11 ஆகஸ்ட், 2024

ஞானத்தின் கண்கள்

 சித்தாந்தன்


எழுந்தெரியும்

தீயின் சுவாலையில்

படர்கிறது பறவையின் சாயல்.

இலையெறிந்து

காற்றில் அசைகிறது மரம்.

தெறிக்கிறது

யாரோ துப்பிய வெற்றிலை எச்சில்.

படிகிறது

ஏதோவொன்றுக்காய் அடம்பிடிக்கும்

குழந்தையின் முகம்.

நெளிகின்றன

காலத்தால் பீடிக்கப்பட்ட

முதுமையின் ரேகைகள்.

காற்றில் இதழ்களை

விரிக்கிறது

படபடக்கும் புத்தகம்.

 

எரிந்தணைந்து அடங்கிய சாம்பலில்

புத்திருக்கின்றன

ஞானத்தின் கண்கள்.

00

இரவைக் குறித்துக் காத்திருத்தல்

சித்தாந்தன்









வீடு வந்து சேராத இரவைக் குறித்து

அச்சப்படாதிருங்கள்.

நாலாபுறமும் ஜன்னல்களைத் திறந்து வைத்து

ஒளியலையும் வெளிகளை வெறித்தபடி

விழித்திருங்கள்.

சலனமற்ற காற்றின் அசைவில்

அது

பனித்திவலைகளின் சாயலில் வந்து சேரக்கூடும்

நீங்கள் அச்சப்படாதிருங்கள்.

ஒரு புர்வீகமான கனவின்

இழையை அறுத்தெறிவது போலாய்

துயரங்களின் இழைகளை அறுத்து

எப்போதும் வற்றாத

ஒரு கீதத்தை இசைத்தபடியிருங்கள்.

அது இரவுக்கான கீதமாக இருக்கட்டும்.

நீங்கள்

விழித்திருக்கும் அதே தருணத்தில்

இரவு

உங்களின் குரலில் உங்களை அழைத்தவாறு

உங்களின் இமைகளின் கீழாக

கரும்படிவென படரக் கூடும்.

அதுவரை

உங்கள் விழிகளை அசையாது விழித்தபடியிருங்கள்.

அது ஒரு குழந்தையைப் போலாய்

வந்தபடியிருக்கக் கூடும்

அச்சப்படாதிருங்கள்.

00


10 ஆகஸ்ட், 2024

இயல்பின் வழியில் இயல்பின் மொழியில் எழுதப்பட்ட கவிதைகள்

 - நேதாமோகன் கவிதைகள்

சொற்களின் பின்னால் மறைந்திருக்கும் மர்மங்களை அவிழ்ப்பதிலிருந்து கவிதைகள் மீதான வாசிப்புத் தொடங்குகின்றது. தமிழ் கவிதை நவீன கவிதையாகவே நிலைபெற்றுவிட்டது. நவீன கவிதைக்குள்ளும் இன்று பல்வேறு தளமாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன- நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. மொழியினுள்ளே நிகழும் மாற்றங்கள் அதனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலக்கியவடிவங்களிலும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கும். மொழியின் இயங்குநிலையே அது தன்னை மாற்றங்களுக்குள் தகவமைத்துக் கொள்வதில்த்தான் இருக்கின்றது.


பொதுவாக இலக்கியப் பிரதிகள் ஒற்றைப் புரிதலுக்கு உரியவையல்ல. பன்முகத் தளங்களிலான வாசிப்பை கோரி நிற்பவை. தவிரவும் வாசிப்பு என்பது வெறுமனே மனம் சார்ந்த ஒன்றல்ல. அதில் புறநிலையான காரணிகளும் செல்வாக்குச் செலுத்துகின்றன. அகப்புறக் காரணிகள் சார்ந்த நிலையில் ஒரு பிரதி வாசகனிடம் ஏற்படுத்தும் தாக்கங்கள் எல்லாரிடத்தும் ஒன்றாக அமைந்துவிடுவதில்லை. நவீன கவிதைகள் இதற்கான சாத்தியங்களை அதிகமும் கொண்டுள்ளன. அது தனக்கான அர்த்தங்களை விரித்துக்கொண்டே செல்லவல்லது. இந்த இயல்பான பார்வை கவிதை மீது கட்டமைக்கப்படுகின்ற அதிகாரத்தைத் தகர்த்துக்கொள்கின்றது. எழுத்தோ வாசிப்போ முழுமையான அர்த்தத்தில் அதிகாரத்துக்கு எதிராக நிலையெடுப்பவை. ஆனால் அதன் மீது கட்டமைக்கப்படும் அதிகாரமயப்படுத்தப்பட்ட கருத்தேற்றங்கள் உண்மையில் எழுத்தின் இயங்கியலை மறுப்பவையே.

