மண்சிலைகளை உடைத்துக்கொண்டிருக்கிறாய்
சித்தாந்தன்
பிரதிபலிப்புக்களின் கூடமான கலைவெளியில்
இப்போது நீ
யாரின் சிலையை உடைத்துக் கொண்டிருக்கிறாய்
சிறகுடைந்த தும்பியொன்றின்
அவலம் மிகும் குரல்
பெயர்ந்தலையும் மரங்களின் கீதமாய்
இன்னும் கேட்கின்றது
நீ மண்சிலைகளை
உடைத்துக் கொண்டேயிருக்கிறாய்
காலபேதம் மறந்த உன்கைகளில்
பிசுபிசுக்கும் இரத்தம்
எனது மண்சிலையினதாய் இருக்கலாமென
அஞ்சுகின்றேன்
சற்றும் அயராத உனதுடலில்
வழியும் வியர்வை
ஒரு நதியாக ஊரத்தொடங்கியிருக்கின்றது
மங்கியுதிரும் பொழுதில்
நீ இப்போது உடைக்கின்ற சிலை உன்னுடையது
பிசுபிசுக்கும் இரத்தமும் உன்னுடையது
ஆனாலும்
கதறியழுதபடி உடைத்தபடியிருக்கிறாய்
கால்களின் கீழ்
உதிர்ந்திருக்கும் உனதுடலின் மண்துகழ்களை
அள்ளிச் செல்லும் யாரோ ஒருவன்
செய்யத் தொடங்கியிருக்கின்றான்
யாரோ எவரினதோ பிரதிபலிப்பான
மண்சிலையை
0 comments:
கருத்துரையிடுக