18 ஜூலை, 2024

மு. தளையசிங்கம் கவிதைகள்.

சித்தாந்தன் 

ளையசிங்கம். கட்டற்ற கலை இலக்கியம் குறித்துச் சிந்தித்த தமிழ்ச்சூழலின் முன்னோடி. மையத்தை மட்டுமே படைப்பின் இயங்குநிலைத் தளமாகக் கொள்ளாது படைப்பைத் தளமாற்றத்துக்குள்ளாக்கியவர். வடிவமற்ற பிரதி குறித்து தமிழ் இலக்கியப் பரப்பில் பேசியவரும் அவரே.

தளையசிங்கத்தின் படைப்புக்கள் அவர் உருவாக்கிய கோட்பாட்டுத் தளத்தில் இயங்குபவை. மறுவளமாகக் கூறினால் அவரால் உருவாக்கப்பட்ட கோட்பாட்டை பிரதியுருச் செய்பவை.

மரபுவழிப்பட்ட சிந்தனை முறைமைகளிலிருந்து மாறுபாடான சிந்தனைத் தளத்தினை அவர் உருவாக்கியிருக்கின்றார். அவரது தத்துவார்த்தப் பார்வை, ஏற்கனவே மையமாக கட்டிறுக்கத் தனத்தோடு அமைந்தவை மீது கேள்விகளை எழுப்பியதன் வழியாக உருவானவை.

தமிழ்ச்சூழலில், கோட்பாடுகளை மனனம் செய்து அவற்றை எந்தவிதமான பகுப்பாய்வுமின்றி விஞ்ஞான வழிமுறைகளின்றியும் ஒப்பிவித்தவர்களிடமிருந்து மாறுபாடாக சுயசிந்தனையுடைய அபூர்வமாக தளையசிங்கம் திகழ்ந்தார்.

இந்த முற்குறிப்போடே நான் தளையசிங்கத்தின் கவிதைகளுக்குள் நுழைகின்றேன். 

தளையசிங்கத்தின் கவிதைகளாக இரவுகள்,போர்ப்பறை,ஒளிபடைத்த கண்ணினாய், ‘நான்’ நாகரிகத்தின் அழிவும் ‘நாம்; நாகரிகத்தின் எழுச்சியும், வந்துவிட்டது சத்திய யுகம் விழித்தெழுங்கள்,விசாரம்,சும்மா இரு போன்ற கவிதைகளும் நான்- அதன் பரிமாணங்கள் என்ற கட்டுரையில் சில கவிதைகளும் கிடைக்கின்றன.

 ‘மெய்யுள்’ என்னும் கலை இலக்கியம் சார்ந்த கோட்பாட்டினை கொண்ட தளையசிங்கம், தன் படைப்புக்களையும் அது சார்ந்த அடிப்படையிலேயே உருவாக்கியிருக்கின்றார். மெய்யுளின் அடிப்படைக் குணாம்சம் சத்தியம்;. சத்தியத்தை உள்ளீடாகக் கொண்ட படைப்பாக்க அல்லது கலையாக்கச் செயன்முறை குறித்தே அவர் சிந்தித்தார். வடிவ நீக்கம் அல்லது வடிவத் தகரப்பு பற்றிப் பேசுகின்ற தளையசிங்கம் படைப்பானது வடிவத்தை மீறிச் செல்வதற்கான வழியாக ‘சத்தியம்’ என்பதையே முன்வைக்கின்றார்.

‘சத்தியத்தை உள்ளீடாகக்  கொண்ட படைப்பு வடிவங்களை மீறிச் செல்லும் எனவும் ஏற்கனவேயுள்ள இலக்கியவடிவங்களை தகர்க்கும் என தளையசிங்கம் கூறுகின்றார். மெய்யுள் பற்றி அவர் குறிப்பிடும் போது

“மெய்யுள், கற்பனை கோலங்கள் சகலவற்றையும் குலைத்துக் கொண்டு அவற்றின் தளங்களைத் தகர்த்துக் கொண்டு நித்திய சத்தியத்தை நோக்கிய நேரடி அனுபவரீதியான ஊடுருவலுக்குரிய கலை, இலக்கிய உருவமாகும். அதன் உள்ளளும் புறமும், உருவமும் உள்ளடக்கமும் மெய்யாகவே இருக்கும்” என்கின்றார்.

கற்பனையற்ற நித்திய சத்தியத்தை நோக்கிய கலை இலக்கியம் குறித்தே தளையசிங்கம் சிந்தித்தார். உருவமும் உள்ளடக்கமுமாக மெய்யே இருக்குமென அவர் அழுத்தமாகக் கூறுகின்றார்.

உருவமே உள்ளடக்கத்தை தீர்மானிக்கின்றது. உள்ளடக்கமே உருவத்தை தீர்மானிக்கிறது என்ற நவீனத்துவ மோதல்களுக்கிடையில் தளையசிங்கம் கூறுவது வித்தியாசமானது. அவர் உருவத்தையோ உள்ளடக்கத்தையோ பிரக்ஞை கொள்ளவில்லை. “கலையை அழிக்கும் கலை” என தனது கலை இலக்கியக் கோட்பாட்டை அடையாளப்படுத்துகின்றார். கலையின், இலக்கியத்தின் அடிப்படைப் பண்பாக சத்தியத்தை கொள்வதுதான் எனின் கலையில் இலக்கியத்தில் படைப்பாக்க உத்திகள் என எவற்றைக் கொள்வது? அவர் கூறுவது போல நேரடி அனுபவம் மட்டும் படைப்பாகுமா?

அவரது பிற இலக்கியங்கள் தருகின்ற -சிறுகதைகள். நாவல்கள்- தருகின்ற அனுபவத்தை கவிதைகள் தரவில்லை. அவர் கவிதைகளை தன் கோட்பாடுகளைக் காவிச் செல்லுகின்ற கருவியாகவே கருதினார். உபநிடத மகாவாக்கியங்கள் போல அவை கருத்துக்களைச் சொல்லுகின்ற பணியைத்தான் செய்கின்றன. உரையாடல்களின் வழி தன் கருத்துக்களை, தன் சிந்தனைகளை எடுத்துச் செல்கின்றார். தானே கேள்வி கேட்பவனாகவும் தானே விடை பகர்பவனாகவும் இருந்து தன் கருத்துத்தளம் பற்றி விவாதிக்கின்றார். கலைஞனின் தாகத்தில் சுழல் நான்கு பகுதியில் வரும் உரையாடல் குரு- சீட உரையாடல் போலவே காணப்படுகின்றது. 

தளையசிங்கத்தின் கவிதைகள், கவிதைகள் தரக்கூடிய  கவித்துவ அனுபவத்தை தரவில்லை. அறுபதுகளின் கவிதைப் போக்கிலிருந்து மாறுபட்ட தனியனாக அவர் காணப்படுகின்றார். வலிந்து கருத்தைத் திணிக்கும் ஒருவகை செய் நேர்த்தியை அவரது கவிதைகள் கொண்டிருக்கின்றன.

நவீன இலக்கியம் குறித்து சாத்தர் முன்வைக்கும் கருத்தியலோடு தளையசிங்கத்தின் கருத்தியலையும் இணைத்துப் பார்க்க முடியும்.

“நவீன இலக்கியம் உயிர்த்திருக்க வேண்டுமானால் அது அழகியலையும் மொழிவிளையாட்டையும் புறக்கணித்துவிட்டு சமூக அரசியல் நிலைப்பாட்டுடன் இருக்க வேண்டும்” 

எனக் கூறும் சாத்தர், எழுத்தாளன் பற்றிக் குறிப்பிடும் போது 

“எழுத்தாளன் என்ற முறையில் நமது கடமை உலகை பிரதிநிதித்துவப்படுத்தலும் அதற்கான சாட்சிகளாக இருத்தலுமாகும்’ என்கின்றார்.

தளையசிங்கம், மெய்யுள் இலக்கிய உருவம் பற்றிக் கூறும் போது,

“ மெய்யுள் கற்பனைக் கோலங்கள் சகலவற்றையும் குலைத்துக் கொண்டு அவற்றின் தளங்களைத் தகர்த்துக் கொண்டு நித்திய சத்தியத்தை நோக்கிய நேரடி அனுபவரீதியான ஊடுருவலுக்குரிய கலை இலக்கிய வடிவமாகும்” என்கின்றார்.

பூரண இலக்கியத்தை விரும்புபவன் பற்றி தளையசிங்கம் குறிப்பிடும் போது,

“பூரண இலக்கிய வளர்ச்சி சமூகத்தின் சகல துறைகளின் வளர்ச்சியாகவும் பரிணமிக்கும். அதனால் இன்றைய எழுத்தாளன் அரசியலோடு மிக நெருக்கமான தொடர்புடையவனாக இருக்க வேண்டும்” என்கின்றார்.

சாத்தரிடமிருந்து தளையசிங்கம் விலகுமிடம் “மெய்யுள்” என்னும் கோட்பாட்டுத் தளத்தில்த்தான். சாத்தர்  நவீன இலக்கியத்தில், இலக்கியவாதிகளிடம் காணப்படும் குறைகளைப் பற்றியே முன்வைத்தார். ஆனால் தளையசிங்கம் நவீன இலக்கியத்தைக் கடந்த கோட்பாட்டு உருவாக்கத்தை நிகழ்த்தினார்.

“நவீனத்துவத்திலிருந்து விலகிய தளையசிங்கம் அதற்கு அடுத்தகட்டத்துக்கு தன் சொந்த உள்ளுணர்வையும் தருக்கத்தையும் துணைகொண்டு நகர முயன்றார். அவரது முதன்மையான பங்களிப்புக்கள் இந்தத் தளத்திலேயே அமைந்தன” என ஜெயமோகன் குறிப்பிடுவது தளையசிங்கத்தின் சுயசிந்தனையின் வழிப்பட்ட கோட்பாட்டு உருவாக்கத்தை அடிப்படையாகக் கொண்டேயாகும்.

தளையசிங்கத்தின் ‘போர்ப்பறை’- ஐந்து பகுதிகளையுடைய நீள் கவிதை. தொன்மங்களின் வழி சத்தியத்தை முன்மொழியும் கவிதை. இதிகாச பாத்திரமான வீபூசனனுடனாக உரையாடல் முறைமையில் அமைந்த கவிதை. தளையசிங்கத்தின் சத்தியத்தை நோக்கிய நகர்வை வெளிப்படுத்தும் கவிதையிது. இராமன், சிறை வைக்கப்பட்டிருக்கும் சீதையை மீட்க இலங்கை வருகின்றான். விபூசனன் இராமனின் பக்கமே சத்தியம் உள்ளது என அவன் பக்கம் சார்கின்றான். இந்தக் கவிதையில் விபூசனனின் குரல் தளையசிங்கத்தின் ஆன்மாவின் குரலாக ஒலிக்கின்றது. புறவுலக இச்சைகளால் மூடுண்டு கிடக்கும் மனதை பேருண்மை நோக்கி அழைத்துச் செல்லும் குரல் அது.

கவிதையில் அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டுள்ளதை விபூசனன் கூறுகின்றான். கவிதை சொல்லி சீதையை அசோகவனத்தில் தேடுகின்றான். அவனது கண்ணுக்கு சீதை புலப்படவில்லை.

“அழகு இடைகள், அழைப்பு விடுக்கும் அசைவுகள்

கொங்கை தாங்கிகளுக்குள்

தொங்கிவிழும் கோபுரங்கள்

வெளிறிய தோலை மறைக்க எழும் பூச்சுக்கள்

ஊனில் உயிர் வாழும் ஒட்டுண்ணி ஆசைகள்

மனதை மறைக்கும் மாயப்படைகள்

அத்தனைக்கு அப்பாலும் 

ஊடுருவ முடிந்தும்

அவளை நான் காணவில்லை” என

இச்சைகளால் மனது அலைக்கழிக்கப்படுகிறது. சீதையை பேருண்மை எனக் கொள்வதும் அதை தரிசிப்பதற்கு புறவுலக இச்சைகள் தடையாக அமைவதையும் கவிதை வெளிப்படுத்துகின்றது.

போர்ப்பறை என்பதே சத்தியத்தின் குரலாகவே உருவகம் கொள்ளுகின்றது. இச்சைகளை வென்று சத்தியத்தை அடைவதற்கான பேரொலி அது. பெருங்குரல் அது.

“பூச்சை கழித்து விபூசனன் 

என் போக்கை மாற்றிவிட்டான்

நானும் நகர்ந்தேன்

எனக்குள்ளே இடமாற்றம்”

என தன் சத்தியத்தை நோக்கிய நகர்வை தளையசிங்கம் எழுதுகின்றார். இந்த நகர்வே அவரது எல்லா கவிதைகளினதும் மையமாகத் தொழிற்படுகின்றது.

“கற்பனையில் கனவில் தூக்கத்தில்

எதிலும் உன்னால் அதே சமயம்

விழித்திருக்க முடிகிறதா?

அப்படியென்றால், நீ சத்தியத்தைத் 

தரிசிக்கின்றாய்.

(ஒளிபடைத்த கண்ணினாய்)

கற்பனையில், கனவில் நித்திரையில் - அத்தனையிலும்

நித்திய சத்திய உணர்வு நுழைகிறது

(நான் நாகரிகத்தின் அழிவும் நாம் நாகரிகத்தின் எழுச்சியும்)

சத்திய யுக எழுச்சிக்காய் தயார்ப்படுங்கள்,

பேர்மனிதப் பாதையிலே புறப்படுங்கள்

(வந்துவிட்டது சத்திய யுகம் விழித்தெழுங்கள்)

என எல்லாக் கவிதைகளிலும் சத்தியத்தை மையப்படுத்திய குரலே ஒலிக்கின்றது. விசாரம் கவிதை 

“சவாரி வண்டியின் சதங்கைச் சத்தம்!

பின்னால் ஓடும் சிறுவர் கூத்து!

என்ன நடக்குது வெளியே?

இழவு,

எதற்கு அந்தக் கவலை?

உள்ளத்துப் பறை

ஓசை எழுப்புகுதே, கேட்கிறதா?

உண்மை நாகேனம்

ஊதுதே கீதம் கேட்கிறதா?

அவை போதாவா?

கேள், அவை கேட்பதை 

வெளியே எதற்கு விசாரம்?

புறத்தே மனதை அலைக்கழிய விடாது அகத்தை உற்றுக்கேள் , சத்தியத்தின் குரலை உணர் என கவிதை சொல்கின்றது.

கலை இலக்கியங்கள் நேரடி அனுபவத்தை வெளிப்படுத்துபவையாக இருக்க வேண்டும் எனக் கூறும் தளையசிங்கம், இந்தக் கவிதையில் தொன்மங்களினூடாக கவிதை சொல்லும் முறையைப் பயன்படுத்துகின்றார். கலை, இலக்கியங்களில் அனுபவத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு உத்திமுறைமையாக தொன்மங்களின் பயன்பாடு காணப்படுகின்றது. அனுபவத்தைக் கலையாக்குகையில் அதன் அழகியல் தனத்துக்காகவும் கருத்துப் புலப்பாட்டுக்காகவும் தொன்மங்களைப் பயன்படுத்துதல் கலை இலக்கியச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருவதுதான். தளையசி;ங்கமும் தவிர்க்க முடியாது இந்தப் பொதுப்போக்கோடு இணைந்து கொள்கின்றார். இது நேரடி அனுபவம் பற்றிய கருத்தாக்கத்திற்கு எதிரானதாகவே காணப்படுகின்றது.

சத்தியம் பற்றிய தேடலும் அதற்கான விசாரத்தையும் மையமாகக் கொண்டு இயங்குவதால் தளையசிங்கத்தின் கவிதைகளின் மொழி தத்துவச் சாயல் நிரம்பிய மொழியாகக் காணப்படுகின்றது. மொழியை தருக்கப்பண்பு கொண்ட அறிவின் மொழியாகத் தன் கவிதைகளில் தளையசிங்கம் பயன்படுத்தியுள்ளார். கலைஞனின் தாகத்தின் ‘சுழல் நான்கு’ பகுதியில் வரும் நல்லசிவத்தின் பதில்கள் தருக்கப்பண்பு மிக்க அறிவின் மொழியாக வெளிப்படுகின்றன.

“பரவசம்,

சடத்தின் இறந்த நிலையல்ல

அது இயக்கத்தின் உச்சநிலை.

உச்சக் கருத்துநிலை.


இறந்த சடநிலை கூட

உச்சக் கருத்துநிலையின் 

உறங்கு நிலையேதான்

பரவசத்தின் இறங்கிய நிலை,

வீழ்ச்சி.”

இவ்வாறாக மொழியை அறிவின் தளத்தில் தருக்கப் பண்புகளோடு பயன்படுத்துகின்றார். அவர் கவிதைகளில் முன்வைக்கும் பொருண்மை சாதாரண காட்சிவழிப்பட்ட பொருண்மைகளல்ல. மாறாக கருத்துநிலைப் பண்புகளை அதிதமும் உள்ளடக்கிய பொருண்மை சார்ந்தவை. அதனால் அவரது மொழிதலிலும் அறிவின் கூறுகள் நிரம்பிய தருக்கப்பண்பே அதிகமும் காணப்படுகின்றது. அவர் ஞானம் நிரம்பிய மனிதர்களைப் பற்றியே சிந்தித்தார் அதனாலையே தன் கவிதைகளை ஞானத் தேடலுக்கான வழியாக எழுதியிருக்கின்றார்.

‘ஒளிபடைத்த கண்ணினாய்’ என்ற கவிதையின் முற்குறிப்பு இவ்வாறு அமைகின்றது.

