04 ஆகஸ்ட், 2008

இருளுள் வதைபட்டுச் சிதைகிற ஒளி ஓவியம்

சித்தாந்தன்
....................................................................................

யேசுவே
நீர் சிலுவையில் அறையப்பட்டபோது
துயரத்தாலும்
அவமானத்தாலும் தலைகுனிந்தீர்
உமது சிடர்களோ
தாகத்தாலும்
பசியாலும் தலை தாழ்ந்துவிட்டதாகச் சொன்னார்கள்

கல்வாரி மலைக்காற்றைப் பிளந்த
உமது சொற்களில்
இருளின் வலி படர்ந்திருந்தது
சிலுவையில் வழிந்த பச்சைக்குருதியை
நீர் அவர்களுக்கு வழங்கியிருக்கக் கூடாது
பிறகுதானே
இன்னுமின்னும் அதிகமாகியது இரத்தவெறி

மனிதர்கள் மறந்துபோன சிரிப்பை
ஏன் விலங்குகளிடம் விட்டுச்சென்றீர்

அலைக்கழிக்கப்பட்ட ஆதாம் ஏவாளிடம்
நின் தந்தையின் வனத்திலிருந்து
சாத்தான் களவாடிக் கொடுத்த கனியில்
உமது பற்களுமிருந்தனவாம்
பார்த்தீரா
காடுகளுக்கிடையில் மூடுண்ட
சரித்திரங்களிலெல்லாம் காய மறுக்கும்
உமது குருதியை

யேசுவே
மனிதர்களேயில்லாத உலகில்
தீர்க்கதரிசனமிக்க
உமது விழிகளை ஏன் ஒளியாக்கினீர்
என்றுமே வற்றாத
கண்ணீர் நதிகளை ஏன் பெருகவிட்டீர்

எதுவுமே வேண்டாம்
யேசுவே
உமது பாவங்களைக் கழுவக்கூட
ஒரு நதியையெனினும்
அவர்கள் விட்டு வைத்திருக்கிறார்களா

மனிதர்களின் மொத்தப் பாவங்களையும்
முதுகுவளைய ஏன் சுமந்தீர்
பாவங்கள் முடிந்து போயினவா
உம்மைச் சூழ்ந்து துரத்துகிற
மனிதர்களின் பாவவினைகளிலிருந்து
நீர் ஒருபோதும்
தப்பிச் செல்லவே முடியாது