றன

எனது காலடி மட்டும் கேட்கும் நடையின் பின்னே
மேலுமொருவரின் காலடியோசை
கடலின் அலையடித்தலாய் கேட்டுக்கொண்டிருக்கிறது

துயில் முட்டபடுக்கையில் சரிகையில்
என் போர்வையை யாரோ இழுத்துப்போகிறார்கள்.

காலை 5.51 26.03.2008
------------------------------------------------------