சித்தாந்தன்
என்னுடலின் நெளிவுகளுக்கிடையில்
அவிழ்கிறது ஆடை
புலன்களைத் திறந்தவனின் நிர்வாணத்தை
காற்றின் கண்கள் மேய்கின்றன
கறுத்த இலைகளுடன் சடைத்திருக்கும்
பெரு மரத்தின் கீழ்
விக்கிரகமாய் இறுகியுள்ள கடவுளின் சிலை மேல்
சிறுநீர் கழிக்கும் நாய்
புனிதத்தின் அதியுன்னத இசையை வேட்டையாடுகிறது
பாதையெல்லாம்
தங்கள் முகங்களின் நிர்வாணத்தை
முகமூடிகளால் மறைத்திருக்கும் மனிதரின்
வார்த்தைகளின் அசிங்கம்
உரோமக் கால்களில் எச்சிலாய் வழிகிறது
எதையும் ஜீரணிக்க முடியாது
வீடு திரும்பும் என்னிடமிருந்து
ஆடையை உருவிப் போகிறது எதிர் வீட்டு நாய்
நான் நாயாகவும்
நாய் நானாகவுமாக இருக்கும்
மிகப்பிந்திய நிமிடங்களில்
நாய்களின் அதியுன்னத இசையை
என் புலன்களால் வேட்டையாடத் தொடங்கினேன்
நாய்களைப் போலவே அலைகிறது
என் அதியுன்னத இசை
00
07 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக