27 ஆகஸ்ட், 2008

காற்றில் அலைகிற மரணம்

சித்தாந்தன்
........................................

யாரோ துப்பிய எச்சிலை
வாங்கிக் கொண்டது என்முகம்
காற்றின் திசைக்கு வளைந்து
கைகள் சோர்ந்து தெருவில் நடக்கும் போதில்
வலமாய் வருபவனின் காலடி ஓசை
நெஞ்சை மிதிக்கிறது
இடமாய் எதிர்ப்படுபவனின் பார்வை
பீதியை வளர்க்கிறது
வலமும் இடமும் விலக்கி
நடுத்தெருவில் நடக்கையில்
பின்னும் முன்னுமாக
இரைச்சலிடும் வாகனங்களுக்கிடையில்
பரிதவிப்பின் உச்சத்தில் நசிபடும் உயிர்

மரணத்தின் அச்சமூட்டலில் இருந்து
தப்பமுடியாத் தெருவில்
தினமும் நடக்கவேண்டியிருக்கிறது
பிறகு
எப்படிக் கேட்க முடியும்
சளிகாறி முகத்தில் துப்பியவனிடம்
ஓரமாய்த் துப்பினால் என்னவென