14 செப்டம்பர், 2008

ஞானம் கலைந்த இரவு

சித்தாந்தன்
--------------------------------------------------
யசோதரையுடனான கடைசியிரவில்
தியானத்தின் ஆழ்நிலையில்
ஊறிக்கிடந்த புத்தரை
அரூப நடன தேவதைகள் இழுத்துச்சென்றன
சூழவும் விருட்சங்கள் வளர்ந்திருந்த
இன்பச் சோலையுள்
நகக்கணுக்கள் வழியே நுழைந்த
மோகக்கனிகளை உண்டு அவர் பசியாறினார்
பிறகு
தேவதைகள் யசோதரையின் படுக்கையில்
அவரைக் கடாசி வீசிவிட்டுப் போயின

காலை விடிந்தும் ஞான உறக்கத்திலிருந்து
கலையாதவரை
தனது தலை மயிர்களினால் மூடி
மார்போடணைத்து முத்தமிட்டாள் யசோதரை
புத்தரின் ஞானம் சிதறுண்டு
யசோதரையின் கன்னங்களில் முத்தமிட்ட
அவரின் ஞான வெளியில்
தேவதைகளின் அந்தரங்கங்கள் பூத்து விரிந்தன
அவர் படுக்கையிலிருந்து இறங்கி
தேவதைகளின் உலகை
தேடி அலையத் தொடங்கினார்
----------------------------------