அண்மைக்காலமாக நவீன இலக்கியவகைமைகள் பற்றியதான கருத்துருவாக்கங்கள் அதிகமாக உற்பத்தியாக்கப்பட்டுகொண்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை சலிப்பை ஏற்படுத்துபவை. இந்தக் கருத்துருவாக்கங்கள் கவிதைகள் மீதே அதிகமும் நிகழ்த்தப்படுகின்றன. ஏற்கனவே உள்ளவற்றை புதியதான கண்டுபிடிப்பு போல முன்வைப்பதும், ஏற்கனவே உள்ள பிரதிகளை அது எழுந்த காலம் சூழல் போன்றவற்றை கருத்திற்கொள்ளாமல் அவற்றை முக்கியமற்றவை என மறுத்துரைப்பதும் தொடர்ந்துவருகின்றது. இவற்றை வெறும் பிதற்றல்கள் என்ற அடிப்படையில் கடந்து செல்வதுதான் பொருத்தமானது. இலக்கியப்பிரதிகளானவை அவை உருவாகிய சூழல், அந்த சூழலில் அவை ஏற்படுத்திய தாக்கம், இன்றளவிலும் அவை நிலைத்திருப்பதற்கான காரணம், அவற்றின் தேவை என்பவற்றின் அடிப்படையில் காரண காரிய ரீதியில் அணுக்பட வேண்டியது. ஒற்றைத்தனமான புரிதலில் அவற்றை நிராகரிப்பது ஒரு வகையான பிறழ் மனநிலை என்றே கருத முடியும். பெரும்பாலும் கவிதைகள் பற்றிய கருத்துருவாக்கிகள் தம்மை நிலைநிறுத்துவதற்கான அதிர்ச்சியளிக்கவல்ல கருத்துக்களை பொது வெளியில் உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறார்கள். இத்தகைய வகையில் உருவாக்கப்படுகின்ற கருத்துக்கள் தமிழ்க் கவிதையின் இயங்கு திசையில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள் எதுவும் இல்லைதான். புதிதாக எழுதவருகின்றவர்கள் கவிதையை ஒரு உற்பத்திப் பண்டம்போல கருதும் நிலையை இவை ஏற்படுத்திவிடலாம். வெறும் செய்திறனே கவிதை என்னும் தோற்றப்பாட்டை இவை ஏற்படுத்திவிடுகின்றன. இத்தகைய கருத்துருவாக்கங்கள் சிந்தனைமுறைகளாக உருவாகாமல் வெறும் அபிப்பிராயங்களாகவே முன்வைக்கப்படுகின்றன. இந்தப் தோற்றப்பாட்டுக்குள்ளும் அதிர்ச்சிக் கருத்தாடல்களுக்குள் தன்னை உட்படுத்திக்கொள்ளாமல் தன் கவிதைகளை நவீன கவிதைக்கான இயல்பான மொழிதல் முறையோடு தந்திருக்கின்றார் நேதாமோகன்.

நேதாவின் கவிதைகளை, எந்த கோட்பாடுகளின் வழிநின்றும் தர்க்கவியில் கருத்தாடல்களின் வழியிலும் அணுக வேண்டிய தேவையில்லை. அவை இயல்பின் வழியில் இயல்பின் மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன. அதீத புனைவுகளுக்குள் ஆட்பட்டுக் கொள்ளாத இயல்புநிலைதான் அவரின் கவிதைகளின் அடையாளம். அவர் தனது நிலத்தை தனது மனிதர்களை அவர்களின் வாழ்வியலைத் தன் கவிதைகளின் ஊடாக கொண்டுவருகின்றார். எல்லா வழிகளிலும் ஒடுக்கப்படுகின்ற நிலத்தினது மனிதர்களினதும் குரல்தான் நேதாவின் குரல். கவிதை என்பது வாழ்வுக்கு அப்பாலான ஒரு வஸ்துவல்ல. அது வாழ்வின் கூறுகளின் வழியில் உருக்கொள்வது. இன்று கவிதை பற்றிய உரையாடல்கள் தமிழ் இலக்கியச்சூழலில் தீவிரமாக இடம்பெறுகின்றன. பெரும்பாலான உரையாடல்கள் மொண்ணைத்தனமானவை. தாம் கொண்டிருக்கின்ற கருத்தியல்களின் வழிதான் கவிதையை அணுக வேண்டுமென்கின்ற ஒற்றைத்தனமான அணுகுமுறைகளாகவே அதிகமானவை இருக்கின்றன. நவீன கவிதையானது, அது வடிவநிலையிலும் சரி, பொருண்மை நிலையிலும் சரி பல்வேறு மாற்றங்களையும் போக்குகளையும் அடைந்திருக்கின்றது. பொதுமைப்பாடான கருத்துருவாக்கம் என்பது ஒருபோதும் சாத்தியமற்றது. ஆனால் பலரும் தாம் உருவாக்குகின்ற கருத்துநிலையை பொதுக் கருத்து நிலையாக மாற்றுவதற்கு தீவிரமாக முயன்றுகொண்டிருக்கின்றார்கள். இந்த ஒற்றைத்தனமான மனநிலை நவீன கவிதையை பாதிக்கவில்லை என்பதுதான் முக்கியமானது. அது தனக்கான வெளிகளை உருவாக்கிக்கொண்டுதான் இருக்கின்றது.

நேதாமோகனை, அவரின் முகநூல் கவிதைகள்தான் எனக்கு அறிமுகமாக்கின. சமகாலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் தனித்துவமான கவிஞர்களுள் அவரும் ஒருவர். காட்சிகளின் வழி அவர் கட்டமைக்கும் உணர்வுநிலைகள் மனதில் இலகுவான படிமங்களாகப் பதிகின்றன. அவரின் கவிதைகளில் துலங்கும் நிலக்காட்சிகளானாலும் சரி கடலாக இருந்தாலும் சரி நாங்கள் ஏலவே பார்த்து பரிச்சயமானவையாக இருப்பதில்லை. அவரின் மொழிதலின் வழி அவற்றைப் பார்க்கின்றபோது அவை புதியவையாக இருக்கின்றன. நேதாவின் அனுபவத்தின் திரட்சியாக அவை தெரிகின்றன.

இயலாமையும் ஏமாற்றம் ஏக்கமும் வலியும் நிரம்பிய கவிதைகளாக இந்தத் தொகுதிக் கவிதைகள் இருக்கின்றன. கற்பனைகளால் உருவாக்கி வைத்திருக்கும் புனிதப் புனைவுகளின் மீது அதிராத குரலில் அவர் ஏற்படுத்தும் தாக்கம் மிக வலிமையானது. புறநிலைத் தோற்றத்தை தாண்டி உட்சென்று மனிதர்களின் அகத்தில் படிந்துகிடக்கும் சிறுமைகளை நேதா தனக்கேயுரியதான முறையில் கட்டவிழ்ப்புச் செய்கின்றார். அதேவேளை பொதுமைப்படுத்தப்பட்ட உலக இயல்புகளுடன் பொருந்திப்போக முடியாமைக்கு அவரால் ஆயிரம் காரணங்களைச் சொல்லவும் முடிகின்றது. ஆனால் அந்தக் காரணங்கள் எதுவுமே அவரைத் தனித்துத்துரத்திவிடுவதில்லை. அவற்றோடு இயந்து வாழவேண்டிய நிலையை ஏற்படுத்திவிடுகின்றன. தனிமனிதன் தன்னை தனக்குள்ளாக அன்றி பொதுமைக்குள்ளும் முடக்கிக்கொள்ள வேண்டிய முரண்நிலைதான் இது. இந்த முரண்நிலைகளினால் தனக்குள் ஆயிரம் கேள்விகளை எழுப்பிக்கொண்டு நேதா துயருறுகின்றார். ”பொருத்தமற்றலின் அபத்தம்” கவிதை இந்த இருகூறு மனநிலையின் ஒரு அடையாளக் கவிதையாகக் கொள்ளத்தக்கது.

