06 ஜூலை, 2008

கனவினது உயிர்முகம்

சித்தாந்தன்
----------------------------------------------------------------------------------

திரும்பியே வராத ஒரு இரவினது
கனவின்
குளம்பொலியை கேட்கநேர்கிறது

மனிதர்களின் புன்னகை சுடர்ந்த
அந்தக்கனவில்
நீயும் நானும் பேசினோம்
எமக்கென்ற நிலம்
வீடு
நிலவின் ஒளிபடர்ந்த முற்றம்
எல்லாமே இருந்தன

காலத்தின் வலையிலிருந்து
தப்பித்துக்கொண்டிருக்கிற
அந்த அழகிய கனவில்தான்
நீயும் நானும்
ஓவியங்களாக வாழமுடிந்தது

தசையும் ரணமும்
குருதியும் இல்லாத
கனவின் உணர் ஓரங்களில்


யுத்தம் பொய்த்துப்போனதென்பது
விசித்திரமானதுதான்.
----------------------------------------------------------------------------------------------