“இதுகாலவரை ஒரு சில தனிப்பட்ட ஞானிகள் மட்டும் சத்திய எழுச்சி பெற்ற ஞானிகளாய் அங்குமிங்குமாய் இருந்தனர். இனி ஒரு முழுச் சமூகமுமே ஞான சமூகமாக வேண்டும் . ஒரு முழு இனமுமே ஞான இனமாக வேண்டும். ஒரு முழு நாடுமே ஞான நாடாக வேண்டும். முழு உலகமுமே ஞான பூமியாக வேண்டும்”

இந்த முற்குறிப்பு தளையசிங்கத்தின் அதீத சிந்தனையாகவே படுகின்றது. யதார்த்த உலகப் போக்கை அவர் மறுதலையாக பார்க்கத்தலைப்படுகின்றார்.

முழு சமூகத்தையும் உலகத்தையும் ஞானத்தின் தரிசனமாக அவர் காண விழைகின்றார். ஓளி படைத்த கண்ணினாய் என அவர் சுட்டுவது முழு உலக மனிதரையுமே.

“கற்பனையில் நிசத்தையும்

தூக்கத்தில் விழிப்பையும்

தன்னுள் அதுவையும்

காணும் நீயே 

சகலத்திலும் சத்தியத்தை எழுப்பும் பெரு மனிதன் ஆவாய்

பொய்யை அழிக்கும் போர்வீரன் நீயே” என்கின்றார்.

இதை ஒத்த தரிசனத்தை பாரதியாரின் கவிதைகளிலும் காண முடிகின்றது. அவரது பிற கவிதைகளில் காணும் எளிமையான மொழிதலை வசன கவிதைகளில் காணமுடிவதில்லை. அக் கவிதைகளில் முன்மொழியும் விடயங்கள் தத்துவார்த்த தன்மை கொண்டவை. ‘ஞாயிறு’ கவிதை

“நீ ஒளி. நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி

மின்னல், இரத்தினம் கனல் தீக் கொழுந்து

இவையெல்லாம் நினது நிகழ்ச்சி

கண் நினது வீடு

புகழ் வீரம் - இவை நினது லீலை

அறிவு நின் குறி அறிவின் குறி நீ

நீ சுடுகிறாய் வாழ்க நீ காட்டுகின்றாய் வாழ்க

உயிர் தருகின்றாய் உடல் தருகின்றாய்

வளர்க்கின்றாய் மாய்க்கின்றாய்

நீர் தருகின்றாய் காற்றை வீசுகின்றாய் வாழ்க.

என அமைகின்றது. இத்தகைய கவிதைகள் அறிவின் வயப்பட்டவை. தளையசிங்கத்தின் கவிதைகள் யாவுமே இத்தகைய மொழிதல் முறைகொண்டவையே.

உலகை புரிந்து கொள்ளல் என்பதில் பாரதிக்கும் தளையசிங்கத்துக்கும் ஒருமை நிலை காணப்படுகின்றது. ஆனால் பாரதியாரின் பார்வை வைதீக வயப்பட்ட தரிசனத்தின் மூலமாக கிட்டியவை. பாரதி நடைமுறை இயல்புகளுடன் அவற்றைப் பொருத்திப்பார்த்து கீழ்மைகளை வெளிச்சமிட்டுக் காட்டினார். ஆனால் தளையசிங்கத்தின் உலக தரிசனம் என்பதுநடைமுறை அனுபவங்கள் மூலம் கிட்டியவற்றிலிருந்து தத்துவநிலைப்பட்ட தரிசனமாக விரிவு காண்பது. அவரது ஞான பூமி பற்றிய சிந்தனையே இந்த அடிப்படையிலானதுதான்.

“பாரதியின் கருத்துலகத்தை விடவும் தளையசிங்கத்தி;ன் கருத்துலகம் முழுமையானது. மற்றொரு விதத்தில் சொன்னால் பாரதியின் சிந்தனையைத் தன் காலத்திற்குக் கொண்டுவந்து, இடைக்காலச் சரித்திரத்திற்கும் எதிர்வினை தந்து, இடைவெளிகளை அடைத்து, முழுமைப்படுத்த முயன்றார் என்று சொல்லலாம்” என சுந்தரராமசாமி குறிப்பிடுவது இங்கு மனம் கொள்ளத்தக்கது.

மெய்யுள் “இதுவரையுள்ள கலை இலக்கிங்களை அழிக்கும் கலை, இலக்கியமாகவும் இருக்கும்” என தளையசிங்கம் நம்பிக்கை கொள்கின்றார்.

அவரது ‘நான் நாகரிகத்தின் அழிவும் நாம் நாகரிகத்தின் எழுச்சியும்’ கவிதையில் 

“அரசியல், சமயம், விஞ்ஞானம், இலக்கியம்

தத்துவம், சரித்திரம், கலை, காட்சி, பொருளாதாரம்

சமூகம் - நான் நிறுவிய அத்தனை வரம்புகளையும் 

சத்தியப் பிரவாகம் தகர்க்கிறது:

சகலத்திலும் நான் சரணாகதி”  என எழுதுகின்றார்.

‘நான்’ என்பதை அதிகாரத்தின் வடிவமாகவே அரசியல், சமயம், விஞ்ஞானம், இலக்கியம், தத்துவம், சரித்திரம், கலை, காட்சி, பொருளாதாரம், சமுகம் என அனைத்திலும் காண்கின்றார்.

‘சத்தியம்’ என்பதே அனைத்து அதிகார வரம்புகளையும் உடைக்கும் என அவர் நம்புகின்றார்.

‘நான்’ என்பதை ஆணவத்தின் குணாம்சமாக சமயக் கோட்பாடுகள் கூறுகின்றன. ‘நான்’ என்பதை களைதல் தொடர்பாக சைவசித்தாந்தமும் பேசுகின்றது. பதி,பசு, பாசம் என்பதில் பாசத்தின் கூறுகளில் ஒன்றாக ஆணவம் அமைகின்றது. ஆன்மாவை கட்டும் கட்டாக அல்லது தளையாக அதைச் சொல்கின்றது. ஒரு வகையில் நான் என்பது அதிகாரத்தின் குரலாகத்தான் சைவசித்தாந்தத்திலும் ஒலிக்கின்றது.

மனித நாகரிகத்தின் அனைத்து நிலைகளும் “நான்” என்ற அதிகாரம் வளர்த்தவையே என்கிறார் தளையசிங்கம். 

நான் வளர்த்த கலாச்சாரம் கரைகிறது,

நான் வளர்த்த நாகரிகம் அழிகிறது,

நான் வளர்த்த தத்துவங்கள் சிதைகின்றன:

நான் வளர்த்த சகலமுமே நானை வளர்த்தவையே-

அதனால் நானை வளர்த்தவை சிதைய 

நானும் அழிகின்(றேன்)றது:

பால் இச்சை, பண ஆசை, ஆளுமைப் போட்டி

அத்தனை சிற்றின்பப் படுக்கைகளும் அதனோடு

அழிகின்றன”

என ‘நான்’ வளர்த்த நாகரிகத்தின் அழிவு பற்றிக்; கூறுகின்றார். நான் என்பதை விடுத்து நாம் என்பது பற்றிப் பேசுவது பன்மைத் தன்மையை பேசுவதுதான்.

நான் - அதன் பல்பரிமாணங்கள் கட்டுரையில் வரும் ‘அதுவே நீ’ எனத் தொடங்கும் கவிதையில் ‘நான்’ சிறு நான் என்றும் நான்- நான் என்பதை ‘நான்’ என்பதை கடந்த நிலையாகவும் குறிப்பிடுகின்றார். அதையே விடுதலைக்குரிய வழியாகக் காட்டுகின்றார்.

“நான் நான் என்ற நிர்வாண விடுதலை எல்லாவற்றுக்குமுரிய ஒரே ஒரு அடித்தளமாதலால் அந்த நிலையில் நிற்பவன் முழுப்பிரபஞ்சத்தையும் தன்னில் கண்டவனாகவும் முழுப்பிரபஞ்சத்துக்கும் அப்பாற்பட்டவனாகவும் நிற்பான். அதனால் அவனே பூரண செயல்வீரனாகவும் இருப்பான்” என்கின்றார்.ஆனால் தளையசிங்கத்தின் ‘சும்மா இரு’ என்ற கவிதை தன் அடையாளங் குறித்த ‘நான்’ பற்றிப் பேசுகின்றது.

அவிழ்க்க முடியாத சட்டையாக ‘நான்’ என்ற தன்மைச் சுட்டு அவரைத் தொடர்கிறது. நான் என்பதை களைதல் என அவர் பேசுவது சாத்தியமற்றுப் போகிறது.

“சுழலின் மையம் நான்

புயலின் அமைதி நான் எனத் தொடங்கும் கவிதை

“அழுகை இல்லை எனக்கு

அழிவும் இல்லை எனக்கு

முறிவும் கரைவும் இல்லை

கழிவும் அசைவும் இல்லை

சுழலின் மையம் நான்

புயலின் அமைதி நான்.”  என முடிகின்றது

இந்தக் கவிதையில் ஒரு அடையாளப்படுத்தலை தளையசிங்கம் செய்கின்றார். அதிகார மையங்களுக்கு எதிரான எதிர்ப்பு மனநிலையை அவர் கொண்டுவருகின்றார். தன்னை எதிர்ப்பின் பிரதான அடையாளமாக்குகின்றார். எதிர்ப்புத் தோன்றும் இடங்களிலெல்லாம் ‘நான்’ என்ற பிரக்ஞையை அழிவற்ற பேருருவாக அவர் அமைக்கின்றார். அவர் ‘நாம்’ எனக் கொண்டாடும் பேர்மனம் என்ற கருத்துநிலைக்கு இது மாறானதாக தோற்றங்கொண்டாலும் இந்த பிரக்ஞைபூர்வமான அடையாளப்படுத்தலிலிருந்துதான் தளையசிங்கத்தை விளங்கிக் கொள்ள முடியும். அவரது கோட்பாடு சார்ந்த அணுகுமுறைகள் எல்லாம் இங்கிருந்துதான் தொடங்கியிருக்கின்றன. அவர் ஒரு ‘மறுத்தோடியாக” நிலைபெறும் இடமும் இதுதான். இதனால்த்தான் அவரால் எல்லாவற்றின் மீதும் கேள்விகளையும் விமர்சனங்களையும் முன்வைக்க முடிந்திருகின்றது. சமுகத்தின் நடைமுறைகளில் காணப்படும் தாழ்நிலைகளை அவரால் எதிர்க்க முடிந்திருக்கின்றது. இதற்கு பொதுவான கவிதைப் போக்கிலிருந்து மாறுபட வேண்டிய தேவை அவருக்கு ஏற்படுகின்றது. அவரது கவிதைகள் ஒருவிதமான கோசம் நிரம்பிய தன்மையைப் பெறுவதற்கு இதுவே அடிப்படையாகின்றது. 

‘வந்துவிட்டது சத்திய யுகம் விழித்தெழுங்கள்’ என்ற கவிதை எழுச்சியின் அல்லது அறைகூவலின் வடிவமாகின்றது. தன்காலத்தின் பிரச்சினைகளை தன் கவிதைகளில் கேள்விக்குட்படுத்தும் தளையசிங்கம் இழிநிலை அம்சங்களற்ற மனித மாண்பு மிக்க ஒரு யுகத்தையே சத்தியயுகம் என கனவு காண்கின்றார். அந்த யுகத்தை வரவேற்க மனித குலத்தை தயார்ப்படுமாறு கவிதையில் கோருகின்றார். தளையசிங்கம் எதிர்பார்த்தது மானுட எழுச்சி. எனவே அதை வலியுறுத்துவதற்கு அவருக்கு எழுச்சிமிக்க குரலே அவசியமாகின்றது.

“கிணற்றடியில் 

தாழ்த்தப்பட்டவர் தவமிருப்பது சரியா?

கோயில்களில்

திருக்குலத்தாரை தள்ளிவைத்தல் முறையா?

தெருவடியில்

மனித இறைவன் பிச்சையெடுக்க

கோயில்களில் கல்லுக் கடவுளுக்கு

கற்பூரம் சாம்பிராணி பிரசாதம் படையல்

பூசை திருவிழா மின்சாரம் வாத்தியம்

தேரோட்டம் சப்பரம் ஆலவட்டம் அலங்காரம்-

ஐயோ இவை அடுக்குமா?


கணக்கெடுங்கள்!

வந்துவிட்டது சத்திய யுகம்,

விழித்தெழுங்கள் கணக்கெடுங்கள்!


மதத்தின் பெயரால் கட்டமைக்கபட்ட அனைத்து இழிநிலைகள் மீதும் அவர் கேள்விகளை எழுப்பினார். கற்பனையற்ற நேரடி அனுபவத்திலிருந்து எழுகின்ற கேள்விகள் இவை. ஒரு போராட்டக்காரனாக அவர் எதிர்கொண்ட அனுபவத்தின் திரண்ட உருவமாகவே இந்தக் கேள்விகள் அமைகின்றன. சமூக இழிநிலைகளே அவரை சத்திய யுகம் பற்றிய எண்ணத்தை உருக்கொள்ளச் செய்கிறது. அவர் மகத்தான மானுட சமூகம் பற்றிக் கனவு காண்கின்றார். அதையே சத்திய யுகம் என்கின்றார். அது அவர் எதிர்பார்க்கும் பூரண யுகம். 

‘சூரன்போர் வருகிறது’ எனத் தொடங்கும் கவிதை, தளையசிங்கத்தின் கவிதைகளில் முக்கியமான கவிதை. அவரது பிற கவிதைகளிலிருந்து எளிமையான கருத்துநிலையை உடைய கவிதை. சமூகத்தின் போலிமைகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகின்ற கவிதை. போலி மனிதர்களையும் போலிக் கருத்துநிலைகளையும் ‘சூரன்” என்னும் பொதுப் படிமமாக உருவகித்து கேள்விகளை எழுப்புகின்றார். சத்தியத்துக்கும் அநியாயத்துக்கும் இடையில் நடக்கின்ற போராக முருகனுக்கும் சூரனுக்கும் இடையில் நிகழ்ந்த போரை யதார்த்த வாழ்வின் அதர்ம அநியாயங்களோடு தொடர்புபடுத்தி எழுதியிருக்கின்றார்.

“பார் தம்பி

அவர் பிஸ்னஸ் நடத்துகின்றார்

பிஸ்னஸ் கறுப்பு

வேட்டியோ வெள்ளை

அவன் சூரன்

மகா மகா சூரன்


“நான் தொழிலாளி வர்க்கம் 

அழியப் போகிறதுஇந்த முதலாளி வர்க்கம்”

பார் தம்பி

அவன் கூட்டத்தில் பேசுகின்றான்

படுகள்ளன் அவன்

அவனே முதலாளி

‘நான்’ னின் ஏக முதலாளி”

போலி சோசலிசம் பேசுவேரின் இழிநிலைகளை கவிதை வெளிப்படுத்துகின்றது.

“பத்திரிகைச் சுதந்திரம்

படுபொய்தம்பி அது,

உன்னை ஏமாற்றும் 

இன்னோர் சுலோகம்

அவன் சூரன்

பத்திரிகைகளாலேயே 

உன் பார்வையை மறைக்கின்றான்

கடதாசிப்புலி, கடதாசிப்புலி”

என பத்திரிகைச் சுதந்திரத்தின் பேரால உண்மைகளைச் சிதைத்து பொய்களை உண்மையாக்கி வியாபாரம் நடத்துகின்ற பொறுப்பற்றதனத்தை இகழ்கின்றார்.

இந்த சமூக அக்கறையற்ற தனங்களுக்கு எதிராக போராட மக்களிடம் எழுச்சி ஏற்பட வேண்டும் என்பதையே இந்தக் கவிதையில் வெளிப்படுத்துகின்றார்.

தளையசிங்கம் ‘கூட்டு மனநிலை பற்றிச் சிந்தித்திருக்கின்றார். இதை சமூக மனமாகக் கொள்ள முடியும்.

“மெய்யுள் உருவம், ஓர் எழுத்தாளனின் வித்துவச் செருக்கு, ஆணவம் தன்னை நிறுவுவதற்காகக் கண்டுபிடித்துள்ள பம்மாத்தல்ல. இன்று பல எழுத்தாளர்கள் மிகமிகச் செயற்கையாக உருவாக்கும் கற்பனாவாத கோலங்களிலிருந்து மெய்யுள் முற்றாக மாறுபட்டது. மெய்யுள் ஒரு எழுத்தாளனின் ஆணவ அறுப்பு முயற்சியின் உருவமாகும்.”

எனவே மெய்யுள் என்கின்ற உருவம் எழுத்தாளனை சமூகப் பெறுமானமுடைய மனிதனாக்கும் உருவமாக தளையசிங்கம் முன்வைத்திருக்கின்றார். செயற்கைத்தனமான கற்பனாவாத படைப்புக்களை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படிப் பார்த்தால் மெய்யுள் என்பதுகூட அதீத கற்பனை உருவம் என்றேபடும். உருவமும் உள்ளடக்கமும் சத்தியமாகவே இருக்கும் என்றால் அவர் வடிவமைக்கும் உருவம் எது? அவரது படைப்புக்களை பொதுவான இலக்கிய வடிவங்களுக்குள்த்தான் வைத்து நோக்குகின்றோம். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, குறுநாவல் என நிலைபெற்ற வடிவங்களுக்குள்ளேயே வைத்து நோக்குகின்றோம். ஆனால் அவர் கூறிய வடிவத் தகர்ப்பு என்பது முக்கியமானது, அவர் அதற்கான சாத்தியங்களை தன் படைப்புக்களில் திறக்க முயன்றிருக்கின்றார்;. அவருடைய ‘போர்ப்பறை’ கவிதை அத்தகைய முயற்சிதான். இந்த வடிவத் தகர்ப்பே நிலாந்தனின் மண்பட்டினங்களாகவும். வன்னிமாண்மியமாகவும் திரட்சிபெற்றது எனலாம். 