இந்தத் தொகுதியிலுள்ள கவிதைகளில் பெரும்பாலானவை நம்பிக்கையீனங்களினாலும் ஏமாற்றங்களினாலும் நிரம்பிக் காணப்படுகின்றன. அநேக கவிதைகளுக்குள் துயரம் ஒரு நதியைப்போல ஊர்ந்து கொண்டே இருக்கின்றது. காலத்தால் மட்டுமன்றி சக மனிதர்களினாலும் கைவிடப்படுகின்றபோது, வாழ்க்கையை நிச்சயமின்மையாக அல்லது அர்த்தமற்ற ஒன்றாக மனித மனம் மாற்றமுனைகின்றது. இந்த மனநிலை உளவியலின் உட்கூறுகளால் அணுகப்பட வேண்டிய ஒன்று. நேதா இந்த மனநிலையின் கூறுகளை தன் கவிதைகளில் அதிகமும் கொண்டிருக்கின்றார். நம்பிக்கைகள் சிதையும் போது அவரே சிதைந்தும் போகின்றார். ஆனால் கடந்த காலம் நம்பிக்கைக்குரியதாக இருந்ததை எண்ணி மகிழவும் செய்கின்றார். கடந்த காலத்தின் யுத்தம், அது ஏற்படுத்திய துயர் இத்தகைய நிலையை அவருக்குள் ஏற்படுத்திவிடுகின்றது. யுத்தம் நம்பிக்கைக்குரியதாக இருந்தபோது அவர் தனக்குள் கொண்டிருந்த நம்பிக்கையை, எதிர்பார்ப்பை மீறி நம்பிக்கைச் சிதைக்வுக்குள் ஏற்படுத்தியபோதும். கடந்த காலத்தின் நம்பிக்கையுட்டல்களின் வழியில் இன்னும் அவர் இருந்துகொண்டு களிவிரக்கும் ததும்பும் சொற்களால் அவற்றை எழுதிக்கொண்டுமுள்ளார்.

ஈழத் தமிழ்க் கவிஞர்கள், போர் முடிந்த பின்னரும் போர் பற்றியே திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருக்கின்றனர். போர்க்காலத்தில் வாழ்கின்ற நினைப்போடுதான் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்ற விதமாக குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றதன. யுத்தகாலத்தில் வெறும் யுத்தம்மட்டுந்தான் இருந்ததா? மனிதர்கள் காதல் கொள்ளவில்லையா கலவிகொள்ளவில்லையா என்ற கேள்விகளை முன்வைப்பவர்கள் ஈழக்கவிதைகளின் இயங்குநிலையையும் பொருண்மையையும் விளங்காதவர்களாகவே இருப்பார்கள். சுயவிளம்பரம் தேடிக்கொள்ளுவதற்காக அதிர்ச்சியான கருத்துக்களை உதிர்ப்பவர்களை என்ன செய்ய முடியும்? போர் முடிந்போனாலும் தமிழர்களின் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன. அடக்கு முதுறைகள் தொடர்கின்ற வரை இத்தகைய கவிதைகள் எழுதப்பட்டுக்கொண்டுதான் இருக்கும். ஏனெனில் கவிதையோ ஏனைய இலக்கியப் பிரதிகளோ வாழ்க்கைக்குப் புறநிலையிலிருந்து எழுதப்படுபவையல்ல. வாழ்க்கையுடன் இயந்தே பயணிப்பவை. கவிதையை ஒரு செயற்பாடாக அல்லது செயல்முறையாகப் பயின்று கவிதை எழுதுகின்றவர்கள் இதற்கு எதிரான கருத்துநிலையை கொண்டிருக்க முடியும். இத்தகைய மனநிலையோடு எழுதப்படும் கவிஞர்களின் கவிதைகள் பெரும்பாலும் ஒத்த தன்மை உடையனவாகவே இருக்கின்றன. ஒத்த சொல்லல் முறைகளில் எழுதப்படுகின்றவையாகவே இருக்கின்றன. இத்தகைய கவிதைகள் ஒருவகையில் தமக்கான ஒத்த கட்டமைப்பை நிறுவமுயலுகின்றன. இது உண்மையில் நவீன கவிதையின் இயங்குநிலைக்கு எதிரானது. நவீன கவிதை எந்தளவுக்கு தளமாற்றங்களை ஏற்றுக்கொள்ளுகின்றதோ அதே போல ஒத்தநிலையான போக்கை பேணுவதையும் அது மறுதலித்தே வந்திருக்கின்றது.

நேதாவின் கவிதை சொல்லல் முறை தமிழில் ஏலவே பயின்று வருகின்ற தடத்தில் தொடர்ந்துவருவதுதான். ஆனாலும் அவர் தான் சார்ந்த அல்லது தான் வாழும் சழூகம் சார்ந்த அடையாளங்களின் வழி தன் கவிதைகளுக்குள் மீறல்களை நிகழ்த்துகின்றார். தன் நிலத்தின் பிற உயிரிகளையும் இயைந்து வருகின்ற எல்லாவற்றையும் தன் கவிதைகளுக்குள் கொண்டுவருகின்றார். ஈழக் கவிதைகளில் இந்த தன்மை மிகவும் அரிதானது புறக்காட்சிச் சித்திரிப்புக்களைக் காட்டிலும் அககாட்சிகளுக்கு அவை பெரும்பாலும் முதன்மை கொடுத்திருக்கின்றன. புறப்பொருண்மைகளை பொதுபடையானவையாக அணுகும் தன்மைதான் அதிகமும் காணப்படுகின்றன. நேதா போன்ற சில கவிஞர்களே தங்கள் நிலங்களின் மரங்கள், பறவைகள் எனப் பலவற்றை தம் கவிதைகளுக்குள் கொண்டுவருகின்றார்கள். நேதாவின் கவிதைகளில் அவர் இவற்றைக் கொண்டு உருவாக்கும் தரிசனவெளி பல அர்த்தப்பாடுகளையும் புரிதல்களையும் ஏற்படுத்துகின்றன.

