19 மே, 2011

துர்நிமித்தம்-1

சித்தாந்தன்

இந்த இரவை
பனியின் திவலைகளால் மூடுகின்றேன்.
சாத்தப்படாத யன்னலுக்கு அப்பால்
தொலைவில் மங்கும் வெளிச்சத்தில்
கருகி மணக்கிறது யாருடையதோவான தேகங்கள்

இலைகளையுண்ணும் இரவு இன்னும்
நட்சத்திர இழைகளில்த்தான் தொங்குகிறது

பின்னிரவின் சூட்சுமம் புரியாத பைத்தியக்காரன்
இரவைக் கவிதையென கத்தித் திரிகின்றான்

தேகங்கள் எரிந்து கருகட்டும்

யன்னலின் அண்டை வந்து
கம்பிகளில் மோதித் திரும்புகின்ற காற்றுக்கு
காவித்திரிய நறுமணம் இல்லாத கவலை

புணர் ஜென்மங்களை நினைவுறுத்தும் படியாக
சாவின் நிழல் பரத்தியபடி மேலெழுகிறது சூரியன்
அதே திமிர்த்தனத்துடன்.

காலங்கள் நெக்கியுதிர்ந்த யன்னலருகே
யாருமேயில்லை
காற்றுக் கூட.

14 மே, 2011

சாவுகளால் நிரம்பும் வெளி

சித்தாந்தன்

மரங்களில் பூத்திருக்கின்றன
பிணப் பூக்கள்.
வெளிவந்த அறிக்கைகளின் பின்னால்
தேகத்தை பெற்றோலுக்கிரையாக்கியவனின் கதறல்
ஓலிக்கிறது.

நீள்வானத்தின் பெருநட்சத்திரங்கள் உடைந்து சிதறியபின்
தியாகங்களைக் கூவி விற்பவர்கள்
தெருக்களில் சாவகாசமாய் அலைகிறார்கள்.

சித்தம் சிதறிய தாயே சொல்
உன் வானம் பற்றிய கனவில்
இன்னும் நீலம் உலராமல் இருக்கின்றதா?

சாவுகளின் சாகசத் தனங்களை
அவற்றின் நித்தியத்தை
அறைந்தவர்களின் குரல்களின் பின்னால் மேலெழுந்த
புழுதியில்
ஏப்போதாவது கண்டிருக்கிறாயா?
உன் பாலகனின் பிஞ்சு முகத்தை.

இன்றோ
இன்னொரு பாலகன்
தன்னுடலைத் தீயுண்ணக் கொடுத்துத் தியாகியாகிவிட்டான்

கல்லறைகளைக் கிளறி
அவற்றின்மேலாய்
கட்டிடங்கள் வளர்ந்துவிட்டன.

காற்றைக் கைகளால் அளையும் குழந்தைகள்
இன்று அதன் மௌனத்தைக் கண்டு கதறுகிறார்கள்.

இன்னும் இன்னுமாக
தியாகங்களால் சாவின் வெற்றிடத்தை நிரப்ப
காத்திருக்கிறார்கள் பாலகர்கள்