15 ஜூன், 2008

கருணை வேண்டிக் காத்திருத்தல்

சித்தாந்தன்

----------------------------------------------------------
வலி மிகு இரவுகளை
என் தோழில் சுமந்துகொண்டிருக்கிறேன்
ஆணிகளறையப்பட்;ட இதயத்திலிருந்துவழியும்
பச்சை இரத்தத்தின் வெம்மை
காலக்கிண்ணத்தை சாம்பலால் நிறைக்கிறது

இரவைப்போல படியும் பனிப்புகாரை
விலக்கிக்கொண்டு கூச்சலிட முடியாத
கணங்களின் மேல் முள்வலையாய் மூடுகிறது
அச்சத்தின் கருநிழல்

எல்லாம் நடந்துகொண்டிருக்கின்றன
ஒரு பயணியின் கைப்பிடிக்குள்ளிருந்து
வழிகின்றன கனவுகள்
மிதமிஞ்சியதான அகோரத்துடன்
வனங்களின் உட்பாதைகளில் மரணங்கள்
காற்றின் இயல்பாய் நடந்;தேறுகின்றன
கம்பிகள் அடித்திறுக்கப்பட்ட சிறைகளுக்குள்ளிருந்து
உயிர் கருகும் நெடி

கையாலாகாதவனின் கண்ணீர் வீழ்ந்து
சமுத்திரங்களில் மூழ்கிறது தீ
மூடுண்ட நகரத்தின் சாட்சியாய் சுவர்களில்
மோதிச்சிதறுகிறது வெளவால்களின் குரல்

இரட்சிப்பின் வார்த்தைகளில் ஈரமுலர்ந்த பின்னும்
சிறைக்கதவை உதைத்து
முகத்தில் எச்சில் உமிழ்பவனிடமிருந்து
இன்னும்
கருணை வேண்டிக்காத்திருக்கிறது மனசு

10.03.2008 இரவு 11.55
------------------------------------------------