18 ஆகஸ்ட், 2008

குரோதத்தின் கத்தியோடு நாம் பகிர்ந்து கொண்ட இரவு

சித்தாந்தன்
.....................................................................................

மறுதலிப்பின் மறுநாழிகையில்
உடைந்துகிடந்தது பூச்சாடி
நீ பூக்களின் கனவுகளை
சேகரித்துக்கொண்டிருந்தாய்
உள்ளங்கையினுள் மறைந்துகிடந்தது
குரோதத்தின் கத்தி
எனினும்
புன்னகைக்கும் குழந்தையின் முகத்தை
பொருத்தியிருந்தாய்
இந்த இரவு முழுதும் அந்தரிக்கும்
நிலவு பற்றியஅனுதாபச் சம்பாசனையை
நான் தொடங்கினேன்
காற்றின் குறுக்கு வெட்டு முகத்தில்
தலைசாய்த்துக் கிடந்த நீ
புன்னகையின் விரும்பப்படாத பக்கங்களை
எனக்குக் காட்டினாய்;

வெறுமையும் தனிமையும் உறைபனியாயின
எம் கால்களின் கீழே விழுந்திருந்த
மரங்களின் நிழல்கள் பாறைகளாயின
தொலைவில்
கடலின் அலைமடிப்புக்களில்;
மீளவும் இசைக்க முடியாத கீதமாய்
அலையத்தொடங்கியிருந்தோம்
நீ உனது கத்தியை
என் உள்ளங்கையினுள் திணித்தாய்
அது குரோதத்தின்
விழி சிவந்த பசியை ஊட்டியது
ஆகாயமோ
பறவையின் சிறகளவு குறுகியது
தொன்மங்களின் வனதேவதைகள்
கடவுளரின் தூதுவர்கள்
சாபங்களின் துர்மோகினிகள் எல்லாம் பார்த்திருக்க
ஒரு இடையனின் கைத்தடியளவிலான இரவை
நாங்கள் பகிர்ந்து கொண்டோம்

குரோதத்தின் கத்தி
தொலைந்துபோன அந்தக்கணம்
உடைந்த பூச்சாடியின் சிதறல்களுக்குள்
வெள்ளியாய் மினுமினுப்புடன்
ஏதோ ஊர்ந்துகொண்டிருந்தது

25.07.2008