எழுத்தாளனை ஞானம் பெற்றவனாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்த தளையசிங்கம், பூரண இலக்கியம் பற்றிப் பேசுகின்றார். எழுத்தாளன் தான் பெற்ற, உணர்ந்த ஞானத்தை படைப்பினூடாக அனுபவமாக்க வேண்டும். அவரது பூரண இலக்கியக் கோட்பாட்டின் முன் வரைபுகள் தான் அவர் எழுதிய சொற்ப கவிதைகளும். எனவே இவற்றை கவிதைகள் என்ற சட்டகத்துக்குள் கொண்டுவருவதை விடவும் அவரது கோட்பாட்டினை பகிர்வதற்கு அவர் கையாண்ட உத்தி என்று கருதுவதே பொருத்தமாக அமையும்.

கலையை மனித இயக்கத்தின் செயன்நிலைகள் எல்லாவற்றிலும் காணும் தளையசிங்கம், இனிவரும் காலத்தில் அனைத்துமே கலைப்பெறுமானம் உடையவையாகவே இருக்கும் என்கின்றார். கலையின் மூலம் கிடைக்கும் பரவசத்தை அவர் கொண்டாடுகின்றார்.

பரவசம் என்பது,

“வீழ்ச்சியிலிருந்து 

விடுதலையைத் தருவது அறிவு

அறிவின் விரிவைப் பொறுத்தது பரவசம்” என்கின்றார்.

பூரண பரவசத்தை சகலவற்றிலும் வெளிக்காட்டுவதே பரிணாமத்தின் இலட்சியம் என்கின்றார். பரிமாணச் சுழல் பேரறிவுக்குரியது என்கின்ற தளையசிங்கம்

“அடுத்த தளத்தில்

வேலைக்கும் கலைக்கும் 

தொழிலுக்கும் தொழுகைக்கும் 

வித்தியாசமில்லை” என்கின்றார்.

அனைத்தையும் கலையாகக் காணும் இந்த ஒருமைப்பாடு பேரறிவுக்குரியது. எல்லாவற்றிலும் பரவசம் காண்பது ஞானநிலைக்குரியது. அவர் கலையையும் பிற செயல்களையும் ஞானநிலைக்குரியதாகவே கருதுகின்றார். அதனால்த்தான் ஒரு எழுத்தாளன் எதிர்காலத்தில் ஞானியாகவே இருப்பான் என்;றார்.

தளையசிங்கம், ஒரு ஞானியாகவே வாழ்ந்து மடிந்து போன மகாகலைஞன். அவரது கருத்தியலை தமிழ்சூழலில் விரிவுபடுத்துவதன் மூலம் தமிழர் சிந்தனை மரபு விரிவும் ஆழமும் பெறும். அதற்கான பணியினை முன்னெடுப்போம்.

“அழுகை இல்லை எனக்கு

அழிவும் இல்லை எனக்கு

முறிவும் கரைவும் இல்லை

கழிவும் அசைவும் இல்லை

சுழலின் மையம் நான்

புயலின் அமைதி நான்.”

00

(தூண்டி கலை இலக்கிய வட்டத்தால் நடாத்தப்பட்ட தளையசிங்கம் குறித்த ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

நன்றி- காலம்




17 ஜூலை, 2024

நின்று தூறும் மழை

 தானா விஷ்ணு கவிதைகள்

- சித்தாந்தன்

 

ரலாற்றிலிருந்து என்னத்தை கற்றுக்கொள்கின்றோம்? என்ற கேள்வி மிகச் சாதாரணமானதுதான். பலரும் பல தளங்களில் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கின்றார்கள். வரலாறே கேள்விகளுக்குரியதுதான். வரலாறு தேங்கிய குட்டையல்ல அது பெருகிக்கொண்டோடும் ஆறு. ஆக வரலாறு என்றால் என்ன என்ற கேள்வியைப் போல அதற்கான பதில் இலகுவானதில்லை.

பெரும்பாலும் வரலாறு அதிகாரத்தின் குரலாகவே ஒலிக்கின்றது. அதிகாரம் செலுத்துகின்றவர்கள் காலத்துக்குக் காலம் வெவ்வேறான முகங்களுடன் வருகின்றார்கள். வெவ்வேறு வடிவங்களில் அதிகாரத்தை தமக்கானதாக கட்டமைக்கின்றார்கள். அதிகாரமே வரலாற்றைத் தீர்மானிக்கின்றது. உலகப் பொதுவோட்டத்தில் இதுவே அதிகமும் இடம்பெறுகின்றது. அதிகாரமயப்பட்ட சிந்தனைகளின் வழி சாமானியர்கள் வழிநடத்தப்படுகின்றார்கள். இதில் மீறல்கள் நிகழுகின்றபோது சாமானியர்கள் மீது அதிகாரம் தன் வலிய கரங்களால் குரல்வளையை நசிக்கின்றது. எதிரக்குரல் கொண்டோர்கள் வரலாற்றில் துரோகிகளாக்கப்படுகின்றனர். பொதுவோட்டத்திற்கு எதிரானவர்களாகச் சித்திரிக்கப்படுகின்றார்கள்.

தோல்விகளின் மீதுதான் வென்றவர்களின் வரலாறு கட்டியெழுப்பப்படுகின்றது. தோற்றவர்களின் கண்ணீரும் அவமானங்களும் அவலங்களும் பேரதிகாரத்தினால் மறைக்கப்படுகின்றன. தானா விஷ்ணுவின் “நின்று தூறும் மழை“ கவிதைத்தொகுதி யுத்த முடிவின் அவலங்களையும் கண்ணீரையும் பேசுகின்றது. நம்பிக்கைச் சிதைவின் மனத்தின் குரலாக விஷ்ணுவின் குரல் ஒலிக்கின்றது. நம்பிக்கை என்பது கட்டமைக்கப்பட்ட ஒன்று. நுட்பமான அதிகார இழைகளால் அது வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த அதிகார மையங்களுக்கு எதிராக எவ்விதமான அதிகாரப் பின்புலங்களும் அற்றவர்களின் குரல் எழுகின்ற போது அந்தக் குரல்களின் வலிமை குறித்துக் கேள்வியெழுவது தவிர்க்க முடிவதில்லை. கருத்துநிலை சார்ந்து எழுகின்ற கேள்விகள் பன்முகத் தளத்திலான கருத்துநிலைகள் நிலவுகின்ற சமூகத்தில் ஒன்று மற்றொன்றை மறுப்பதும் ஏற்பதும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றது. இவற்றுக்கு அப்பால் உண்மை மறைந்திருக்கின்றது. முரண்நிலைகயான இந்தக் கருத்தாக்கங்கள் வரலாறு பற்றிய மீ புனைவுகளைத்தான் உற்பத்திசெய்கின்றன. உண்மையை கண்டடைதல் என்பதே பிரச்சினைக்குரியதுதான். அதுவும் சமகாலத்தின் வரலாறே பல்வேறு கருத்துநிலையாளர்களாலும் படைப்பாளர்களாலும் பலவேறு விதங்களில் வைத்துநோக்கப்படுகின்றது.

”நின்று தூறும் மழை” விஷ்ணுவின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு. ஏலவே நினைவுள் மீள்தல், கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள் என்ற இரு தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. இவற்றில் நினைவுள் மீள்தல் தொகுப்பு மட்டுமே யுத்த முடிவுக்கு முன்னர் வெளிவந்தது. மற்றையவை யுத்த முடிவுக்குப் பின் வெளிவந்தவை. கருத்தியல் ரீதியாக முன்னயதற்கும் பின்னைய இரண்டு தொகுதிகளுக்கும் இடையில் இயல்பான வேறுபாடுகள் இருக்கின்றன. விஷ்ணு வந்தடைந்திருக்கின்ற பின்னைய நிலைப்பாடு நம்பிக்கை இழத்தலின் விளைவினால் ஆனது என்று சொல்லலாம். ஆனால் இந்த மூன்று தொகுப்புக்களுமே அதிகாரநிலைகளை எதிர்ப்பவை அல்லது அவற்றின் மீது கேள்விகளை முன்வைப்பவை என்பதில்த்தான ஒருமைப்படுகின்றன.

”அலைதலையும் இழத்தலையும் வலியையும் இன்னும் சலிப்பையும் சுமந்தபடியிருக்கும் என்னைப்போலவே என்னுடைய கவிதைகளும் இருக்கின்றன. அவை தங்களுடைய  கண்ணாடியில் என்னையே பிரதிபலிக்கின்றன. நான் நானாகவும் நானில்லாமலும் வேறாகவும் அலைந்து திரிந்த காலங்கள் கவிதைகளில் மையங்கொள்கின்றன.”

விஷ்ணுவின் இந்த தற்குறிப்பே இந்தத் தொகுதிக் கவிதைகளின் சாரமாக அமைகின்றது. தான் அலைதல், தான் தானாக இல்லாமல் அலைதல் என்ற இருவேறு நிலைப்பட்ட அனுபவங்கள் தான் இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகள். தன் அனுபவக் கவிதைகளும் பிறரணுபவங்களை தன்னனுபவமாக்கலுந்தான் கவிதைகளில் நிகழ்ந்திருக்கின்றன. தன்னனுபவக் கவிதைகள் பலவும் தன்னிலைப்பட்ட கருத்தியல்களின் வழியாக இயங்குபவை. சுய பிரக்ஞை இத்தகைய கவிதைகளில் மேலோங்குவது தவிர்க்க முடியாதது. தற்சார்பு நிலையுடன் தற் கருத்தேற்றங்கள் இங்கு அதிதமும் காணப்படும். வானம்பாடிக் கவிஞர்களின் கவிதைகளில் இந்தப் பண்பு மிகுந்திருப்பதைக் காணமுடியும். தன் நிலைப்பாடுகளை பொதுமைப்படுத்த விழைகின்றபோது புற யதார்த்தத்துடன் அவை எந்த அளவுக்குப் பொருந்திப்போகக்கூடியன என்பது கேள்விக்குரியதே. நவீன கவிதை காலமாற்றத்தில் அடைந்திருக்கின்ற தளமாற்றங்களில் ஒன்றாக இந்தத் தன்னுணர்வுக் கவிதைகளில் ஏற்பட்டிருக்கின்ற தளமாற்றத்தினையும் குறிப்பிடலாம். எதற்குள்ளும் பொதுமைத்தனமான அகவிரிதலை ஏற்படுத்தக்கூடியதான நுட்பமான கூறல் முறை இத்தகைய கவிதைகளில் இன்று நிகழ்கின்றது. விஷ்ணுவின் கவிதைகளிலும் இதுதான் காணப்படுகின்றது.

கவிதை, காலத்தோடு முரண்பட்டோ காலத்தோடு பொருந்தியோ நிற்பதில்லை. அது காலத்தை மீறிச் செல்வது. கவிதையில் காலம் என்பது உறைபடமல்ல அது சலனப்படம். எப்போது அசைந்துகொண்டிருப்பது. கடந்த காலத்தை வாசிப்பதன் வழி வாழுங்காலத்தைத்தான் வந்தடைகின்றோம். விஷ்ணுவின் கவிதைகள் நிகழ்ந்து முடிந்த யுத்தக் காலத்தினை தன் அனுபவங்களின் வழி கேள்விக்குட்படுத்துகின்றன. புனைவுகளின் மீதும் புனிதப்படுத்தல்கள் மீதும் அதிர்வை எழுப்புகின்றன. புனிதத்தின் பேரால் நிகழ்த்தப்படுகின்ற எல்லாமே புனிதமல்ல என்கின்ற தர்க்கித்தலைச் செய்கின்றன. இயல்பும் இயல்பு குலைந்ததுதான மொழிதல்களின் வழி இந்த தர்க்கித்தல் நிகழ்கின்றது. காதலில் குழைந்தும் பிரிவில் நலிந்தும் ஏமாற்றங்களினால் சிதைந்தும்  ஒரு நீரோடைபோலச் செல்லும் அவரது மொழி, பல இடங்களில் தேங்கிச் சுழிக்கின்றது பல இடங்களில் மீறிப் பெருகுகின்றது. முன்னும் பின்னுமான முரண்களின் வழியாக ஒருமையை நிறுவ முயல்கின்றன. “கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்” தொகுதியிலும் “நின்று தூறும் மழை” தொகுதியிலும் இதுதான் நிகழ்கின்றது. ஒருவகையில் இரண்டு தொகுதிகளுமே தொடர்ச்சி கொண்டவை. வெளிப்பாட்டு முறையால் மட்டுமன்றி பொருண்மை நிலையிலும் தொடர்ச்சியைப் பேணுகின்றன.

விஷ்ணுவின் கவிதைகள் கட்டிறுக்கமான மொழிதல் முறையைக் கொண்டவை. சொற்கள் நீர்த்துத் ததும்பாது ஒருங்கிசைந்து வருகின்றன.  அவரின் கவிதைகளின் பலமும் இதுதான்.  பிரிவுக்காடு, வேதனைக்காடு, மரணக்காடு என்னும் தலைப்பிலமைந்த இந்தத் தொகுதியின் ஆரம்பக் கவிதைகளே கட்டிறுக்கமான மொழிதலுடன் இறுதியுத்த காலத்தின் அவலங்களை பேசுகின்றன. கவிதைகளின் அடியில் உறைந்துகிடப்பது நம்பிக்கை வரட்சியும் தீராத வடுவுந்தான். காலத்தை முன்னிலையாகக் கொண்டு அதற்கு காடு என்னும் பெரும்படிமத்தைக் கவிதையில் தந்துவிடுகின்றார் விஷ்ணு. காடுகள் எப்போதும் புதிர்களால் நிரம்பப் பெற்றவை. பேரச்சத்தை மூட்டுபவை. இந்தச் சிக்கலான புதிர்களை விஷ்ணு நுட்பமாக விடுவிக்கின்றார். அதீத புனைவுகளால் கட்டி வளர்க்கப்பட்ட பெருங்காட்டை கவிதைகளில் கொண்டுவருகின்றார் அவர். புனிதங்களாலும் சாகசங்களாலும் சடைத்து வளர்க்கப்பட்ட காடு, இந்த மூன்று கவிதைகளிலும் தொடர்ந்துவருகின்றது.

 ”காடுகள் மூண்டெரிய

மேய்ச்சல் தரையை இழந்த ஆடுகள்

மாமிசத் தின்னிகள் ஆயின” என வளரும் வேதனைக்காடு கவிதை,

”வீங்கிப் பெருத்த ஆடுகளின்

முலைகளின் வழி

சுரந்துகொண்டிருந்தது குருதி” என முடிகின்றது.

“ மரணக்காடு” என்னும் கவிதை

”புனிதங்களின் அர்த்தவழி

உள்நுழைகிறது

என்னில் பெருத்த காடு” எனத் தொடங்கி

”பெருவனத்தில்

நுழைந்து, அலைந்து

புள்ளியாகிக் குறுகும்

புரவிகளின் முதுகில்

படிகிறது தோல்வியின்

எண்ணற்ற அவமானத் திசுக்கள்” என முடிகின்றது. இந்த  கவிதைகள் இரண்டுமே கடந்த காலம் பற்றியதான நம்பிக்கைச் சிதைவின் வெளிப்பாடுகள். இந்தத் தொகுதியில் உள்ள பெரும்பாலான கவிதைகளின் உள்ளீடும் இவற்றின் நீட்சியாகவே இருக்கின்றன. விஷ்ணு சொற்களை நிதானமாகக் கையாளுகின்றார். அதித உணர்ச்சியின் வழியில் செல்லாது நிதானமாக பயன்படுத்துகின்றார்.  இது கவிதைகளில் செறிவை ஏற்படுத்துகின்றன.  ஆனால் இந்த கவிதைகளின் குரல் உள்ளொடுங்கியே ஒலிக்கின்றது. இவற்றை அரசியல் நீக்கம் செய்தும் ஒருவர் வாசித்துக்கொள்ள முடியும் இதில் விஷ்ணு பயன்படுத்துகின்ற குறியீட்டுச் சொற்களுக்கும் படிமம்படுத்தலுக்கும் வாசிக்கின்ற ஒருவர் வெவ்வேறான அர்த்தங்களை வழங்கிக் கொள்ள முடியும். ஆக அடையாளப்படுத்தலை அல்லது கூறுகட்டலை இந்தக் கவிதைகள் மறுதலிக்கின்றன. பன்முகத்தளத்திலான வாசிப்புக்கான சாத்தியங்களைத் திறந்துவிடுகின்றன. ஆயினும் பெரும்பாலான கவிதைகள் மரணத்தையே மைப்படுத்தி நிற்கின்றன. மரணம் பற்றிய அச்சம் எல்லாக் காட்சிகளிலும் அதன் பேரிருளையே காண்கின்றது. மரணத்தோடும் மரணபயத்தோடும் இடைவினையாற்றுகின்ற மனிதர்களே அநேகமும் விஷ்ணுவின் கவிதைகளில் நடமாடுகின்றார்கள்.

”எங்கிருந்தோ மணக்கிறது மரணம்

யாரோ சமைக்கவும்

மூக்கில் நுழையும் வாசனையாய்

ஆழ இறங்குகிறது என்னுள்” மரணத்தை இயல்பான உணர்தலாய் கவிதையாக்கிவிடுகின்றது. மரணம் பற்றிய செய்திகளும் மரணம் பற்றிய காட்சிகளும் நிறைந்துகிடக்கின்றபோது, மரணத்தை இயல்பான உணர்தலாக யதார்த்தம் மாற்றிவிடுகின்றது. எல்லாவற்றிலும் மரணமே சர்வவியாபகமாகிவிடுகின்றது. பதிப்புரையில் கவிஞர் தில்லை, ”தானா விஷ்ணு உருவாக்கும் கவிதைகளில் உள்ள மனிதர்கள், தங்கள் நினைவுகளிலும் மனங்களிலும் யுத்தத்தின் விளைவுகளையும் ஏறமாற்றங்களையும் சுமந்தபடியே இருக்கின்றனர்.” என இதனையே கோடிட்டுக் காட்டியுள்ளார்.  மரணம் பற்றி அச்சமும் நம்பிக்கைச் சிதைவும் கவிதைகளில் நிறைந்தேயிருக்கின்றன. விஷ்ணு பெரும் யுத்தத்தின் பின்னான கூட்டுத் துயரத்தின் அல்லது நம்பிக்கைச் சிதைவின் சாட்சியாகத் தன் கவிதைகளைத் தந்திருக்கின்றார்.

”மயாணக் காடாகிக் கிடக்கிறது

நம்பிக்கையில் நீண்டோடிய ஆறு” (கடவுளின் சாயலில் மிருகம்) மயாணக் காடு என்ற படிமமே கவிதையின் அர்தத்தை விரித்துச் செல்கின்றது. நம்பிக்கை என்னும் பெருநதி கடாகிச் சடைப்பதை, பேரவலத்தின் சாட்சியாக அல்லது பெரும் வீழ்ச்சியின் அடையாளமாகக் கவிதை கொண்டுவருகின்றது.

“மறுதலிக்கப்பட்ட வாழ்வில் சுருண்டு படுக்கும் வேட்டை நாய்” என்ற கவிதை அதிகாரப் படிநிலைகளயும் அதிகாரப்படுத்தலையும் நுட்பமாக வெளிப்படுத்துகின்றது. கவிதையில் வருகின்ற சர்ப்பம், கருடன், வேட்டை நாய் என மூன்று வெவ்வேறான அதிகார மையங்களை விஷ்ணு கொண்டு வருகின்றார். சர்பத்தை ”நீலப்பசிகொண்டலைகிற சர்ப்பம்” என்கின்றார். நீலம் விடத்தின் அடையாள நிறம். சர்ப்பங்களின் பசிக்கு புச்சிகள் இரையாகின்றன. சர்பத்தை அதிகாரத்தின்  மாதிரியாகவும் புச்சிகளை அடிமைத்தனத்தின் மாதிரியாகவும் கொண்டு கவிதையை வாசிக்க முடிகின்றது. கவிதையின் முடிவு

”சுருண்டு படுக்கும்

வேட்டை நாயின் விழியினுள்

நீலப்பசி கொண்டலையும் சர்ப்பங்களை

தேடிச் சலித்து

உறங்கிடச் செல்கிறது கருடன்” என அமைகின்றது. முரணனான காட்சியாக அமையும் இறுதி வரிகளை மீபுனைவாக்கம் அல்லது மீ படிமவாக்கம் என கொள்ள முடியும். யதார்த்தமற்ற இணைப்பாக்கம் நிகழ்ந்திருக்கின்றது. கவிதையை அதுவே மறுதளத்துக்கு கொண்டுசெல்கின்றது. வாசனிடம் புரிதல் குழப்பங்ளையும் ஏற்படுத்திவிடுகின்ற சாத்தியங்களையும் ஏற்படுத்திவிடுகின்றது. ஒருவகை செய்நேர்த்தியே கவிதையில் காணப்படுகின்றது. இந்தக் கவிதையின் கூறல் முறை தொண்ணூறுகளில் பெருவழக்காக இருந்த முறை என்றே சொல்லலாம். தொண்ணுறுகளில் கவிதைகளில் அதிதமும் காணப்பட்ட  இருண்மை நிலையின் தொடர்ச்சி என்றே இதைக் கருதிக்கொள்ள முடியும்.  இந்தக் கவிதையின் தொடர்ச்சி போலவே ”அச்சத்தின் பேரொலியின் நர்த்தனம்” என்ற கவிதையும் காணப்படுகிறது.

”இருளின் அகன்ற வாயுள்

கரையும் சதைப்பிண்டமாய்

படபடத்துக் கரைகிறது

அழகான புச்சி” இந்தக் கவிதையில் இருள் பேரதிகாரத்தின் குறியீடாகின்றது. புச்சி அவலத்தின் அடையாளமாகிவிடுகின்றது.

இத் தொகுதியில் உள்ள கவிதைகளை இரண்டு வகையில் அணுக முடியும். ஒன்று இத்தொகுதிக் கவிதைகள் பலவும் முன்னைய தொகுதிகளின் கவிதைகளின் நீட்சியாக அமைகின்றன. இரண்டாவது ஏற்கனவே விஷ்ணு கொண்டிருக்கின்ற வெளிப்பாட்டு நிலையிலிருந்து மாறுபட்டு விலகல் தன்மை கொண்டகவிதைகள். இத்தகைய கவிதைகளாக ”சிறுமியின் கண்களில் கடல், கடவுள் ஏன் தனித்திருக்கிறார், பிண்டம் கரைத்தல், யன்னலுக்கு வெளியே” போன்ற கவிதைகளைக் குறிப்பிடலாம். இவற்றுக்கிடையில் ஒத்த கூறல் முறை காணப்படுகின்றது. எனினும் முன்னைய கவிதைகளிலிருந்து இவை வேறுபட்டுநிற்கின்றன. விஷ்ணுவின் அடுத்த கட்ட பரிமாணமாக இவற்றைக் கொள்ள முடியும்.

இந்தத் தொகுதியின் பிற்குறிப்பில் தி.செல்வமனோகரன்,  மனவடு இலக்கியம் பற்றி கீதா சுகுமாரனை மேற்கோள் காட்டி எழுதியிருக்கின்றார். விஷ்ணுவின் கவிதைகளில் மனவடு இலக்கியத்திற்கான கூறுகள் அதிகமும் காணப்படுகின்றன. மனவடு என்பது ஆறாத பெருங்காயமாக தொடர்ந்து இருப்பது. இது அகப்புறக் காரணிகளால் ஏற்படக்கூடியது. அதிதமும் உளவியல் மயப்பட்ட இந்த நோக்கு விஷ்ணுவின் கவிதைகளில் மட்டுமல்ல பொதுவாக எல்லா படைப்பாளிகளிடமும் இருப்பதுதான். ஆயினும் விஷ்ணுவின் கவிதைகளில் இந்தத் தன்மை அதிகமும் காணப்படுகின்றது.

நின்று தூறும் மழையில் உள்ள பல கவிதைகளும் ஒரே விடயத்தை பலவேறு முறைகளில் எழுதப்பட்டவைதான். விஷ்ணு கிட்டத்தட்ட ஒரு மையத்தில் நின்றே சுழலுகின்றார். திரும்பத் திரும்ப ஒத்த மொழிதலும் படிமங்களும் ஒரே குறயீடுகளும்   வருகின்றன. இது ஒரே கவிதைபோன்ற சாயலை தந்துவிடுகின்றது. கூட்டுக் காயங்களுக்குள்ளும் ஒரு இழை பிரிவாக விஷ்ணு தன் காயங்களின் பெருவலியை எழுதிச் செல்கின்றார். காதலும் ஆற்றாமையும் துயருமாக நீளுகின்ற பெருவலிதான் கவிதைகள் முழுதும் நிரம்பிக்கிடக்கின்றது. நம்பிக்கை தரக்கூடிய சொற்கள் விஷ்ணுவிடம் இல்லை பெருந்துயரத்தின் சாரமாக இந்தத் தொகுதியிருக்கின்றது. இதன் நீட்சியாக விஷ்ணுவின் பின்னைய கவிதைகள் தொடருமாக இருந்தால். அவை சலிப்பையே ஏற்படுத்தும். மீளமீள துயரத்தை ஒத்த முறையில் ஒப்புவிப்பது போலாகிவிடும். விஷ்ணு தன் கவிதைகள் சார்ந்து புதிய வெளிப்பாட்டு முறைகளைக் கண்டடைய வேண்டிய தேவையிருக்கின்றது.

00

நன்றி -கலைமுகம்

 

 

12 ஜூலை, 2024

மாமிசம்

 சித்தாந்தன்

கோடையின் வெய்யில் உச்சந் தலையினால் இறங்கி தேகத்தை அனலாக்கிக் கொண்டிருந்தது. வேலியோரமாக துளிர்விடத்தொடங்கியிருந்த காட்டுப்பூவரசுக்குள் என்னைச் சுருக்கிக்கொண்டேன். எதிரே உழுதுவிடப்பட்டிருந்த வயலின் புழுதியை காற்று எத்தியபடியிருந்தது. உரிமையாளர் வீட்டின் முன்புறத்தை இறைச்சிக்கடையாக மாற்றியிருக்கின்றார். புதிதாக கட்டப்பட்ட வீடு என்பதால் நிழல் மரங்கள் எதும் இல்லை. வீதியை ஒட்டிக் கடையிருந்த போதும் சூழவும் வயல் நிலங்களே விரிந்துகிடந்தன. அவையும் உழப்பட்டிருந்தன. குளிர்மை என்பது மருந்துக்குக்கூட இல்லை. கடையில் சனங்களும் இல்லை. 

மனைவியின் உறவினர்கள் நீண்ட நாட்களின் பின் வீட்டுக்கு வந்திருந்தனர். நயினை நாகபூசணி அம்மன் கோயி;லில் நேர்திக்கடனை செலுத்திவிட்டு நேற்று மாலைதான் வந்திருந்தனர். இன்று மாலை ஊருக்குப் புறப்பட இருக்கிறார்கள். அவர்களுக்கு மதியம் விருந்துகொடுக்க வேண்டும் என்ற தன் ஆவலை வெளிப்படுத்திய மனைவி, அதற்காக் கோழி இறைச்சி வாங்க என்னை அனுப்பியிருந்தாள்.

கடைக்காரர் கிட்டத்தட்ட வியாபாரத்தை முடித்துவிட்டு சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். “ எனக்கு ரண்டு கிலோ இறைச்சி போடுங்கோ” என்ற என் குரலை கேட்டுத் திடுக்கிட்டவர் போல என்னைத் திரும்பிப் பார்த்தார். பிறகு குரலைச் செருமிக் கொண்டே, “கடை பூட்டியாச்சு” என்றார். இந்த வெய்யிருக்குள் இன்னொரு கடையை தேடிச் செல்வதென்பது எரிச்சையூட்டுவதாகவே இருக்கும் “அண்ணை, வீட்டில் ஒரு விசேசம் கொஞ்சம் றை பண்ணிப் பாருங்கோ” எனது குரலில் படர்ந்த பரிதாபத்தை உணர்ந்தவர் போல  “தம்பி வெட்டி வைச்சதெல்லாம் முடிஞ்சிடுத்து. இனி அறுத்துத்தான் தரவேணும். கையில வேலையா இருக்கிறன்  கொஞ்சம் பொறுக்க முடியுமோ” என்றார். நான் தலையை ஆட்டிச் சம்மதத்தை வெளிப்படுத்தினேன். ஆவர் கதிரை ஒன்றை தந்து வீட்டின் முன்புறத்தில அமரும்படி சொன்னார். நான் சுவரோடு ஒட்டி கொஞ்சம் நிழல்படக்கூடிய இடத்தில் அமர்ந்துகொண்டேன். 

வீட்டின் விறாந்தையில் புகைப்படங்கள் பல  தொங்கவிடப்பட்டிருந்தன. எல்லாம் வெளிநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். பெருந்தெருங்களும் நவீன மாடங்களுமாக இருந்த அந்தப் புகைப்படங்களில் கடைக்காரர் பெரிதும் சிரித்துக்கொண்டிருந்தார். ஒரு படத்தில் சமையல் உடையில் தலையில் தொப்பியும் அணிந்து கொண்டு எதையோ வறுத்துக்கொண்டிருந்தார். என்னத்தை வறுக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. அது கோழி வறுவலாகக் கூட இருக்கலாம். கடைக்காரர் அண்மையில்தான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்க வேண்டும் அவரது நடையுடை பாவனையும் அதை மெய்ப்பிப்பது போலவே இருந்தன. இள நீல அரை பென்னியன் அணிந்திருந்தார். அடர் நீல நிறத்தில் பொட்டம் அணிந்திருந்தார். மார்பில் தடித்த சங்கிலி ஒன்று மின்னிக் கொண்டிருந்தது. கையில மீன் வடிவிலான விரலில் முக்கால்வாசியை மறைத்திருக்கும் பெரிய மோதிரமும் அணிந்திருந்தார். தலையின் முன் பக்கம வழுக்கை விழுந்திருந்தது. எஞ்சிய தலைமுடியை கறுப்புச் சாயத்தில் தோய்த்திருந்தார். தாடி வழிக்கப்பட்டு மீசையை அழகாகக் கத்தரித்திருந்தார். வீட்டில ;அவரைத் தவிர வேறு எவரும் இல்லை. அவர்களெல்லாம வெளிநாட்டில் இருக்கக்கூடும். இவர் மட்டும் தன் முதுமைக் காலத்தை தாய் நிலத்தில கழிக்கும் பிரையாசத்தோடு இங்கு வந்து தனியே வசிக்கக்கலாம் என எண்ணிக் கொண்டேன். அவர் தன் வேலையைத் துரிதமாக்கிக் கொண்டிருந்தார்.

ஒரு வேளை வெளிநாட்டில் அவர் இறைச்சிக்கடை ஒன்றில் வேலை செய்திருக்கலாம். அல்லது இறைச்சிக்கடை ஒன்றை நடத்தியிருக்கவும் கூடும். கவுண்டர் மேசையில் குபேரனின் சிலை ஒன்று வைக்கப்பட்டு கண்ணாடிச் சட்டமிடப்பட்டு சில்லறைக் காசுகள் குவித்துவைக்கப்ட்டிருந்தன. அதன் மேலே அன்றைய நாளிதழ் நான்காக மடித்துவைக்கப்பட்டிருந்தது. எடுத்து விரித்தேன் முதல் பக்கத்தில் வழமையான செய்திகள்தான். ஆர்பாட்டங்கள் பற்றிய செய்திகள் குவிந்துகிடந்தன. வலப்பக்கத்தின் கீழ் மூலையில் கட்டமிடப்பட்ட ஒரு செய்திக்கு “வாள் வெட்டுக்குழு அட்டகாசம்” தலைப்பிடப்பட்டிருந்தது. அண்மைக் காலங்களில் இத்தகைய செய்திகள் இல்லாத நாள் விடிவதென்பது அரிதானதுதான். செய்தியை வாசி;த்தேன் வீடு புகுந்த வாள்வெட்டுக் குழு கணவன் மனைவியை வெட்டிவிட்டு பெறுமதியான பொருட்களை களவாடிச் சென்றது. இரத்த வெள்ளத்தில் மிதந்தவர்களை அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். என்ற இறுதி வரி மனதுக்கு ஆறுதலாக இருந்தது. சக மனிதனைக் வெட்டி இரத்தத்தைப் பார்க்கும் அளவுக்கு மனிதர்களிடம் கொலைவெறி ஏன் இவ்வளவுக்குத் தாண்டவமாடுகிறது. மனித உயிரை விட மதிப்புக்கூடியவையா காசும் பொன்னும். நினைக்கும் போதே மனித ஜீவிதத்தின் மீது வெறுப்புப்படர்ந்தது. நாளிதழை மடித்து மீண்டு அதே இடத்தில் வைத்துக்கொண்டேன்.

விறாந்தையின் மூலையிலிருந்த மீன்தொட்டிக்குள் வண்ண வண்ண மீன்கள் அசைந்து கொண்டிருந்தன. தங்கமும் வெள்ளியுமாக உடல் முழுதும் பரவிக்கிடந்த மீன், என்னை மிகவும் வசீகரித்தது. அநேகமும் எல்லா மீன்களுக்கும் சோடி இருந்தது. இது மட்டுமே தனித்து அலைந்தபடியிருந்தது. அதன் சோடி இறந்திருக்கக்கூடும். கடைக்காரர் தனியாக இந்த மீனை வைத்து வதைக்க மாட்டார் என்றே நான் நினைக்கின்றேன். கடைக்காரர் தன் வேலைகளை முடிக்கும் வரை நான் மீன்களோடு சேர்ந்து நீந்திக்கொண்டிருந்தேன். 