ஏமாற்றங்களும் நம்பிக்கையீனமும் எவ்வளவுக்கு நேதாவின் கவிதைகளில் நிறைந்திருக்கின்றனவோ அதேயளவுக்கு காதலும் சக மனிதர்களின் மீதான நம்பிக்கையும் நிரம்பியிருக்கின்றது. குழந்தைமையும் அவற்றின் குதூகலமும் கவிதைகளில் நிரம்பவும் காணப்படுகின்றன. குழந்தைகளின் அகவுலகை அவர் அணுகும் முறை அழகும் ஆழமும் நிரம்பிய அனுபவப்பேறுகளாக வெளிப்படுகின்றன. அவரது ”பொம்மைகள்” என்ற கவிதை, குழந்தைகளுக்கு மட்டுமல்ல பொம்மைகளுக்கும் அழகிய உலகம் இருக்கின்றது. அந்த உலகத்தை குழந்தைகளே பொம்மைகளுக்கு உருவாக்கிக் கொடுக்கின்றார்கள் என்பதை அழகாக வெளிப்படுத்துகின்றது.

உலகம் அறிவியல் ரீதியாக எந்தளவுக்கு முன்னேறி இருந்தாலும் அந்த அறியில் வளர்ச்சியின் பேறுகளான தொடர்பாடல் சாதனங்கள் இயல்பான மனித உறவை எந்தளவுக்கு தூரமாக்கியுள்ளது என்பதை நேதா தன் கவிதைகளில் எழுதியிருக்கின்றார். தொலைபேசி உறவுகளை நெருக்கமாக்குவது போல தூரமாக்கியும் விடுகின்றது. தனிமையை துரத்துத்துகின்ற போதும் கூட்டத்துக்குள்ளும் மனிதர்களை தனிமைக்குள் தள்ளிவிடுவதும் தொலைபேசிதான் என்பதையும் நேதாவின் கவிதைகளில் படிக்கமுடிகின்றது.
நேதாவின் கவிதைகளில் கடந்த காலம், காட்சிகள் உறைந்த படங்களாக விரிகின்றன. யுத்தத்தின் பயங்கரங்களும் கொவிட் கால நெருக்கீடுகளும் தனிமைப்படுத்தலின் வலியும் கூடவே காணாமல் போதல்கள், கைதுகள், சித்திரவதைகள் என யாவும் காட்சித் திரைகளாகத் தொங்குகின்றன. அவரின் அநேக கவிதைகள் முன்னிலையில் ஆரம்பிக்கின்றன. நேதா காட்டுகின்ற “நீ“ அனைத்துவிதமான உடன்பாடனவையாகவும் எதிர்மறையாகவும் விரிகின்றது. நீ என்பது அன்பின் சுனையாகவும் அதிகாரத்தின் பேருருவாகவும் அநேகம் கொள்கின்றது. அவர் தன் கவிதைகளில் நீ என்னும் இந்த முன்னிலை ஒருமைக்கு பல வடிவங்களை கொடுக்கின்றார். அதைக் காலமாகவும் அகாலமாகவும் காலத்தில் தேங்கிச் சுழிக்கின்ற எண்ணற்ற துயரங்களின் கூட்டுச்சேர்க்கையாகவும் அதை வரைந்துகொள்கின்றார். “நீ“ என்பதை பெரும்பாலும் அதிகாரத்தின் அடையாளமாக காட்சிப்படுத்தும் அவர், தன் கவிதைகளில் பொதுமைப்படுத்தலுக்கான வழியாக அதனைக்கைக்கொள்கின்றார். இது நேதா திட்டமிட்டு உருவாக்கிய ஒன்றாக நான் கருதவில்லை. அதிகார மையங்கள் தனித்தனி அடையாளங்களோடு ஒடுக்குமுறைகளை முன்னெடுத்தாலும் எல்லாவற்றினதும் அடிப்படைக் குணாம்சம் ஒன்றுதான். அவை மனிதகுலத்திற்கு எதிரானவை. தன்னை பீடத்தில் அமர்த்திக்கொண்டு மற்றவர்களை அற்பமாகக் கருதுபவை. சாமானியனின் குரல் இந்த அதிகாரமையங்கள் அனைத்துக்கும் எதிரான குரலாக ஒலிக்கின்றபோது பல இடங்களில் கையாலாத்தனத்தின் குரலாகவும் தீவிரமான எதிர்ப்பின் அடையாளமாகவும் ஒலிக்கின்றன. நேதாவின் குரலும் இதுதான். அவர் காலத்தின் திசைகளில் ஒரு இறகைப்போல அலைகின்றார். முடிவற்ற அலைதலது.
இது நேதாமோகனின் இரண்டாவது கவிதைத்தொகுதி. அவரது முதலாவது கவிதைத்தொகுதி ”துணிச்சல்காரன்” வெளியாகி எட்டு ஆண்டுகளின் பின்னர் இது வெளிவருகின்றது. இந்த கால இடைவெளியில் வாழ்வில் அவர் எதிர்கொண்ட அல்லது அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற மக்கள் எதிர்கொண்ட பலவற்றை ஒரு வரலாற்றுக்குறிப்பை போல தன் கவிதைகளில் தந்திருக்கின்றார். பெரும்பாலான கவிதைகள் காலப்பதிவுகளாகவே இருக்கின்றன. அவர் தன் காலத்தை எழுதியிருக்கின்றார். இந்தத் தொகுதி பரவலான வாசிப்புக்கு உட்பட வாழ்த்துகிறேன்.
சித்தாந்தன்
கோண்டாவில்
22.04.2023

