26 ஜூன், 2010

செத்தவனின் விம்பமான நான்


சித்தாந்தன்

நான் கனவு காணத் தொடங்கியிருக்கிறேன்
வானத்தின் நிழலாய்
எனது முகம் வியாபித்துக்கிடப்பதாய்

இந்தக் காற்றின் தொடுகையை
முறித்துவிட்டால் போதும்
மூச்சுக் குழாய்கள் வெடித்து
ஆசுவாசமாய் தூங்கிவிடலாம்

காலையின் ஒலிகளை
கவிதைகளாய் என்னிடம் விட்டுப்போகும்
பறவைகளுக்குத் தெரிவதில்லை
மாலைச் சூரியனின் அந்திம ஒளியில்
எனது மாபெரும் கவிதைகளிலும்
குருதி படிந்து போவதை

முகங்களின் உலகத்தில்
தனித்தலையும் எனது முகத்தை
புராதன மனிதச்சாயல் விழுந்திருப்பதாய்
நண்பன் ஒருவன் சொன்னான்
அப்போதே நம்பியிருக்க வேண்டும்
நான் செத்தவனின் விம்பம் என்பதை

தலைக்குப் பின்புறம்
வலியெடுத்து மூளையும் குழம்பி
சாவுக் கயிற்று வலையில்
எல்லாக் கற்பனைகளும் மொய்த்திருக்க
நிழலெனத் தொடரும்
காலவானத்தின் உச்சியிலிருந்து
சூரியன் சிரிக்கிறது