சமையலறை வேலையை முடித்துக்கொண்டு அவர் வீட்டின் பின் புறத்தில் இருந்த கோழிக்கூட்டை நோக்கிச் சென்றார். கிட்டத்தட்ட  பத்து மீற்றர் நீளமான இரண்டு கோழிக்கூடுகளை அமைத்திருந்தார். வெண்ணிறப் புறோயிலர்கள் ஒரு கூட்டிலும் இன்னொரு கூட்டில் கல்பேட், பேரன்ஸ் கோழிகளும் இருந்தன. இவரின் வருகையைக் கண்டபோதே கோழிகள் எல்லாம் கீச்சிடத் தொடங்கின. அவர் சாவதானமாக புறோயிலர் கூட்டுக்குள் நுழைந்தார். இரண்டுகிலோ நிறையளவான கோழியைத் தேடிப் பிடித்தார். அவரது பிடி கோழியின் கழுத்திலிருந்தது. அதன் கழுத்து நீண்டு கொண்டதுபோலிருந்தது. அது தன் இறக்கைகளை அடித்துக் கொண்டிருந்தது. அதை அவர் கோழிகளைப் பலியிடும் பலி பீடத்துக்குக்  கொண்டு வந்தார். பலி பீடம் என்பது இரும்புக் கால்களையும் மேற்புறம் பலகையினாலுமான மேசைதான்.  அதற்கு மேல் படர்ந்திருந்த மாங்கொப்பு ஒன்றில் பிணைக்கப்பட்டிருந்த கயிறு தொங்கிக் கொண்டிருந்தது. அவர் கோழியின் பிடியை கழுத்திலிருந்து காலுக்கு மாற்றினார். ஆதை கயிற்றில் தொங்கவிட்டார். அது தன் இறக்கைகளை மேலும் பலமாக அடித்துக் கொண்டிருந்தது. கூட்டினுள் இருந்த கோழிகள் எல்லாம் வெருண்டு மூலைகளுக்குள் பதுங்குவது போலிருந்தது. அவர் சர்வசாதாரணமாக அன் கழுத்தை தன் கைகள் இரண்டையும் சேர்த்துப் பிடித்து ஒரு திருகு திருகினார். கோழியின் சிறகடிப்பு அடங்கி அதன் இறக்கைககள் விரிந்தது தொங்கின. கத்தியை எடுத்து கோழியின் தோடைத் தசைகளை வெட்டத் தொடங்கினார்.

இந்தக் கோழி தொங்கிக் கொண்டிருப்பது போலவே ஒரு நாள் நான் தொங்கிக் கொண்டிருந்தேன். அது இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலம். அப்போது நான் உயர்தரம் படித்துக் கொண்டிந்தேன். எங்களுக்கு சனி ஞாயிறு மட்டுந்தான் ரியூசன்கள் நடக்கும். ஒரு சனிக்கிழமை விடிய ஆறு மணிக்கு ரியூசனுக்கு வெளிக்கிடக்கிட படலையைத் திறந்த போதுதான் தெருவில் இராணுவத்தினர் நிறைந்திருப்பதைக் கண்டேன். நான் படலையை மெதுவாக சாத்திவிட்டு வீட்டுக்குள் திரும்பினேன். நான் திரும்பிய சற்றைக் கெல்லாம் இராணுவத்தினர் சிலர் வீட்டுக்குள் நுழைந்தனர். வீட்டிலிருந்த எல்லோரையும் வைரவர் கோவில் திடலுக்கு செல்லுமாறு கூறினார்கள். நாங்கள் எல்லோரும் திடலுக்குச் சென்ற போது திடலே திருவிழாக் கூட்டம் போல இருந்தது. ஆனால் ஒன்று திருவிழா என்றால் ஆரவாரமாக இருக்கும். இஞ்சை வெறும் நிசப்பதம் மட்டுமே நறைந்து கிடந்தது. சுற்றிலும் இராணுவத்தினர் துப்பாக்கிகள் சகிதம் நின்றனர். வழமையாக இப்படியான சுற்றி வளைப்புக்கள் நடப்பது பழக்கமானதுதான். இராணுவத்தினர் தங்கள் வீரத்தைக் காட்டுவதற்காக ஒன்றிரண்டு இளைஞர்களைப் பிடித்து அதில் வைத்தே சப்பாத்துக் கால்களாலும் துப்பாக்கிப் பிடிகளாலும மாறிமாறி அடிப்பார்கள். அது தங்கள் மீதான பயம் சனங்களுக்கு குறையக்கூடாது என்பதற்காகத் தான். இடைக்கிட “நீ எல்.ரீ.ரீ.ஈ தானே நீ எல்.ரீ.ரீ.ஈ தானே” என்று கேட்டுக்கொள்வார்கள் அம்பிட்டவனும் “இல்லை சேர் இல்லை சேர்” என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள். சொல்லச்சொல்ல அடியும் கூடிக்கொண்டே போகும் அடிக்கின்ற இராணுவத்தினரும் தங்களது முகத்தை மேலும் கொடூமாக்கிக் கொள்வார்கள். அவர்களுக்கு அது ஒரு விளையாட்டு போல இருக்கும். நான் நினைக்கிறேன் முகாமில இருக்க பொழுது போகவில்லை என்றால் ஒரு சுற்றி வளைப்பின் மூலம் தங்கள் பொழுதை மகிழ்ச்சியாக கழித்து விடுவார்கள். பிறகு அவர்களை விட்டுவிட்டு சுற்றிவளைப்பை முடித்து அணிவகுத்துத் திரும்புவார்கள்.

வழமையான சுற்றிவளைப்புச் சடங்காகத்தான் இதுவும் இருக்கும் என்றே நினைத்திருந்தேன். அண்டைக்கு அவர்களது முத்தேர்வில் நானும் ஒருவனாகி இருந்தேன். நான் அம்மாவுக்குப் பக்கத்திலதான் அமர்ந்திருந்தேன். என்னை ஒரு இராணுவ வீரன் கையைச் சுட்டிக் காட்டிய போது, அவனது விரல் துப்பாக்கி போலாகி என்னைக் குறிவைப்பது போலிருந்தது. என் உடல் நடுங்கத் தொடங்கியது. நான் ‘அம்மா’ என உதடுகளைப் பிரித்தவாறே எழுந்து கொள்ள எத்தணித்தேன். அம்மா என் கையை இறுகப் பிடித்து இருத்தினார். அவரின் கையிலும் நடுக்கத்தை உணர்ந்து கொண்டேன். அம்மாவின் செயல் இராணுவ வீரனுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அவன் பல்லை நெறுமிக் கொண்டு பாய்ந்து வந்து என் தலையைப் பிடித்து இழுத்தான். அம்மாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கூட்டத்தின் முன்னே கொண்டுவந்து என் முதுகை வளைத்து தன் முழங்கையால் இரண்டு குத்துக்கள் குத்தினான். நான் அம்மா என்று அலறினேன் என் அலறலைவிட அம்மாவின் அலறல் அதிகமாக இருந்தது. எங்கள் மூன்று பேரையும் அந்த மதிய வேளையில் முழங்காலில் இருத்தினார்கள். ஏனோ எனக்குத் தாகமாக இருந்தது. அது பயத்தினால் கூட இருக்கலாம். புள்ளிக் கூடத்தில் வீட்டு வேலை செய்யவில்லை என்றால் கணிதபாட ஆசிரியர் இப்படித்தான் முழங்காலில் இருத்துவார் அந்த நினைவுதான் வந்தது.

சுற்றிவளைப்பு மதியத்தையும் தாண்டி இரண்டு மணிவரை நீண்டது என் முழங்கால் சிரட்டைகள் n;வய்யிலில் தகித்துக் கண்டிப்போயின. இராணுவத்தினர் சிலர் எங்கள் அருகில் வந்தனர். நான் நினைத்தேன் ஒன்றுகூடித் தாக்கப்போகின்றார்கள் என்று. வந்தவர்கள் எங்களை தூக்கி புறப்படத் தயாராக நின்ற றக்குக்கள் போட்டார்கள். றாக் விரைந்து புறப்பட்டது. நான் மெல்ல வெளியே எட்டிப் பார்த்தேன். அம்மாவும் அப்பாவும் அலறிக்கொண்டு றக்கை தொடர்ந்து ஓடிக்கொண்டுவந்தார்கள். 

0

என்னை தலைகீழாகத் தொங்க விட்டிருந்தார்கள். எனது கைகள் உயிரடங்கிய கோழியின் இறக்கைகளைப் போலத் தொங்கிக் கொண்டிருந்தன. தேகம் வியர்த்து நீராக வழிந்துகொண்டிருந்தது. என்னைச் சூழ குண்டாந்தடிகள் சகிதம் நான்கு இராணுவத்தினர் நின்றார்கள். கிறிக்கட் பயிற்சி வீர்கள் பந்தைக் கட்டித் தொங்கவிட்டு துடுப்பால் அடிப்பதைப் போல நான்கு திசைகளிலிமிருந்து அடித்துக்கொண்டிருந்தார்கள். நான் பந்து போல் அலைக்களிந்துகொண்டிருந்தேன். அவர்களின் எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதில்கள் இல்லை. அவர்கள் பதிலில்லாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். திரும்பத் திரும்ப “இல்லை சேர் இல்லை சேர்” என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்.

அது மாபெரும் மரண விளையாட்டு. என் கன்னங்கள் வீங்கிக் கன்றியிருந்தன. என் குதிக்கால்கள் பிளந்து குருதி வழிந்துகொண்டிருந்தது. முதுகும் நெஞ்சும் தீயில் கருகுவது போல எரிந்துகொண்டிருந்தன. கேளிக்கையாலும் எளனத்தினாலும் நிறைந்திருந்த அந்த வதைகூடத்தில் என் வெம்மை நிரம்பிய மூச்சு நிறைந்திருந்தது. சுவர்களில் என் இரத்தம் தெறித்துப் படிந்திருந்தது. என் அலறல் காதுகளில் மீள மீள ஒலித்துக் கொண்டிருந்தது.

0

இப்போது செட்டைகள் உரிக்கப்பட்ட கோழி தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. என்னை அவர்கள் நிர்வாணமாக்கித் தொங்கவிட்டிருப்பதைப் போலவே கடைக்காரன் கோழியையும் தொங்கவிட்டிருந்தான். அதன் தசைகளில் ஊறிக்கிடந்த இரத்தம், என் தேகத்தில் ஊறி வழிந்த இரத்தத்தை ஞாபகமூட்டியது. என்னைத்  தொங்கவிட்ட கயிற்றை அறுத்தபோது நான் தலையடிபடத் தரையில் விழுந்திருந்தேன். என் மண்டை பிளந்து பெருகிய இரத்தம் அறை முழுவதிலும் விரவிக்கிடந்தது. நான் முனகிக் கொண்டு கிடந்தேன் நா வறண்டு தண்ணீர்த் தாகம் எடுத்தது. நான் என் கைகளினால் சைகை செய்து தண்ணீர் கேட்டேன். ஆங்கிருந்த சிப்பாய்களில் ஒருவன் குவளை ஒன்றில் தண்ணீரை மொண்டு வந்து என் வாயில் ஊற்றினான். நான் தண்ணீரில் இருந்து கரையில் வீசியெறியப்பட்ட ஒரு மீனைப்போல வாயை அகல விரி;க்க எத்தணித்தேன். முடியவில்லை. அவன் ஊற்றிய நீரில் பாதியிலும் அதிகமான நீர் என் இரத்தத்தோடு கலந்து தரைமுழுவதிலும் பரவியிருந்தது.

கடைக்காரன் கோழியை சிறுசிறு துண்டுகளாக வெட்டி சொப்பிங் பாக்கில் இட்டுக் கொண்டு என்னிடம் வந்தான். நான் அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு இறைச்சிப் பார்ஸலைப் பெற்றுக்கொண்டேன். மாமிசத்தின் வீச்சம் என் முக்கை அடைத்தது. என் தேகத்தை நான் பார்ஸலிட்டு கொண்டு செல்வதைப் போலிருந்தது. 

கடவுளின் படைப்பில் மனிதன்தான் உயர்ந்த படைப்பா? கடவுள் மனிதனுக்காகத்தான் எல்லாவற்றையும் படைத்தாரா? என் தேகமே மாமிசம்தான். நானே மாமிசத்தை உண்டு மாமிசமாக வளர்ந்து நிற்கின்றேன். தன் தசைத்துண்டில் ஒரு கீறல் விழுந்தால்கூடத் தாங்கிக் கொள்ளாத மனிதன், பிற உயிரிகளை கொன்று புசிப்பது எவ்வளவு கொடூரமானது. ஓவ்வொரு உயிரும் கடவுள் தன் உயிரென்றுதான் கூறியிருப்பதாக மதங்கள் சொல்லுகின்றன. நான் கடவுளின் மாமிசத்தையா காவிச் செல்கின்றேன். கடவுளின் மாமிசத்தையா புசிக்கப்போகின்றேன். அருபமான உயிரை கடவுள் உடலுக்குள் புகுத்திய போது, ஒரு உடல் இன்னொரு உடலைப் புசித்துப் பசியாறும் என நினைத்திருப்பாரா? 

கேள்விகள் தொடரியாக என் மனதில் எழுந்தன. ஒரு கேள்வின் புதிரை அவிழ்ப்பதற்குள் இன்னொரு புதிராக இன்னொரு கேள்வி வந்துவிடுகின்றது. கடவுள் உலகத்தைக் கேள்விகளால்த்தான் ஆண்டுகொண்டிருக்கிறார். கேள்விகள் நிறைந்திருப்பதால்த்தான் மனித இருப்பில் மகத்துவத்தின் சாயல் படிந்துவிடுகின்றது. மனிதன் என்பவன் உடலோ உயிரோவல்ல பேரண்டத்தின் பெரும் இருப்பு. தத்துவத்தின் வித்திலிருந்து சடைத்து வளர்ந்தபடியிருந்தது என் சிந்தனை. 

சற்று முன் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்த கோழியின் உடலுக்கும் இராணுவத்தினர் தொங்கவிட்டிருந்த எனது உடலுக்கும் என்ன வேறுபாடு இருக்கக்கூடும். உடல் என்ற பொது விதிதான் வேறுபாடுகள் எல்லாவற்றையும் விடவும் பெரியது. உடலற்ற உயிரின் ஜீவிதமாக மனித வாழ்வு இருந்;திருந்தால் எவ்வாறு இருந்திருக்கும்? இந்த பௌதீக உலகில் ஒவ்வொன்றும் பௌதீகந்தான். ஒரு பௌதீகம் இன்னொரு பௌதீகத்தை ஆளுகின்றது. அதிகாரம் செலுத்துகின்றது. அடிமைப்பட்டிருக்கின்றது. இராணுவத்தின் அதிகாரத்தின் கீழ் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்த நானும் கசப்புக் கடைக்காரனின் கத்தியின் முன் தலை கீழாகத் தொங்கிக்கொண்டிருந்த கோழியும் ஒன்றுதான். ஒரு அதிகாரத்திலிருந்து விடுபட்டவன் அல்லது ஒரு அதிகாரத்துக்கு உட்பட்டவன் இன்னொன்றை அதிகாரப்படுத்துவதில் இன்பம் காண்கின்றான். கோழி என் நாவுக்கு இன்பமாகின்றது. இந்த நிலையில் கருணை இரக்கம் அன்பு என்பவையெல்லாம் என்ன? புறத்தே தொங்கிக் கொண்டிருக்கும் சொற்கள்தான்.என் கால்களில் கட்டப்பட்டிருந்த கயிறு, தொண்டையில் ஏறி கழுத்தை  இறுக்குவது போலவிருந்தது. இன்னும் இராணுவத்தினர் சூழ்ந்து நின்று குண்டாந்த தடியால் என் முதுகைப் பிளப்பதான உணர்வு. நான் என் உள்ளங்காலை மேலுயர்த்திப் பார்த்தேன். தழும்புகள் இன்னுந்தான் இருக்கின்றன. கால்களின் உணர்வு மரத்து உடல் முழுதும் பரவுவது போலிருந்தது. நடை தடுமாறுவதான உணர்வு மேலிட்டது. தெருவுக்கு வந்த போது அனல் காற்று முகத்தில் அறைந்தது. 

0

“ஏனப்பா இவ்வளவு நேரம்” என்ற கேள்வியோடு என்னை எதிர்கொண்ட மனைவி பார்ஸலைப் பெற்றுக் கொண்டாள். நான் எதுவும் சொல்லவில்லை. நேராகக் குளியறைக்குள் சென்றேன். வெயிலின் சூடு கண்களினால் ஆவியாகி வெளியேறுவது போல இருந்தது. சூடு தணியக் குளித்தேன். 

0

எல்லோரும் மனைவி வைத்த கோழிக் கறியைப் புகழ்ந்தவாறே உண்டு கொண்டிருந்தனர். குழந்தைகள் காரமாக இருப்பதாகவும் வளர்ந்தவர்கள் காரம் போதாது என்றும் சொல்லிக் கொண்டே சுவைத்தனர். நான் கடைசியாகத்தான் சாப்பிட அமர்ந்தேன். கோழிக் கறியில் மனைவின் கைப்பக்குவம் தெரிந்தது. நான் சுவைத்துச் சுவைத்து கடவுளின் மாமிசத்தைத் சாப்பிடத் தொடங்கினேன்.

00

நன்றி- தீம்புனல்

10 ஜூலை, 2024

ஆம்பி

சித்தாந்தன்
எனது சிறுபராயத்தில் என் வயதை ஒத்த எல்லோருக்கும் காலிங்கன்தான் கதாநாயகன். நாங்கள் காலிங்கனை கண்டதன் பிறகு சினிமாப்பட கதாநாயகர்களை இரசிப்பதையும் அவர்கள் பற்றிப் பேசுவதையும் தவிர்த்துக்கொண்டோம் என்றால் பாருங்கள். எங்கள் பேச்சு முழுவதிலும் காலிங்கன்தான் நிரம்பிக்கிடந்தான். நாங்கள் ஒவ்வொருவரும் காலிங்கன் பற்றி பல கதைகளை ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியிருந்தோம். கதைகளில் பெரும்பாலானவை இட்டுக்கட்டிய கதைகள்தான். ஆனாலும் ஒருவர் கூறிய கதையை பொய் என்று மற்றவர்கள் நிராகரிக்காமலிருப்பதை ஒரு நாகரிகமாகக் கொண்டிருந்தோம். காலிங்கனிடம் இருந்த வீணை பற்றி நான் சொன்ன கதையை எல்லோரும் ஆவலாகக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

 “காலிங்கனின் வீணை சுவர்க்கத்தின் கற்பக தருவினால் செய்யப்பட்டது என்றும், அதன் நரம்புகள் காற்றை இழை பிரித்து செய்யப்பட்டவை என்றும், காலிங்கன் வீணையின் நரம்புகளிலிருந்து பிறக்கும் இசைதான் சூரியனின் ஏழு நிறங்களாக ஒளிர்கின்றன என்றும். இரவெல்லாம் வீணையை மீட்டிக்கொண்டிருக்கும் அவன், அதிகாலையில் தன் வீணையை ஒரு மரம்போலாக்கி எங்காவது நாட்டிவிட்டுச் செல்வதாகவும்” நான் கதையளந்திருக்கிறேன். நண்பர்கள் எல்லோரும் சுவாரசியம் குன்றாமல் கேட்டுக்கொண்டேயிருந்திருக்கிறார்கள். சில நாட்கள், காலிங்கன் தன் வீணையை மரமாக்கி எங்கு நட்டுவிட்டுச் சென்றிருக்கின்றான் என்று நாங்கள் தேடியதுமுண்டு. நண்பர்களில் யாராவது ஒருவர் ஏதாவது மரமொன்றைக் காட்டி இதுதான் காலிங்கனின் வீணை மரம் என்று சொல்லிக்கொள்வதுமுண்டு. நானும் அவர்களின் சொல்லை தலையசைத்து ஆமோதித்துவிடுவேன். நான் உருவாக்கிய கதை பொய்த்துப்போய்விடக்கூடாது என்பதில் அவதானமாக இருந்தேன். இப்படியாக எண்ணிறைந்த கதைகளை காலிங்கனைச் சுற்றிப் பரவவிட்டிருந்தோம். 

 நள்ளிரவு வேளைகளில்த்தான் காலிங்கன் தனது விணையிலிருந்து இசையை மீட்டத்தொடங்குவான். ஊரில் எல்லோரும் உறங்கப்போயிருந்தாலும் சிறுவர்களாகிய நாங்கள், அவனது இசையின் ஈர்ப்பில் மகுடிக்கு மயங்கும் பாம்புகள் போலாகி இசையின் வழி அவனது இருப்பிடத்தை அடைவோம்.

 காலிங்கனின் வீடு, கனத்த இருளில் சரித்திரகாலத்தின் குகை ஓவியம் போலக் காட்சியளிக்கும். சுற்றிலும் அடர்ந்து வளர்ந்த மரங்களின் நடுவில் அது இருந்தது. அதை வீடு என்பதைவிட குடில் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் நேர்த்தியாக கிடுகுகளால் வேய்ந்து, அரைக் குந்துவைத்து பனம் மட்டையால் வசிச்சுக்கட்டியிருக்கும். அது ஒருவர் நின்றுகொள்ளக்கூடிய உயரத்தையும் ஒருவர் தன் கைகளை நீட்டிய அளவுக்கான நீளத்தையும் நீட்டி நிமிர்ந்து படுக்கத் தக்கதான அகலத்தையும் கொண்டிருக்கும். அதற்குள்தான் அவனது வீணை, உடைகள், சில புத்தகங்கள் என அவனது உடைமைகள் இருக்கும். 

 அவனது குடிலின் அருகில்; ஓங்கி கிளைகளைப் பரப்பி வளர்ந்திருக்கும் ஆலமரத்தின் விழுதுகள், இராட்சசனின் தலை முடிகள் போல காற்றில் அசைந்தபடியிருக்கும. அதனது கிளைகள், அவன் எங்களை கவர்ந்து கொள்ள நீட்டும் கைவிரல்களாய் விரிந்து கிடக்கும். சிறுவர்களாகிய எங்களுக்கு அவை துணுக்கை ஏற்படுத்தினாலும் காலிங்கனின் இசை எங்களை ஆதரவாக வருடும் விரல்களாகி அச்சத்தைக் களையும். பகல் வேளைகளில் நாங்கள் விழுதுகளில் ஊஞ்சல் ஆடுவதற்காக ஆலமரத்துக்குச் செல்வதுண்டு. அப்போது காலிங்கனின் குடில் மட்டும் வெறுமையாகக் கிடக்கும். அதற்குள் எவ்விதமான பொருட்களுமே இருக்காது. ஒரு மனிதன் வாழ்கின்றான் என்பதற்கான எந்த அடையாளங்களும் அற்று, குஞ்சுகளோடு பறந்துவிட்ட பறவையின் கூடுபோல வெறுமையால் அடைந்துகிடக்கும். 

0 சிறுவர்களாகிய நாங்கள்; நள்ளிரவுகளில் காலிங்கனின் வீட்டைச் சுற்றி சூழ்ந்து நிற்போம். அவனது பார்வை எங்களிற் படாதவாறு மரங்களுக்குப் பின்னாலும் புதர்களுக்குள்ளும் எங்களை மறைத்துக்கொள்வோம்;. மறைந்து நின்று அவனைப் பார்ப்பது அலாதியான சுவையுடைய பானத்தை வீட்டில் யாருக்குந் தெரியமாமல் மறைந்திருந்து பருகுவது போன்றிருக்கும். 

 அவனது வீட்டின் முன்புறத்தில் ஒரு விளக்கை ஏற்றி வைத்திருப்பான். அந்த விளக்கின் ஒளி அவனது முகத்தை துல்லியமாகப் பார்க்க எங்களுக்குப் போதுமானதாக இருக்கும். அந்த மஞ்சள் ஒளியில் இளங்காலைச் சூரியனாய் அவன் முகம் பிரகாசிக்கும். நாங்கள் அவனையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருப்போம். அவனது விரல்கள் வீணையின் நரம்புகளில் நர்த்தகியைப் போல் ஆடிக்கொண்டிருக்கும். அவன் உச்சமாகத் தவளவிடும் தன் இசையை திடீரென நிறுத்திக்கொள்கையில், அந்த இரவே உடைந்து சிதறுவதைப் போலிருக்கும். காலிங்கன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு மதுக்குவளையை எடுத்து மஞ்சள் நிற மதுவை கோப்பையில் நிரப்புவான். அதை தன் உதட்டில் பொருத்தி உறுஞ்சிக்கொண்டிருப்பான். விளக்கின் ஒளி கண்ணாடிக் கோப்பையில் பட்டுத்தெறிக்கையில் அது மாயத்தனமான கிளர்ச்சியை என் இருதயத்துள் இட்டு நிரப்பும். 

 மதுவின் மயக்கத்தில் அவன் கண்கள் பூஞ்சி தலை தொங்க மீண்டும் வீணையின் நரம்புகளை தன் விரல்களால் வருடத்தொடங்குவான். அந்த இசைதான் இந்த உலகத்தையே புலர்விக்கும் இசையாக இருக்கும் என நான் நம்பத்தொடங்கினேன். அவன் அதி காலைவரை தன் இசையைத் ததும்பவிட்டுக்கொண்டே இருப்பான். 

பகற்பொழுதுகளில் காலிங்கன்; எதிர்பாராத விதமாகத் தென்படுவதுண்டு. சிறுவர்களாகிய எங்களுக்கு பகலில் அவனைக் காண்பது பெரும் பாக்கியமாக இருந்தது. அப்போதெல்லாம் எங்கள் ஊரின் வீதிகள் எல்லாம் புதுவிதமான கிளர்ச்சிகொண்டிருப்பதாகத் தெரியும். பெண்கள் வேலிகளுக்குப் பின்னால் நின்று அவனை இரகசியமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். திரையில் தென்படும் சினிமா நட்சத்திரம் போல அவன் மிடுக்காக நடந்து செல்லுவான். அவனது முதுகில் கனமான தோற்பை ஒன்று தொங்கிக்கொண்டிருக்கும். அதற்குள் என்ன வைத்திருக்கின்றானோ என தெரியாது. சில வேளைகளில் தன் மதுக்குவiளையையும் புத்தகங்களையும் அதனுள் வைத்திருக்கக்கூடும். சூனியக் காரனின் மந்திரக்கோலைப் போல அது எப்போதும் அவனோடேயே இருக்கும். 

 காலிங்கன் நேர்த்தியாக உடுத்தியிருப்பான். தாடியையும் மீசையையும் அழகாக ஒதுக்கியிருப்பான். காதின் கீழ்வரை கிருதா நீண்டிருக்கும். ஊதிவத்தியின் புகை நெளிவதுபோல தலைமயிர் காற்றில் அசைந்துகொண்டிருக்கும். அவன் கண்களை நான் ஒரு போதும் கூர்ந்து பார்த்ததில்லை. அவ்வளவுக்கு கண்களை கூசச்செய்யும் பிரகாசத்தோடு அவை இருக்கும். 

 காலிங்கனின் கண்கள் வசியம் நிரம்பியவை என்றும், அவன் கண்களை கூர்ந்து பார்ப்பவர்கள் காலஞ்செல்லச் செல்ல கண் பார்வை மங்கிச் செத்துப் போய்விடுவார்கள் என்றும் ஊருக்குள் ஒரு கதை உலாவிக்கொண்டும் இருந்தது. அந்தக் கதையை நாங்கள் உருவாக்கி இருக்கவில்லை என்பதால் அது எங்களை அச்சப்படுத்திக் கொண்டே இருந்தது. அந்தக் கதையின் உண்மை பொய் பற்றி பகுத்தறியும் அறிவும் ஆவலும் எங்களுக்கு இருந்தில்லை. பெரியவர்கள் அச்சமூட்டுவதற்காக எண்ணற்ற கதைகளைச் சிறுவர்கள் மீது திணித்திருக்கிறார்கள். அக்கதைகள் அடித்தளமற்றவை என்பதை சிறுவர்கனாகிய நான் அப்போது அறிந்திருக்கவில்லை. 

 நான் தவறுசெய்யும் போதெல்லாம் அம்மா ஒவ்வொரு கதைகளைக் கூறுவார். அந்தக் கதைகள் பெரும்பாலும் அச்சமூட்டும் கதைகளாகவே இருந்தன. அப்பா அப்படியில்லை அவருக்கு கதை சொல்ல நேரம் கூட இல்லை. அதிக கோபம் என்மீது ஏற்படும் போதெல்லாம் ஒன்று அதியுச்சமான வன்முறையைக் கையிலெடுப்பார். வீட்டுக்கு முன் வளர்ந்திருந்த வேப்பமரத்தில் கட்டிவைத்து பூவரசம் தடியால் சாத்துவார். அத்தோடு அப்பாவின் கோபம் முடிந்துவிடும். இரவு எதுவுமே நடக்காததைப் போல எனக்கு சோறை ஊட்டிக்கொண்டே தானும் சாப்பிடுவார். அப்பாவின் கடின உழைப்பு அவர் தேகம் முழுவதிலும் தெரியும். கைகள் முறுக்கேறி மல்யுத்த வீரனின் தோற்றத்தோடு இருக்கும். அப்பா பெரிதாக கதைத்துக் கொள்ளமாட்டார். அதிதமான தன் மகிழ்ச்சியை என்னைக் கட்டி அணைத்து முத்தமிடுவதன் மூலம் வெளிப்படுத்திக்கொள்வார். அந்த வகையில் நான் என் சகோதரனை விடவும் அதிஸ்ரம் குறைந்தவன். அவன் அப்பாவிடமிருந்து அதிக முத்தங்களையும் நான் அதிக அடிகளையும் வாங்கியிருக்கிறேன். சமயங்களில் என் சகோதரன் “நீ அப்பாவிடம் எத்தனை முத்தங்கள் வாங்கியிருக்கிறாய். உன்னை விடவும் நான் எத்தனை மடங்கு பெற்றிருக்கிறேன் தெரியுமா” என்று கேட்டு ஏளனமாகப் புன்னகை செய்வான். அப்போது நான் “உன்னை விட நான்தான் அதிக அடிவாங்கியிருக்கிறேன். அந்த வகையில் என் கணக்குக்கு கிட்டக்கூட நீ வரமாட்டாய்” என்று சொல்லி அவனை எரிச்சலூட்டுவேன். 

காலிங்கனை நான் காணப்புறப்படும் ஒவ்வொரு இரவிலும் நான் கடவுளிடம்; அப்பா கண்விழித்து அருண்டு என்னை கையும் மெய்யுமாக பிடித்துவிடக்கூடாது என்று பிரார்த்தித்துக்கொள்வேன். அப்பாவுக்கு காலிங்கன் என்ற நபர் ஊரில் இருக்கிறாரா என்று தெரிந்திருக்குமோ தெரியாது. அப்பா ஊர் சோலிகளில் ஈடுபடுவதில்லை. மாலை ஆறுமணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவார். அன்று வேலைக்காகப் பெற்றுக்கொண்ட சம்பளத்தை அம்மாவிடம் கொடுத்துவிட்டு தன் காரியங்களை ஆற்றத்தொடங்கிவிடுவார். அம்மாவோடுகூட அதிகம் பேசமாட்டார். அம்மாவும் அப்படித்தான் அப்பா வந்தவுடன் அவருக்கு வேண்டிய எல்லாவற்றையும் நியமம் தவறாது செய்துகொடுப்பார். நானும் என் சகோதரனும் அப்பா வீட்டுக்குள் வந்தவுடன் புத்தகங்களை எடுத்துக்கொண்டு எமக்காக ஒதுக்கப்பட்ட மூலைகளுக்குச் சென்று படிக்கத்தொடங்குவோம். நான் பெரும்பாலும் படிப்பதாகப் பாசாங்குதான் செய்துகொண்டிருப்பேன். 

 ஊரின் மேற்குக் கரை வயல்களாலானது. ஓருநாள் மாலை நான் வயலில் விளைந்திருந்த கதிர்களை அளைந்து விளையாடிக்கொண்டிருந்த போதுதான் அந்த அதிசயத்தைக் கண்டேன். சூரியன் வானத்திலிருந்து சடுதியாக கீழிறங்கிக்கொண்டிருந்தான். நெற்கதிர்களின் மேலே மஞ்சள் பூஞ்சனை போல சூரியனின் ஓளி படர்ந்திருந்தது. வரம்பில் வெள்ளைக் குதிரையின் கடிவாளத்தை கையில் பற்றிக்கொண்டு காலிங்கன் நடந்துவந்துகொண்டிருந்தான். ஆங்கிலத் திரைப்படமொன்றின் கதாநாயகன் போல அவனது தோற்றம் இருந்தது. அவனது குதிரையின் உடல் பொன்னிறமாக சூரியனின் ஒளியில் தகதகத்தது. காலிங்கன் தன் கனக்கும் தோற்பையை குதிரையின் முதுகின் மேலே வைத்திருந்தான். குதிரை மிடுக்காக நடந்துகொண்டிருந்தது. அவன் என்னைத் தாண்டி ஊருக்குள் நுழைந்தான். அவனது பார்வை என்மீது பட்டுவிடாதா என்று நான் அவனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் என்னைப் பொருட்படுத்தவில்லை தாண்டிச் சென்றுகொண்டேயிருந்தான். 

காலிங்கன் வெள்ளைக் குதிரையோடு ஊருக்குள் வந்த செய்தியை நான் என் நண்பன் அகிலுக்கு பகிர்ந்துகொண்ட போது அவனது கண்ணகள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. அவன் என்னை பொறாமையுடன் பார்த்தான். நாங்கள் அன்றிரவு காலிங்கனைக் காணுவதற்கான நேரத்தில் அவனது வெள்ளைக் குதிரையைப் பார்த்துவிட முடியும் என்று நம்பிக்கையுடன் நள்ளிரவுக்காக காத்திருத்தோம். 

 நள்ளிரவில் மிதந்துவந்த வீணையின் ஒலியைப் பிடித்தபடி காலிங்கனின் இருப்பிடத்தை அடைந்தேன். அங்கு என் நண்பர்கள் பலரும் காத்திருந்தனர். அவர்களிடம் வெள்ளைக் குதிரை பற்றிய கதை பரவியிருந்தது. எல்லோரும் என்னை நெருங்கியவர்களாக தம் குரல்களை மந்தமாக்கி “உண்மையில் நீ குதிரையைக் கண்டாயா?” என்றார்கள். நான் அவர்களின் குரலிலும் மந்தமான குரலில் “அம்மா மீது சத்தியமாகக் கண்டனான்” என்றேன். “அப்படி என்றால் இப்ப குதிரை எங்கே?” என்று இன்னொருவன் கேட்டான். “எனக்குத் தெரியாது” என்றேன். அவர்களை என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். “நல்லா கதை விடுறாயடா” என்று ஒருமித்த குரலில் சொல்லி மந்தமாகச் சிரித்தார்கள்.

 காலிங்கன் கண்ணாடிக் குவளையில் செந்நிறமான திரவத்தை ஊற்றி வைத்திருந்தான். அவனது மங்கலான விளக்கு வழமையிலும் மங்கலாக ஒளிர்ந்தது. அவனின் கைகள் வீணையின் தந்திகளை மீட்டிக்கொண்டிருந்திருந்தன. இடைக்கிடை மதுவையும் பருகிக்கொண்டான். அவனது கண்கள் பூனையின் கண்களைப் போல பச்சையாக ஒளிர்ந்தன. அகில் “உந்த பச்சைக் கண்களைப் பார்க்காதையடா இரத்தம் கக்கிச் செத்துப்போய்விடுவாய்” என்ற புதுக் கதையைச் சொன்னான். நான் என் கண்களை காலிங்கனிடமிருந்து விடுவித்துக்கொண்டேன். மனதை புதுவிதமான அச்சம் சூழ்ந்துகொண்டது. நண்பர்களின் அவமானத்தைத் தரும் வார்த்தைகளுடனும் அச்சத்தோடும் நான் அந்த இரவில் வீடு திரும்பினேன். என் கால்கள் எலியைப் பின்தொடரும் பூனையின் கால்களைப் போல மெதுவாக வீட்டினுள் நுழைந்தன. அப்பா திண்ணையில் படுத்திருந்தார். அவரின் குறட்டை ஒலி வழமையிலும் தாழ்வாகக் கேட்டது. காலிங்கனின் இசையால் வசியப்பட்ட பின் நான் வெளி விறாந்தையில்த்தான் படுக்கத்தொடங்கியிருந்தேன். அப்பா வெளித் திண்ணைக் குந்தில் படுத்திருப்பார். அறையினுள்ளே அம்மாவும் தம்பியும் உறங்குவார்கள். எனக்கு வெளி விறாந்தையே பலவழிகளிலும் வசதியாக இருந்தது. அப்பாதான் வீட்டுக்கான காவல் அரணின் முதல் அரணில் காவல். நான் இரண்டாவது அரணில் காவல் அப்பாவைத் தாண்டித்தான் யாராயினும் வீட்டினுள் நுழைய முடியும். அப்பாவை தாண்டுவது ஒன்றும் சிரமமனதில்லை. அப்பா படுத்தார் என்றால் அடுத்தநாள் காலையில்த்தான் விழிப்பார். நடுவில் வீட்டுக்குள் திருடன் புகுந்தாலும் அப்பாவுக்கு தெரிந்துவிட நியாயமில்லை. அப்பாவின் குணம் அறிந்துதான் கடவுள் எங்கள் வீட்டுக்கு திருடர்களை அனுப்புவதில்லை என்று நான் நினைத்துக்கொள்வேன். அப்பாவின் கடின உழைப்பு அவரை அசதியாக்கித் தூங்க வைத்துவிடுகிறது. என்னால் அந்த இரவு தூங்க முடியவில்லை. காலிங்கன் ஊருக்குள் குதிரையுடன்தான் நுழைந்தான். இப்போது அவனது குதிரைகள் எங்கே இருக்கும்.? ஒரு வேளை அவன் எங்காயவது தரவையில் குதிரையை மேய்ச்சலுக்கு கட்டியிருக்கக்கூடும். ஆனால் அவனது குடிலை அண்டியதாக எங்கும் தரவைகள் இல்லை. ஒரே மர்மாக எனக்குள்த் தோன்றியது. இரவு தன் கால்களால் மெல்ல நடந்துகொண்டிருப்பதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். வீட்டின் முன்புறத்தில் வளர்ந்திருந்த வேப்பமரத்திலிருந்து சில்வண்டு ஒன்று இரைந்துகொண்டிருந்தது. அதன் இரைச்சல் இரவை துயிலெழுப்பி அருட்டியது போன்றிருந்தது. அந்த இரைச்சலிலும் அப்பாவின் தாழ்ந்த குறட்டையெலி தெளிவாகக் கேட்டது. மறுநாள் நான் நண்பர்களைச் சந்தித்தபோது, அவர்கள் என்னை ஏளனம் ததும்பப் பார்த்துச் சிரித்தார்கள். எனக்கு அவமானமாக இருந்தது. நான் அகிலை அழைத்து “காலிங்கனிடம் வெள்ளைக் குதிரை இருப்பது உண்மை. அதை நான் என் இருண்டு கண்களால் கண்டேன்” அவன் என்னை பொருட்படுத்தாதவன் போல ஒரு ஏளனப் புன்னகையுடன் கடந்துபோனான்.

 0 

 நெஞ்சுரம் கோதை இறந்த அந்த நாள் எங்கள் ஊரே துயரத்தில் ஆழ்ந்துபோனது. ஊரின் மேல் யாரோ கறுப்புத் துணியைப் போர்த்திவிட்டது போல வானத்தில் கருமுகில் மூடிகிடந்தது. எங்கள் ஊரில் உள்ள பெண்களில் கோதைதான் அழகானவள். அவள் மீது மையல் கொண்டு பல ஆடவர்கள் அவளின் பின்னால் அலைவதை நான் கண்டிருக்கிறேன். கோதையிடம் அழகைப் போலவே திமிரும் அதிகமாக இருந்தது. அவள் யாரின் காதல் வலையிலும் விழுந்தவள் இல்லை. பெண்ணுக்குரியதான நளினமும் வனப்பும் நிறைந்த அவள், மனவலிமை மிகவும் உடையவளாக இருந்தாள். அவளின் மனவுறுதியயே நெஞ்சுரம் என்ற அடைமொழியாகியிருந்தது. கோதையின் கூந்தல் அவளின் பிருட்டத்திற்கும் கீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும். தலை மயிரை நடுவுச்சியாக வகிடெடுத்து ஒற்றைப் பின்னலாக கட்டியிருப்பாள். அவளது இமைகள் பறவையின் இறகுகள் போல படபடத்துக்கொண்டிருக்கும். உதடுகளில் நிரந்தர குறுநகை தேங்கிக்கிடக்கும். 

நாங்கள் அவளை கோதை அக்கா என்றுதான் கூப்பிடுவோம். எங்களில் அவளுக்கு நிறைந்த அன்பு. நாங்கள் பாடசாலை முடிந்து வரும் போதெல்லாம் தன் தோட்டத்தில் பறித்த ஏதாவது கனிகளை எங்களுக்கு தின்னக்கொடுப்பாள். அவளது நகைச்சுவை ததும்பும் பேச்சைக் கேட்பதற்காகவே மாலை வேளைகளில் அவளது வீட்டுக்குச் செல்வோம். ஓயாது ஒலியெழுப்பும் பறவையைப் போல அவள் பேசிக்கொண்டே இருப்பாள். அவள் கூறும் கதைகள் பெரும்பாலும் சரித்திரகாலத்துக் கதைகளாக இருக்கும். அவளின் கதை மாந்தர்கள் இரவுகளில் அலைபவர்களாகவும் பறவைகளுடன் சிநேகம் கொள்பவர்களாகவும் இருப்பார்கள். அவள் கதை சொல்லும் போதெல்லாம் தன் உதடுகளை அடிக்கடி பல கோணங்களில் நெளித்துநெளித்து சுவாரசியம் ததும்பச் சொல்லிக்கொண்டிருப்பாள். அவளது வார்த்தைகள் வசிகரிக்கும் மந்திரம் போல எம்மை ஈர்த்துக்கொண்டேயிருக்கும். கோதையக்காதான் எங்களுக்கு கிட்டிப்புள் விளையாடச் சொல்லிக்கொடுத்தாள். அவளும் எங்களோடு சேர்ந்து விளையாடுவதுமுண்டு. அப்போதெல்லாம் எங்களிலும் வயது குறைந்த சிறுமியைப்போலாகிவிடுவாள். அவளது தாய் “நீ குமர் பொட்டையல்லோ குஞ்சு குருமனுகளைக் கூட்டி வைச்சு விளையாடிக்கொண்டிருக்கிறாய்” என்று கோதையக்காவை ஏசுவாள். “யார் சொன்னது நான் குமர் எண்டு நானும் சின்னப் புள்ளைதான்” என்று தாய்க்குச் சொல்லிவிட்டு எங்களோடு விளையாடிக் கொண்டிருப்பாள்.

 கோதையக்காவை யாதவன் அண்ணன் நீண்ட நாட்களாக சுற்றிக்கொண்டு திரிந்தான். யாதவன் அண்ணன் கோதையின் நிறத்துக்கு எதிரான நிறம். அவனது தேகம் எப்போதும் எண்ணையில் ஊறியதைப் போல மினுங்கிக்கொண்டிருக்கும். தலை மயிரை சீப்பிடாது பறக்கவிட்டிருப்பான். அவனது தலைமயிர்கள் நீண்டு வளர்ந்த கோரைப் புற்கள் போல காற்றில் அசைந்துகொண்டிருக்கும். உதடுகள் மேலே சிற்றெறும்புகள் மொய்த்திருப்பதைப் போல வழித்து முளைத்த மீசை முடிகள் இருக்கும். கட்டுக்கோப்பான கம்பீரமான தேகத்துடன்தான் அவன் இருந்தான். நான்கூட இரண்டு மூன்று தடவைகள் அவன் கோதையக்காவின் வீட்டின் முன்னால் சைக்கிளில் வட்டமடிப்தைப் பார்த்திருக்கின்றேன். அவனது காதலை கோதையக்கா ஏற்றுக்கொள்ளவில்லை. அவன் தன் முயற்சியை கைவிட்டதாகவும் தெரியவில்லை. கரைப்பார் கரைச்சால் கல்லும் கரையும் என்ற பழமொழியை அவனுக்கு யாரோ சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும் தன் முயற்சியில் சற்றும் தளராது தொடர்ந்துகொண்டேயிருந்தான். 


 ஒரு நாள் யாதவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். அவனது சாவுக்கு காதல் தோல்விதான் காரணம் என்று ஊரில் கதைத்துக் கொண்டார்கள். கோதையக்காவிடம் தன் விருப்பத்தை அவன் சொன்னதாகவும். அவள் “உன்ர மூஞ்சிக்கு கோதை கிடைப்பாள் எண்டு மனப்பால் குடிக்காதே” என்று அவனை இகழ்ந்து பேசியதாகவும் அதனால் மனமுடைந்து அவன் தற்கொலை செய்து கொண்டதாகவும் கதை பரவியிருந்தது. சிறுவர்களாகிய நாங்கள் அன்றிலிருந்து கோதையக்கா வீட்டுக்கு செல்வதைத் தவிர்த்துக்கொண்டோம். இது ஒரு பெரிய காரணமாக இல்லாத போதும் நாங்கள் நண்பர்கள் ஒருமித்த முடிவாக இதை எடுத்திருந்தோம். கோதையக்காவுக்காக நாங்கள் ஒதுக்கிய மாலை நேரத்தின் பொழுதை வயல் வரம்புகளில் ஓடித்திரிந்து தும்பிகளை பிடிப்பதற்காகச் செலவழித்துக்கொண்டோம். நாங்கள் பாடசாலை விட்டு வரும்போது அவளது வீட்டின் முன்னால் கோதையக்கா நின்றுகொண்டிருந்தால் நாங்கள் வேறுபாதையால் திரும்பிச் சென்றுவிடுவோம். ஏதேர்ச்சையாக தனித்து சந்தித்துக்கொண்டால் ஏதாவது சாட்டுச் சொல்லிவிட்டு தப்பித்துவிடுவோம்.


 கோதை அக்காவின் உடல் வயற்கரையில் கிடந்ததை வயலுக்கு தண்ணீர் கட்டச் சென்ற காந்தி அண்ணன்தான் காலையில் கண்டு, அவளின் வீட்டுக்கு அறிவித்திருந்தார். அவளின் இறப்பு கொலையா தற்கொலையா என்று புரிந்துகொள்ள முடியாத மர்மாக இருந்தது. ஊர்ச்சனமெல்லாம் வயற்கரையில் திரண்டு நின்றனர். அவளது முகத்தை நான் மிக அண்மையாகச் சென்று பார்த்தேன். அவளது உதடுகளில் அதே குறுநகை தேங்கிக்கிடந்தது. கண்களின் மடல்கள் மெல்லத்திறந்திருந்தன. இரண்டு பிறை நிலாக்கள் போல அவளது கண்களின் வெண்திரைகள் தெரிந்தன. என் நெஞ்சு துக்கத்தால் அடைத்துக்கொண்டது. எங்கள் ஊரின் பேரழகியை இழந்த துயரத்தில் துக்கித்து நின்றேன். 

 வயலில் திரண்டு நின்ற சனக்கூட்டத்தின் நடுவே நான் காலிங்கனைக் கண்டேன். வழமையாக அவன் கூட்டங்களில் தென்படுவதில்லை. தனியனாகத்தான் திரிவான். அதுவும் அவனைக் காண்பதென்பது அபூர்வமானது. காலிங்கனின் முகத்தில் எவ்விதமான உணர்ச்சிகளும் வெளிப்படவில்லை. வெள்ளை சேட்டும் நீல ரெனிம் ஜீன்சும் அணிந்திருந்தான். தோளில் கனக்கும் தோற்பை தொங்கிக்கொண்டிருந்தது. நீண்டதொரு பயணத்தை முடித்து வருபவனைப் போலிருந்தான். விடுப்புப் பார்க்கும் எண்ணத்தில் அவன் அங்கு வந்திருக்கக்கூடும் என்று எண்ணிக்கொண்டேன். அவனுக்கும் எங்கள் ஊருக்கும் எந்த நெருக்கமும் இருந்ததில்லை. அவனது பிரசன்னம் எல்ரோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அவனையே சிலர் வேடிக்கை பார்ப்பதையும் கண்டேன். சில பெண்கள் அவனைக் கடைக் கண்ணால் விழுங்கிக்கொண்டிருந்தனர். 

 மதியத்தை அண்மித்த பொழுதில்தான் காவல்துறை வயற்கரைக்கு வந்தது. அது வரை கோதையக்காவின் உடல் வெய்யிலில் உலர்ந்துகொண்டிருந்தது. அவளது வெண்ணிறச் சரிரத்தில் ஈக்கள் கூட மொய்த்துக்கொண்டிருந்தன. அவளது தாயும் தந்தையும் அழுது சோர்ந்துபோய் தென்னை மரத்தின் கீழே கிடந்தனர். காவல்துறை, காந்தி அண்ணையைக் கூப்பிட்டு ஏதோவெல்லாம் விசாரித்தது. பிறகு கோதையின் தாய் தந்தையிடம் வந்து விசாரித்துக்கொண்டிருந்தனர். அரை மயக்கத்தில் அவர்கள் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். மரண விசாரணை அதிகாரிகள் எல்லாம் வந்திருந்தனர். யார்யாரையோவெல்லாம் விசாரித்து எதையெதையோவெல்லாம் எழுதிக்கொண்டு சென்றனர். 

 யாதவன்தான் அவளை தன்னோடு சேர்த்துக்கொண்டதாய் அம்மா சொல்லிக்கொண்டிருந்தாள். “அந்தப் பொடியன் கேக்கேக்கையே இவள் ஓமெண்டு சொல்லியிருக்கலாம். பெரிய அழகாம் அதில என்ன இருக்கு கடைசியாக அற்ப ஆயுசில் செத்ததுதான் மிச்சம். கடைசில நெருப்புத்;தான் தின்னப் போகுது. இருக்கேக்க என்ன ஆட்டம் ஆடுவினும் செத்தால் ஒண்டுமில்லை. இனி இரண்டும் பேயாக ஊரில் அலையப் போகுதுகள் ஆசை நிறைவேறாத ஆவிகள் ஆண்டவனிடம் போகாது அந்தரித்துத்தான் திரியுங்கள்.” 

 அம்மாவின் வார்த்தைகள் திகிலூட்டின. ஒரு வேளை என்னை அச்சப்படுத்தவும் அப்படிச் சொல்லியிருக்கக் கூடும் எனவும் நினைத்தேன்.

 கோதையக்கா யாதவனை காதலிச்சிருக்கலாம். எனக்கும் அது சரியெண்டுதான் படுகிறது. கடைசியில இரண்டு பேருதான் செத்தது மிச்சம்.

 நாங்கள் நண்பர்கள் மாலையில் சந்தித்துக்கொண்ட போது கோதையக்கா பற்றியே கதைத்துக்கொண்டோம். அவளோடு கோவம் கொள்ளாதிருந்திருக்கலாம் என்று அகில் எங்கள் குற்றவுணர்ச்சியை தூண்டிவிட்டான். இளைஞர்கள் ஊரின் சனசமூக நிலையத்தில் ஸ்பீக்கர் கட்டி சோக கீதத்தை இசைக்க விட்டனர். இடைக்கிடை கவிதைகளும் வாசித்தனர். ஊரே துக்கத்தில் உறைந்துகிடந்தது. 

 நாங்கள் கோதையக்காவின் வீட்டுக்குச் சென்றோம். வீட்டின் வரவேற்புக் கூடத்தில் அவளின் உடல் வைக்கப்பட்டிருந்தது. பெண்கள் உடலைச் சூழ்ந்திருந்து அழுதுகொண்டிருந்தனர். கோதையக்காவின் உடல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிவப்பு நிற சோலை உடுத்திவிடப்பட்டிருந்தாள். அவளது நெற்றியில் கூம்பு வடிவப் பொட்டு இடப்பட்டிருந்தது. முகம் உலர்ந்துகிடந்தது. கண்கள் இப்போது இறுகி மூடியிருந்தன. அவளது உதடுகளில் அதே குறுநகை தேங்கிக்கிடந்தது. சிறுவர்களாகிய நாங்கள் அவளுக்கு முன்னால் கண்கள் பனிக்க நின்றுகொண்டிருந்தோம். எங்கள் ஊரின் பேரழகி பேசாது படுத்திருந்தாள். அவளது உதடுகளை யாரோ பசையிட்டு ஒட்டிவிட்டது போலிருந்தது. நாங்கள் மரணவீட்டிலிருந்து வெளியேறி நேராக மைதானத்துக்குத்தான் சென்றோம். கோதையக்காவின் நினைவாக அன்று கிட்டிப்புள் விளையாடினோம். அவளும் எங்களோடு சேர்ந்து விளையாடுவதுபோலிருந்தது. 

 மறுநாள் கோதையக்காவின் சடலத்தை மயானத்துக்கு எடுத்துச் சென்றார்கள். நீண்டதொரு ஊர்வலமாக இருந்தது. எங்கள் ஊரின் பேரழகியின் கடைசி ஊர்வலமது. ஊர் இளைஞர்கள்தான் பாடையைக் காவிச் சென்றார்கள். சோககீதம் எங்கள் ஊரையே நிறைத்திருந்தது. சிறுவர்களாகிய நாங்கள் சனசமூக நிலையத்தின் முன்னாலிருந்த மண்டபத்திலிருந்து அந்த ஊர்வலத்தைப் பார்த்துக்கொண்டிருந்தோம். எங்களை அறியாமலேயே கைகளை அசைத்து கோதையக்காவிற்கு இறுதி விடைகொடுத்தோம். அவளது வார்த்தைகளை இனி கேட்க முடியாது. அவளது குறுநகையை இனிப் பார்க்க முடியாது. துக்கம் இதயத்தை மூடிப் பெருஞ்சுவராக வளர்ந்தது. நாங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. 

