10 ஜூன், 2010

அந்திமத்தின் சாபம்

சித்தாந்தன்

பூதங்களை வரைபவனின் கனவுகளுக்குள்
நுழைந்துகொண்டன தேவதைகள்

கடற்கரையில் மணல்வீடு கட்டிய அவன்
தேவதைகளுக்கான அறைகளை
வர்ணமடித்துச் செப்பனிட்டான்

ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமாக
வடிவமைக்கப்பட்ட குளியலறைகளுக்குள்ளும்
படுக்கையறைகளுக்குள்ளும்
உள்ளாடைகளைக் காயவிடும்
கொடிகளைக் கட்டினான்

அந்திமத்தில் வந்திறங்கிய தேவதைகள்
வானளவு அறைகளை அவனிடம் கேட்டன

அவன் கைகளை அகட்டி
பூதங்களைப் போல் விரிந்த வானங்களை
வரைந்து காட்டினான்

திருப்தியுறாத தேவதைகள்
அவனை மலடாகும்படி சாபமிட்டன

அவனின் மணல் வீட்டை
இழுத்துச் சென்றுவிட்டது அலை

சபிக்கப்பட்ட அவனின் குறியினுள்
இரைந்துகொண்டிருக்கிறது கடல்

அந்திமத்தின் வர்ணங்களில்
கரைந்துருகுகிறது வானம்

நன்றி- உயிர் நிழல்