09 ஆகஸ்ட், 2024

சித்தாந்தனின் "தணற்காலம்"

லலிதகோபன்

ரு வாசகனாக என் முன்னே விரிகிறது பெருவெளி.காற்றின் ஒலி தவிர்த்து பிறவொலிகள் அடங்கிய வெளியில் நான் நிற்கிறேன். இப்போது சொற்களை உச்சாடனம் செய்து யாகம் வளர்க்கிறேன். பெருந்தீயென எழுகிறது சொற்கள். காதல்,காமம்,குரோதம்,நேசம்,கருணையென சொற்கள் பெருந்தீயென வளர்கின்றன. யாகத்தின் இறுதியில் நான் ஆசுவாசம் கொள்கிறேன். ஆனாலும் சொற்கள் எழுப்பிய தீ கங்குகளாகி என்னுள் கிடக்கிறது. கங்குகளை மூடியிருக்கிறது தணல்.காற்றின் தூண்டலில் மீண்டும் பெருந்தீ என்னுள் எழும்பும்.

ஒரு வாசகனாக கவிஞர் சித்தாந்தன் அவர்களின் "தணற்காலம்" என்னுள் கிளறிய உணர்வுகளே இவை.இதுவரைக்கும் வந்த அவரது தொகுதிகளில் மிகப்பெரிய தொகுதியாக "தணற்காலம்" அமைகிறது. இறுதி யுத்தத்தின் முன்பும் பின்புமாக எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பாக இது அமைவதால், தணற்காலம் என்ற தலைப்பினூடே தனது அரசியலை பேசுகின்றன இவைகள்.நாம் மறந்துபோன காலத்தினை வாசித்தல் என்ற செயலூக்கத்தை எம்முள் எழுப்புவதனாலேயே இது முக்கிய தொகுதியாகிறது.
நிர்வாணம் என்பது உடலின் ஆடை களைதலாகுகையில் அது மோகத்தையும் , மனதின் ஆடைகளை களைகையில் பரிநிர்வாணமாகவும் பரிணாமமுறுகிறது.ஆக களைதல் என்ற செயலின் விளைவினை குறித்து எழுகின்ற சொற்களே "பரிநிர்வாணம்" கவிதையாகிறது."துக்கங்களிலிருந்து தூக்கத்திற்கும்,தூக்கங்களிலிருந்து துக்கத்திற்குமாக" நடைபெறும் சுழற்சியின் மிகுதியாக சூன்யமே எஞ்சுகிறது. ஆனாலும் இந்த சூன்ய வெளி நிரந்தரமானதன்று.ஏனெனில் "புத்தனின் ஞான உணர்ச்சியும் யசோதரையின் காம அணுக்கமும் முயங்கும்" நிகழ்வு இந்த சூன்யத்தை நிரப்பி விடுகிறது.
"யசோதரையின் நிர்வாணத்தில்
புத்தர் பரிநிர்வாணமடைந்திருந்தார்"

எனது வாசிப்பின் பிரகாரமாக பரிநிர்வாணம் பெறுகையில் புத்தர் தனது ஆணியல்பை தொலைத்தும்,யசோதரை தனது பெண்நிலையை கடந்தும் பாலின பேதமற்ற நிலையை இயற்றுகின்றனர்.
பரிநிர்வாணம் கவிதையின் மறு வடிவமே "தீராப்பெருங்கடாகிறது".அதாவது சரியாக மடிக்கப்பட்ட ஓர் ஒற்றை தாளின் ஒரு பகுதி "பரிநிர்வாணம்" ஆகுகையில் மறுபகுதியே "தீராப் பெருங்கடல்".வாழ்வியல் தேடலின் உச்சமாகிய ஞானமுறுதல் குறித்தான பொருண்மையே இரு கவிதைகளினதும் சாரமாக அமைகிறது.
யௌவனம் இலையுதிர்த்தி முதுமையை எய்துகையில் பெருங்கடலை கொண்டு வரும் முன்னிலையுடனான உரையாடலாக கவிதை நீள்கிறது. பௌதிக உடலினை கடத்தல் அல்லது ஆன்மிக தளத்தை லௌகிகத்தினூடே அணுகுதலை இவ்வாறு உரைக்கிறார் கவிஞர்.
"தினவடங்கிய முதுமையில் மலர்வது
காமத்தின் முட்களோ
காதலின் மலர்களோ இல்லை.
இரண்டுக்குமிடையில்
தேகத்தை கடந்து செல்லும் ஏதோவொன்று
அது
முத்தங்களாலோ
புணர்ச்சியினாலோ தீர்வதில்லை
தீராப் பெருங்கடல்"
இந்த தீராப் பெருங்கடலினுள் மூழ்குதல்தானே பரிநிர்வாணம் அல்லது ஞானமடைதல்.
தீவிர உரையாடல்களுக்கான வெளியை கருவிகள் ஆக்கிரமிப்பு செய்தபின் ,அதாவது கட்புல மற்றும் செவிப்புல வழியேயான உணர்வுகளை இயந்திரங்களிடம் அடவு வைத்தபின், மனிதனின் உரையாடல் வழக்காறுகள் முகமன் கூறுதல் அல்லது ஒரு புன்னகைக்குள் சுருங்கி போயின.இந்த அவலத்தை பேசும் கவிதையே "துண்டிக்கப்படும் உரையாடல்கள்'.
"இப்போதெல்லாம்
நகக்கணுக்களவு சுருங்கிய வார்த்தைகளோடு
எதிர்ப்படுகையில் புன்னகை மட்டும்
நிலவிலிருந்து வடிகிறது ஒளியாய்"
யாவுமே பாசாங்குத்தனத்தின் விளிப்புகளாய் விடிகிறது."உள்ளங்கைகளிரண்டிலும் இரையும் கடல்' என்பது அலைபேசிகட்கான அசையும் படிமமாக வாசகன் நெஞ்சில் உறைகிறது.
மரபுகளும் தொன்மங்களும் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட வேண்டியவைகளாக இருக்கின்றன. ஏனெனில் அவற்றின் சீரான தொடர்ச்சியை பேண வேண்டியது சமூகத்தின் குடிகளுக்கான கடமையாகிறது. ஆனால் தற்காலத்தில் இவ்வாறான சமூகப்பொறுப்பு மிகுந்த மனிதர்களும் அருகி விட்டனர்;கேட்பதற்கு தயாரற்ற இளைய தலைமுறையின் அவலத்தை தனது சொற்களால் செறிவூட்டுகிறார் கவிஞர்'சிறகுகளற்ற ஞாபகங்கள்" கவிதையில்.
ஞாபகங்களையும் சிறகுகளையும் கடத்தல் என்ற செயலே இணைக்கும் ஒன்றாகிறது.இது குறியீட்டு மொழியில் நகரும் கவிதை.
"இந்த வானம்
வனாந்தரத்தின் சாயலுடன்
மேலும் மேலும் விரிகின்றது"
எதிர்கொள்ளும் அவலம் மென்மேலும் வளர்ந்து செல்வதை "மேலும் மேலும்" என்ற தொடர் குறித்து நிற்கிறது.
"ஒரு பறவைக்கு
பறத்தலிலும் மேலாக எதுதான்
இருக்க முடியும்?
ஞாபகங்கள்"
இயல்பிலும் மேலான ஒன்றாக ஞாபகங்களின் தொடர்ச்சியான கடத்தல் அமைகிறது.ஏனெனில் சந்ததி ஒன்றின் நிலைத்தல் இவ்வாறான ஞாபகங்களின் தொடர் பேணுதலிலேயே தங்கியுள்ளது. இந்த அவலத்தின் முடிவாக இந்த கோரிக்கையை முன்வைக்கிறார்.
"யாராவது எடுத்து செல்லுங்கள்
என் சிறகுகளற்ற ஞாபகங்களை"
கவிஞர் சித்தாந்தன் அவர்களின் இந்த தொகுதியில் அனேகமான கவிதைகள் சமூகத்தின் அவலங்கள் குறித்தும் எதிர்கொள்ளும் துன்பியல் யதார்த்தங்களையும் பேசி நிற்கின்றன. போர் ஓய்ந்த காலத்தில் சமூகத்தின் மீதான அவரது தொடர் அவதானிப்புக்களே இந்த கவிதைகளின் பொருண்மை.இதனை தனது "மலராத கதைகள்' என்ற கவிதையிலே தனது வாக்குமூலமாக பதிவு செய்கிறார்.
"கரியாய் உறைந்தகாலத்தின் வடுக்களை
மொழிகடந்த சொற்களில்
சொல்லத் தொடங்கினர்"
"யாவுமே கதைகளான பின்
புதைகுழிகளின் மேல்
மழை பெய்தாலென்ன
சூரியன் படுத்துறங்கினால் என்ன"
"சொற்களையும் கடந்து நீள்கிறது
கதைகளின் துயரம்"
(சொற்களை வசியம் செய்யும் கலை முதிர்ந்த ஒரு கலையாடிக்காக)
குறிப்பு
கவிஞர் சித்தாந்தன் அவர்களின் இந்த தொகுதி கரங்களில் கிட்டியதும் உள்ளத்தில் மலர்ந்த உவகை சொல்லில் அடங்காது.ஏனெனில் சித்தாந்தனின் கவிதைகள் மீதான வாசிப்பு ஒற்றை பரிணாமமுடையதன்று.
00

வாசிப்பின் பல தளங்களைக் கோரும் 'அம்ருதாவின் புதிர் வட்டங்கள்'

  - தாட்சாயணி

 

வீன இலக்கியத்தின் கதைகூறல் முறை அதிகளவான எல்லை மீறல்களோடு, மையம் சிதைந்த யதார்த்த முறையிலிருந்து விலகிய தன்மையில் பல்வேறு கதை சொல்லல் முறைகளுக்குத் தாவியுள்ளது.கதை என்பது, மொழி உருவான காலத்திலிருந்து ஆதி மனிதனின் உணர்வுகளை சுவாரசியமாக இன்னொருவனை உணர வைத்ததில் ஆரம்பித்தது எனக் கொள்ளின் அந்தச் சுவாரசியமான எடுத்துரைப்பு முறை கதையை ஒவ்வொரு தலைமுறைக்கும் அந்தந்த சுவாரசியக் கூறுகளின் சிறிய, சிறிய மாற்றங்களோடு நகர்த்தியது எனக் கொள்ளலாம்.அவ்வாறாகவே காலத்திற்குக் காலம் சிறுகதை சிறிய தாவல்களையும், எல்லை கடத்தல்களையும் மேற்கொண்டு இன்றைய நவீன கதை கூறல் முறைக்கு வந்துள்ளது. எனினும் கதையின் சுவாரசியம் அதிலுள்ள மொழிவளம், புதிய சொல்லாடல்கள், குறியீடுகள் என்பவற்றின் மூலம் வாசகனின் மனத்தின் பல்வேறு கதவுகளைத் திறந்து விடுவதன் மூலமே எழுத்தாளனின் படைப்பின் நீடித்த தன்மையைப் பேச முடியும். 