 சூரியன் உருகி வழிந்துகொண்டிருந்த அந்த மதியத்தில் கோதையக்காவின் உடலை தீ தின்னக்கொடுத்துவிட்டு எல்லோரும் திரும்பி வந்தனர். மாபெரும் வெறுமை ஊரையே சூழ்ந்துகொண்டதான பிரமை எனக்குள் ஏற்பட்டது.

 நெஞ்சுரம் கோதை தற்கொலை செய்துகொள்ளத்தக்கவள் அல்ல. அவளின் மனவுறுதி பாறையிலும் உறுதியானது என்பதை நான் அறிவேன். அவளின் சாவின் மர்மம் அவிழ்க்க முடியாத புதிரைப் போல என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. 


 மாலையில் அப்பா வழமைக்கு மாறான தடுமாற்றத்துடன்தான் வீட்டுக்குள் நுழைந்தார். அவரது கண்கள் சிவப்பேறியிருந்தன. அவரிடமிருந்து குமட்டத்தக்கதான நெடி வீசிக்கொண்டிருந்து. வந்தவர் திண்ணையில் அப்படியே சரிந்துகொண்டார். அப்பாவிடமிருந்த மாற்றம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் அம்மாவிடம் “ஏன் அப்பா ஒரு மாதிரியிருக்கிறார். கெட்ட மணம் அடிக்கிது” என்றேன். “அவருக்கு சுகமில்லையடா. அதுதான் மருந்து குடித்திட்டு வந்திருக்கிறார் போல” என்றவாறு அப்பாவுக்கு அருகில் அமர்ந்துகொண்டாள். அப்பா மது அருந்துவதை அம்மா மறைக்கின்றாள் என்பதை புரியமாலிருக்கும் வயதில்லை எனக்கு. ஆனால் ஏன் அப்பா இன்று குடித்துவிட்டு வரவேண்டும் என்பதுதான் எனக்குப் புரியாமலிருந்தது. 

 அம்மா அன்று அப்பாவுக்கு அருகில் அமர்ந்திருந்தாள். அவளது முகத்தில் எந்தச் சலனமும் இருக்கவில்லை. அவளது கண்கள் இரவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. நிறை போதையின் மயக்கத்தில் அப்பா புரியாத மொழியில் ஏதேதோவெல்லாம் புசத்திக்கொண்டிருந்தார். அம்மா அவற்றையெல்லாம் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. 

 மங்கி எரிந்து கொண்டிருந்த சிமிலி விளக்கில் ஓரிரு பூச்சிகள் முட்டி முட்டிப் பறந்துகொண்டிருந்தன. இருளின் கனத்த சுவரில் ஏதோ ஒரு பட்சியின் குரல் மோதி எதிரொலித்துக்கொண்டிருந்தது. திடுமென எழுந்து கொண்ட அம்மா சிமிலி விளக்கை எடுத்துக்கொண்டு அறையினுள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள். எனக்கு அந்த இரவு ஒரு புதிர்போலவே இருந்தது. 

 அந்த இரவு காலிங்கனின் வீணையிலிருந்து இசையெழவில்லை. எனது மனம் அவனது இசைக்காக தாகித்தது. இமைகளுக்கிடையில் ஈக்குத்துண்டு ஒன்றை வைத்ததைப் போல இமைகள் அண்டமறுத்தன. நான் இரவின் நடுவில் ஒரு பறவையின் சிறகிழை போல மிதந்துகொண்டிருந்தேன். அப்பாவின் குறட்டை ஒலி காலிங்கனின் வீணையொலிக்குப் பதிலாக உரத்து கேட்டுக்கொண்டிருந்தது. காதுகளை கூர்மையாக்கி திறந்து வைத்துக்கொண்டேன். காலிங்கனின் வீணையிலிருந்து ஒலி பிறக்கவில்லை. நான் பித்துப்பிடித்தவனாகி படுக்கையிலிருந்து எழுந்து காலிங்கனின் குடிலை நோக்கி நடக்கத்தொடங்கினேன். 

காலிங்கன் முன்னால் அவனது வீணை கவிழ்ந்து கிடந்தது. கையில் மதுக்கோப்பையை நிரப்பி வைத்திருந்தான். நான் மட்டுமே தனியனாக நின்றிருந்தேன். என்னை ஒரு விதமான அச்சம் சூழ்ந்துகொண்டது. நான் சடைத்து வளர்ந்திருந்த பூவரசின் பின்னால் பதுங்கியிருந்து காலிங்கனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் மதுவை இடைக்கிடை உறிஞ்சிக்கொண்டு யாரோடோ உரையாடுவதைப் போல பேசிக்கொண்டிருந்தான். அவன் போதையின் மயக்கத்தில் புலம்புவது போல எனக்குத் தோன்றியது. சற்றுக்கெல்லாம் குலுங்கிக் குலுங்கி அழுதவாறே எதையோ புசத்திக்கொண்டிருந்தான். அவன் என்ன பேசுகின்றான் என்பதை அறிய வேண்டும் என்ற ஆவல் என்னைத் தூண்டியது. நான் சருகுகளில் ஒலி எழதவாறு முன்னகர்ந்து அவனை அண்மித்தேன். அவன் குரலை என்னால் கேட்க முடிந்தது.

 “பெண்ணே நான் உனது சரீரத்தில் மயங்கிக் கிடந்தேன். அது மது தரும் போதையிலும் மிகுந்த மயக்கந் தருவது. உன் சரிரத்தில் ஒரு அட்டையாய் ஊர்வதற்காகத்தான் பெண்ணே உன் கோப்பையில் என் மதுவை நிரப்பினேன். உன் தேகம் சிலிர்க்கும் மரமாகி பின் காடாகக் கிளைக்கும் காலத்திற்காகத்தான் காத்திருந்தேன்..” அவனது வார்த்தைகள் உடைந்த கண்ணாச் சில்லுகளாய்ச் சிதறின. மதுவின் மயக்கத்தில் அவனது உதடுகள் கட்டை மீறி திறந்தன. அவனது வார்த்தைகள் நெளிந்து வளைந்து குழிகளில் தேங்கிச் சுழிக்கும் சிற்றோடையாய் பெருகிக்கொண்டிருந்தன. 

 இரவின் நிசப்தத்தில் விழுந்து சிதறும் அவனது குரல் என்னை அச்சமூட்டியது. அவனது கண்களில் செந்நிறம் ஏறித் ததும்புவது போல விளக்கின் ஒளியில் கண்கள் பிரதிபலித்தன. சட்டை அணியாத அவன் தேகத்தில் உரோமங்கள் வரிவரியாக அடர்ந்திருந்தன. கழுத்திலிருந்து வியர்வை வழிந்துகொண்டிருந்தது. கன்னங்களில் உப்பிப் பெருத்திருப்பதைப் போலத் தெரிந்தன. மிகு வெறியின் உச்சத்தில் களி கொண்டவன் போல திடீரென் எழுந்து ஆடத்தொடங்கினான். அவனது கால்கள் தரையை ஊன்றி மிதித்தன. விளக்கின் ஒளியில் அவனது நிழல் விசுபரூபம் போல் ஓங்கி வளர்ந்த மரங்களில் தெரிந்தது. ஊழியின் கடைக்கூத்துப் போல அவனது ஆட்டம் இருந்தது.

 “பெண்ணே நீ மகத்தானவள். பெண்ணே நீ மகத்தானவள்” 

அவனது குரலே அவனது சரீரத்தை பிளப்பது போலிருந்தது. திடுமென தரையில் கிடந்த வீணையை எடுத்து ஓங்கி நிலத்தில் அடித்தான். அது நூறு துண்டுகளாய்ச் சிதறியது. 

 அவனது நெஞ்சு மேலும் கீழுமா எழுந்து தாழ்ந்தது. தரையில் விழுந்து கைகளால் மண்ணை அள்ளி வானத்தை நோக்கி எறிந்தான். கணநேரத்தின் பின் இயல்பாக துயில் நீங்கி எழுபவனைப் போல எழுந்து மீளவும் மதுக் கோப்பையை நிரப்பிப் பருகத்தொடங்கினான். 

நான் அங்கிருந்து வெளியேறினேன். காலிங்கனின் விசித்திரமான செயல்கள் எனக்குள் அச்சத்தை ஓங்கி வளர்த்தன. அவன் “பெண்ணே! பெண்ணே!” என விழித்தது ஒரு வேளை கோதையைத்தானா? என் மனம் நிலைகொள்ளாமல் சுழன்றது. கோதையக்கா காலிங்கனின் அழகில் மயங்கியிருப்பாளா? அவள் நெஞ்சுரம் மிக்கவள் சாத்தியமே இருக்காது. காலிங்கன் வேறுயாரையாவது நினைத்துப் புலம்பியிருக்கக்கூடும் என்று நினைத்தேன். 

வீட்டினுள் நுழைந்தபோது அப்பாவின் உடல் திண்ணையில் அசைவதைக் கண்டேன். பாதங்களை மெதுவாகத் தரையில் பொருத்தி வீட்டினுள் நுழைந்தேன். “டேய் எங்கையடா… போட்டுவாற..” மதுவின் நெடியடிக்கும் அப்பாவின் குரலில் வெருண்டு தரையில் விழுந்தேன். அவர் எழுவதற்கு முயற்சி செய்து தோற்றுக்கொண்டேயிருந்தார். அது எனக்கு சந்தோசமாக இருந்தது. நான் எனது படுக்கையில் விழுந்தேன். இருள் முழுமையும் என்னில் சூழ்ந்து அழுத்துவது போல இருந்தது. ஒரு வேளை அப்பா விடிய போதை தெளிந்து எங்கே இரவு போய் வந்தாய் எனக் கேட்கக்கூடும் ஒண்டுக்கிருக்க போனனான் என்று ஒரு பொய்யைச் சொல்ல முடியும். ஆனால் சவுக்காய் வளைந்து விசுக்கும் பூவரசம் கம்புக்கு என்ன பதிலைத்தான் சொல்ல முடியும்.

 0 

 அகிலை மறுநாள் சந்தித்தபோது அவன் எனக்குக்கூறிய விடயம் என்னை அதிர்ச்சிகொள்ள வைத்தது. “டேய் கோதையக்கா சாகேக் அவவவின்ர வயித்துக்குள்ள குழந்தையிருந்ததாமடா” இரகசிய முலாமிட்ட வார்த்தைகளை என் காதுக்கள் செலுத்தினான். பூனையின் சிலிர்த்த தேகம் போல் என் தேகம் சிலிர்த்தது. 

 “உனக்கு யாராடா சொன்னது” 

“அப்பா அம்மாவுக்கு சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டனான். அதுதானாம் அவ செத்துப்போனவா” “அப்ப அந்த குழந்தைக்கு யாரடா அப்பாவாம்”

 “அது யாரென்று தெரியாதாம்” 

எனக்குப் புதிரொன்று அவிழ்ந்ததைப் போலிருந்தது. நான் அகிலுக்கு இரவு காலிங்கன் நடந்து கொண்ட விதம் பற்றியும் அவன் புலம்பிய வார்தைகள் பற்றியும் சொன்னேன். அவனது கண்கள் ஆச்சரியமும் அச்சமும் ஒருங்கு சேர விரிந்தன. 

நானும் அகிலும் காலிங்கனின் குடில் இருந்த இடத்தை நோக்கி ஓடினோம். குடில் இருந்த அடையாளமே அங்கிருக்கவில்லை. நான், அவன் ஓங்கி உடைத்த வீணையின் துண்டுகள் எங்காவது இருக்குமா எனத் தேடினேன். ஒன்றும் கையில் சிக்குப்படவில்லை. சருகள் குவிந்த வெறும் முற்றமாக அந்த இடம் காட்சியளித்தது. 

 மாலையில் சிறுவர்கள் நாங்கள் மைதானத்தில் கூடியிருந்தோம். 

“காலிங்கன் எங்கே சென்றிருப்பான்” என்பதே எங்கள் இருவரிடமும் பெருங்கேள்வியாக இருந்தது. வழமையாக அவன் பகற்பொழுதில் தென்படுவது குறைவாக இருந்தாலும். அவனது கூடாரம் அவனது இருப்பை சொல்லிக்கொண்டே இருக்கும். இன்று கூடாரம் இல்லை என்பது கவலையாகவும் இருந்தது. சிறுவர்களாகிய நாங்கள் எங்களது கோணங்களிலேயே காலிங்கனின் இன்மை குறித்து கருத்துக்களை சொல்லிக்கொண்டிருந்தோம்.

 “காலிங்கன் மாயத்தனங்கள் மிக்கவன். அவன் தன் இருப்பிடத்தோடு மறைந்திருக்கக்கூடும். பிறகு ஒருநாள் அவன் மீளவும் தோன்றக்கூடும்” என்று கமலக்கண்ணன் சொன்னான்.

 “காலிங்கன் பிறப்பும் இறப்பும் அற்றவன். இசையில் நிரம்பியிருப்பவன். அவன் வீணையிலிருந்து மாறி புல்லாங்குழலுடன் எங்காவது சென்று வசிக்கக்கூடும்” என்று குமரன் சொன்னான்.

 “காலிங்கன் பேரழகன். அவன் அழகில் மயங்கிய தேவதைகள் அவனை எடுத்துச்சென்றிருக்கக்கூடும்” என்று விநோதன் சொன்னான். 

“காலிங்கன் மதுப்பிரியன். அவன் எங்காவது தனித்திருந்து மதுவை அருந்திக்கொண்டிருக்ககூடும்” என்று சாதுளன் சொன்னான்.

 காலந்தாழ்த்தித்தான் மாதுளன் மைதானத்துக்கு வந்திருந்தான். அவன்தான் சொன்னான். தான் இன்று காலை வயலுக்கு தந்தையுடன் சென்றபோது வயலின் மேற்குக் கரையில் காலிங்கன் வெள்ளைக்குதிரையில் சென்றதாகவும் அந்தக் குதிரையின் மேலே அசப்பில் கோதை அக்காவை போல ஒரு பெண் இருந்தாகவும் சொன்னான். 

நாங்கள் எல்லோரும் மாதுளனையே பார்;த்துக்கொண்டிருந்தோம். காலிங்கனின் வெள்ளைக் குதிரை ஒரு அவிழ்க்க முடியாத புதிரைப் போல குளம்பொலி சிதற என் மனதினுள் ஓடிக்கொண்டிருந்தது.

 0 

 “நான் என்ன குறை வைச்சன். என்னட்ட இல்லாத என்னத்தை அவளிட்டை கண்டனீ” அம்மாவின் குரல் இரவின் மையத்தில் விழுந்து சிதறியது. “ வாயை மூடடி வேசை” “யார் வேசை நானோ அவளோ” குரலில் உரப்புத் தொனிக்க அம்மா கத்தினாள். தொடர்ந்து அம்மாவின் கன்னங்கள் அதிர அப்பாவின் மரத்த கை அம்மாவைத் தாக்கியது. நான் என் தேகத்தை சுவரோடு ஒட்டிக்கொண்டு ஒதுங்கிக்கொண்டேன். அப்பாவின் வார்தைகள் கனத்து உறைந்து போயின. அம்மாவின் வார்த்தைகள் விசும்பல்லோடு வெளிவந்துகொண்டிருந்தன. துயரத்தின் உச்சத்தில் அம்மா ஓலமிட்டு அழுதாள். எனக்கு அம்மாவின் அழுகையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒரு போதுமே எங்கள் வீட்டில் நிகழ்ந்திராத காட்சிகளை யார்யாரோவெல்லாம் விளக்குகளைக் கொழுத்திக்கொண்டு கூர்ந்து பார்த்துக்கொண்டிருப்பது போலத் தோன்றியது. அந்த இரவில் காலிங்கனின் வீணையின் ஒலி கூட இல்லை. வெறுமையான வெளி;யில் எங்கள் வீடுமட்டும் ஒரு நாடக அரங்காகக் காட்சியளித்தது. தூக்கமற்ற என் கண்களின் வழி பாம்புகள் நுழைந்து மனதைத் தீண்டிக்கொண்டிருந்தன. நான் மெதுவாக எழுந்து அறையின் கதவைத் திறந்து என் சகோரனுடன் படுத்துக்கொண்டேன். அவன் எந்தச் சலனங்களாலும் அருட்டப்படாதவனாக உறங்கிக்கொண்டிருந்தான். என் மனத்தை குடைந்துகொண்டிருந்தது ஒரு கேள்வி “இந்த இரவை குழப்பிவிட்டிருக்கும் அவள் யார்?” நான் தூக்கமில்லாத இரவின் திருப்பங்களற்ற பாதையில் நடந்துகொண்டிருந்தேன். 

0 இந்த இடத்தில் இன்னொரு விடயத்தை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். காலிங்கனை கடைசியாக மாதுளன் கண்ட அன்றைய நாளின் இரவுதான் என் அப்பாவும் காணாமல் போயிருந்தார். 

 0 காலிங்கனை மீண்டும் சந்திக்கும் சந்தர்ப்பம் நிகழுமாக இருந்தால். நீங்கள் அவனிடம் கேட்க விரும்பும் அதே கேள்வியைத்தான் நானும் கேட்பேன். 

0 நன்றி - ஜீவநதி