05 ஜூலை, 2010

பெருங்கோயிற் சிதைந்த சிற்பத்தின் வரைபடம்

சித்தாந்தன்

ஒளிக்குப் புறம்பாக
கட்டி முடிக்கப்பட்ட மண்டபத்தை
சாத்திக் கொண்டிருக்கிறான்
இரவின் சூத்திரதாரி

மண்ணகழ்ந்து வெளியெடுத்த
பெருங்கோயிற் சிதைந்த சிற்பம்
அதன் மூலையில்
சிதிலங்களாகக் குவிக்கப்பட்டிருக்கிறது

முரண்கள் விருட்சங்களாய்
கிளை விரிக்கையில்
மண்டபச் சுவர்களில் மோதிக்
கலைகின்றன புறாக்கள்

மாமிசம் நாறும் வெளியில்
விக்கிரகப் புனைவு விதிகளைக்
கட்டவிழ்க்கிறான் சிற்பி

எல்லாச் சிலைகளிலும்
மிருகங்கள் விழித்துக் கிடக்கின்றன

மந்திரங்களால் ஆக்கப்பட்ட
பெருங்கோயில்
புதையுண்ட காலச்சரிவில்
நிரைநிரையாக முளைக்கின்றன
புத்தம் புதிய விக்கிரகங்கள்

பாதி விழி மூடிய விக்கிரகங்களில்
சாவைச் சூடிய மகா வாக்கியங்கள்

எல்லாக் கதவுகளையும்
சாத்திவிடுங்கள்
புலன் மேய வந்திருக்கிறது
கற்களாலாய காலம்

பெருங்கோயில்
புதையுண்ட மணற்கரையில்
ஓயாப் பெருங்குரலில்
யாரோ கதறியழுகிறார்கள்

நிர்க்கதியாக்கப்பட்ட
கடைசி மனிதனின் குரலாக அதிருக்கலாம்

நன்றி- மறுபாதி (சித்திரை-ஆனி,2010)