சித்தாந்தன் வழமையான போக்குகளினின்று விலகி இலக்கியத்தில் புதிய வாசல்களைத் தேடி நகர்பவர். நவீன கவிதைகள் மூலம் வாசகனிடம் ஆர்ப்பாட்டமில்லாத மெல்லிய அதிர்வுகளை ஏற்படுத்தியவர். அத்தகையவரிடம் வாசகரிடம் கூறுவதற்கு எண்ணற்ற கதைகள் இருக்கின்றன. அவற்றின் கூறுமுறைகள் எல்லாவற்றிலும் நேரடியாக இருப்பதில்லை. நேரடியான கதைகள் திரும்பத் திரும்ப ஒரே விதத்தில் சொல்லப்பட்டு வாசகனுக்குச் சலிப்பை ஏற்படுத்துகின்றன. புதிதாக எதையும் வாசகனுக்குத் தருவதில்லை என்பதோடு, சில விடயங்களை அவை உண்மை தானென்றாலும் நேரடியாகக் கூற முடியாது. அரசியல் சூழல் அக்கதை வாசகனுக்கு எத்தகைய தாக்கத்தை  வழங்குகிறதோ அதை விட அதிக தாக்கத்தை  எழுத்தாளனிடம் பிரயோகித்து விடும். அவ்வாறான வேளைகளில், மையம் சிதைந்த குறியீட்டுப்பாணி கதைகளின் தேவை மிக முக்கியமானது. அத்தகைய காலத்தின் தேவையை இத்தொகுப்பிலுள்ள கதைகள் மூலம் ஈடு செய்கிறார் சித்தாந்தன்.   

‘நூறாயிரம் நுண்துளைகள் பொறிக்கப்பட்ட பெயர் - ஓர் அஞ்சலியுரை’ எனும் கதை யுகத்தாண்டவன் எனும் எழுத்தாளனின் மரணத்தோடு ஆரம்பிக்கிறது. யுகத்தாண்டவன் பற்றிய பிம்பம் கதை சொல்லியால் துண்டு துண்டாக ஓட்ட வைக்கப்படுகிறது. அத்தனைக்கும் கதைசொல்லி யுகத்தாண்டவனோடு அதிகம் கதைத்ததில்லை. இறுதியாக ஒரு தேநீர்க்கடையில் சந்தித்த போது அவனோடு ஐம்பது சொற்களுக்கு மேல் பேசியிருக்கவுமில்லை. கதைசொல்லி ஏனையவர்களிடமிருந்து அறிந்து கொண்ட தகவல்களாலும், நேரடிச் சாட்சியமான அந்த இறுதிச் சந்திப்பின் உரையாடலிலிருந்தும், யுகத்தாண்டவனின் படைப்புகளிலிருந்தும் கதைசொல்லி பிழிந்து எடுத்த சார நினைவுகளைக் கதை வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறது.போலி இலக்கியவாதிகளிடம் காணப்படுகின்ற அதி மேதாவித்தன உணர்வு, நேர்மையற்ற பாங்கு, தற்பெருமை, மனச்சாட்சியற்ற விமர்சனம், போலி முகத்திரை என்பவற்றை வாசகனிடம் திறந்த மனநிலையில் முன் வைக்கிறது இப்பிரதி. எழுத்தாளனின் புகழ் நோக்கிய கோமாளித்தனமான செயற்பாடுகள், அவனது இயல்பறிந்து அவன் மரணத்திலும் அவனது கதையின் வரிகளை நாடகத்தனமாக ஒப்புவிக்கிற மனைவி பாத்திரம் என்பன கதையினூடு வாசகன் மனதில் சிறு புன்னகையை ஏற்படுத்திச் செல்கின்றன. ஒரு மரண நிகழ்வில் மரணித்தவனது பெருமைகளையே பேச வேண்டும் என்கின்ற எழுதாத விதி இருக்கின்ற போது கதைசொல்லியால் தான் என்ன செய்ய முடியும்? யுகத்தாண்டவனின் கவிதைகள், அவனது பிரதிகளில் வருகின்ற கனவுகள், அவை பற்றிய விமர்சகர் அந்துவனின் கருத்து இவற்றையெல்லாம் கூறுகிற போது,கதைசொல்லியின் கண்களில் நீர் திரளாமல் விட்டால் தான் ஆச்சரியம். தேநீர்க்கடையில் யுகத்தாண்டவனிடம் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தைக் கூறாமல் கதைசொல்லியின் மனம் ஆறப்போவதில்லை. ஆனால், என்ன செய்வது? இறப்பு நிகழ்வில் தான் ஒருவரைப்பற்றி மோசமாகப் பேசக் கூடாதே. யுகத்தாண்டவன் தன்னைப்பற்றிய, பிறர் அறியக்கூடாது எனவும், தரமற்ற வெறும் குப்பை எனவும் நினைத்த அவனது முதல் நூல் பற்றிய ரகசியத்தைப் பார்வையாளர் மத்தியில் போட்டுடைத்துத் தன் மனஅவசத்தைத் தீர்த்துக் கொள்கிறான் கதைசொல்லி. நூறாயிரம் துளைகளால் பொறிக்கப்பட்ட தன் பெயர் பற்றிப் பெருமிதம்பூண்ட யுகத்தாண்டவனுடைய முதல் படைப்பு  வாசகர் பார்வைக்குத் தப்பி விடக் கூடாதென்று கதைசொல்லி நினைப்பதைத் தவறென்று யார் கூறி விட முடியும்?

'நட்சத்திரங்களை மோகிப்பவன்' எனும் இத்தொகுதியின் இன்னொரு கதையும் இக்கதையின் இயல்புடன் பொருந்தி வரும் கதையே. நவீன எழுத்து எனும் போர்வையில் வெளியாகின்ற போலிகளைத்  தோலுரிக்கும் விதத்தில் இப்பிரதி அமைந்துள்ளது. சமூக வலைத்தளங்களின் தாக்கம் இலக்கியத்தில் செலுத்தி வரும் செல்வாக்கும், குறுகிய காலத்தில் முகநூல் மூலம் பெற்றுக் கொள்ளும் விருப்புக் குறிகளின் அடிப்படையில் மொக்கையான, கவித்துவமற்ற வரிகளுக்குச் சொந்தமானவர்கள் கூட,கவிஞர்களெனும் ஒளி வட்டத்தில் பிரகாசிப்பதையும், அர்த்தமற்ற விவாதங்களைத் தவிர்த்து தத்தம் குரலுக்கான ஆலவட்டங்களை மட்டுமே எதிர்பார்க்கும் அரைவேக்காடுகளையும் விமர்சகர் அந்துவனூடாக சிக்கனமாக, மனதைத் தைக்கக் கூடிய உரையாடல்களினூடாக யதார்த்தபூர்வமான சிறு எள்ளல் தொனிக்க வாசகரிடம் கடத்துகிறார் சித்தாந்தன். முகநூல் உலகில் குழுமிக் கிடைக்கும் பல்வேறு வகையான குழுமங்களது அலட்டல்களுக்கும் இப்பிரதி அங்கதமான ஒரு பதிலை அளிக்கின்றதெனலாம். 

