13 ஜூலை, 2010

அம்ருதா வரைந்த சிங்கங்களின் புனைவுருக்கள்


சித்தாந்தன்

நீளமான இரவின் மையத்தில் தலை நீட்டிப்
படுத்திருக்கும் சிங்கங்களைத்
தன் பாலியப் பருவத்திலிருந்து
அம்ருதா வரைந்திருக்கிறாள்

அம்ருதா தன் சிங்கங்களிற்கு
குறிகளை வரைவதில்லை

முன்பனிக் காலத்தில் அவள் வரைந்த
எண்ணற்ற சிங்கங்களும்
புணர்ச்சியைக் கண்டு முகம் சுழிப்பவை

அவளின் நூறாவது சிங்கம்
குறியை வரையக் கேட்டு அடம்பிடித்தபோது
இருநூறாவது தடவை வரைவதற்கிடையில்
குறியை வரையும் நுட்பங்களைக்
கற்று முடிப்பதாகக் கூறினாள்

அம்ருதாவின் வனத்தில்
சிங்கங்களின் கர்ச்சனைகளில்லை
வனத்தின் புதிரும் அடர்வதில்லை

வனங்களைப் புறக்கணிக்கும் சிங்கங்கள்
அவளுக்கு நண்பர்களாயுள்ளன

தன் சூட்சும புத்தியால்
சிங்கங்களின் நகங்களை வெட்டிவிடுகிறாள்
பற்களை பிடுங்கிவிடுகிறாள்

அவள் வனங்களை விட்டு வெளியேறிய
சிங்கங்களின் இராணியாகத் தன்னைப்
பிரகடனப்படுத்தியபடியிருக்கிறாள்

விழிமுட்டும் தூக்கத்தை
அநேகமும் தூங்கியே கழிக்குமவள்
தான் சிங்கங்களை வரைந்த வரைவேட்டை
தலையணைக்கடியில் பத்திரப்படுத்தியிருக்கிறாள்

அம்ருதாவின்
மிருதுவான மூச்சொலியில் தம் பொழுதுகளைத்
தூங்கிக் கழிக்கின்றன சிங்கங்கள்