நிர்வாக ரீதியிலோ, அரசியலிலோ தலைமைப் பீடங்களில் மாற்றம் ஏற்படும் போது, அத்தலைமையை அண்மித்து இருப்பவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்குவதும், புதிய தலைமைக்கு நெருக்கமானவர்கள் பழையவர்களை ஒதுக்குவதையும் இரு தரப்பையும் சுமுக உறவில் வைத்திருப்பவர்கள் தப்பித் பிழைப்பதையும் காணலாம். அனுபவமிக்க காத்திரமான தலைமை இவற்றை அடையாளம் கண்டு கொள்ளும். இவ்வாறான நிலையில் புதிய தலைமையை வரவேற்க அத்தலைமையைத் தாம் தாம் கொண்டு வந்தோம் என்று சொல்பவர்களால் நடத்தப்படும் அருவருக்கத்தக்க வரவேற்பு ஏற்பாடுகளை அலுவலகம் சார் சூழலொன்றில் பொருத்திக் கூறப்பட் கதை 'அகங்காரமூர்த்தியின் அலுவலகக் கோப்பு'. தலைமைத்துவ மாற்றங்களின் போது நிகழும் சம்பவங்களைக் கொண்டு மனித மனதின் இருண்ட மூலைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறார் சித்தாந்தன். இத்தகைய கதைகள் மூலம்  தன் சமூகத்தில் இருக்கின்ற அழுக்குக் கூறுகளை வாசகனுக்கு இனங் காட்டி, சுய எள்ளல் மூலம் அவற்றைக் கடந்து செல்வதை அவதானிக்க முடிகிறது.

ஆண், பெண் உறவு நிலையில் ஏற்படும் சிக்கல்களைக் குறியீட்டுப் பாணியில் மையம் சிதைந்த நிலையில் கூறிச் செல்லும் கதை 'அம்ருதாவின் புதிர் வட்டங்கள்'. இக்கதைத் தொகுப்பின் தலைப்புக் கதை அது. அத்தலைப்பின் வசீகரம் போலவே பிரதியினுள்ளும் புதிரின் வசீகரம் இருக்கிறது. எனினும் அவ்வசீகரத்தினுள் தான் மனத்தைக் குத்திக் கிளறும் வாலறுந்த பல்லி எழுந்து நாட்டியமாடுகிறது. அம்ருதாவுக்கும், கதைசொல்லிக்குமான மன முரண் எங்கிருந்து ஆரம்பித்து எவ்வாறு வளர்கிறது என்பதுவும் எத்தகைய முரண்கள் இருந்தாலும் இருவரும் கடைசிவரை சேர்ந்தே தான் இருக்க வேண்டியிருக்கிறது என்பதுவும் அழகாக இப்பிரதி மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. இருவரும் சிந்திக்கும் விதம் ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கின்ற போதிலும் அவர்களுக்கிடையே விரிசல் விழுந்து கொண்டேயிருக்கிறது. வாலறுந்த பல்லி எப்போதும் அச்சுறுத்திக் கொண்டேயிருக்கிறது. சமயங்களில் விலகிப் போனாலும் போய் விட்டது என்று நினைக்கிற தருணங்களில் மீள வந்து விடுகிறது. மனதில் எழும் சிந்தனையிலிருந்து, வீட்டில் போடும் கோலம், இருவரது உறவு நிலை போன்றவற்றினூடாக வட்டங்களின் பரிமாணங்கள் பற்றிய வாக்குவாதத்தோடு கதை நகர்கிறது. வட்டத்தினுள்ளே ஒருவரும், வட்டத்தின் வெளியே ஒருவருமாகத்தான் இருவராலும் எப்போதும் இருக்க முடிகிறது. உள்ளே நிற்பது யார் என்றால் என்ன? வெளியே நிற்பது யார் என்றால் என்ன? அவர்கள் வரையில் எல்லாம்  ஒன்று தானே. இரண்டு பேராலும் ஓரிடத்தில் நிற்க முடியவில்லை என்பது தானே உண்மை. வாசகன் மன உணர்வுக்கேற்றபடி அவனது நியாயம் சார்ந்தும், அவளது நியாயம் சார்ந்தும் கதை வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அன்பின் அலைக்கழிப்பின் அபத்த நாடகம் என இக்கதையை அழைக்கலாம் போலிருக்கிறது.

குறியீட்டுப் பாங்கில் பூடகமாக மட்டுமே சொல்ல வேண்டிய தேவை கருதி அபூர்வமான கலைத்துவத்தோடு கூறப்பட்ட கதை 'வேட்டையன்'. நமது நாட்டுச் சூழலில்,  தலைமைத்துவத்தின் பலவீனத்தைத்  தமக்குச் சாதகமான முறையில் பயன்படுத்தி  நிபந்தனையுடனான வழிகாட்டலில் தவறுக்கு இட்டுச் செல்லும் அந்நிய சக்திகள் பற்றிய கோடி காட்டலுடன்  வேட்டையன், நாய்கள், சாமியார் ஊடாகக் கச்சிதமான பிரதி ஆகியுள்ளது இக்கதை. தலைமைத்துவ அதிகாரம், புகழ், இவற்றால் ஒரு கட்டத்தில் ஏற்படும் மமதை, அதிகார எல்லை மீறல், ஆகியவற்றால் நாட்டின் எதிர்காலமே கேள்விக்குறியாகி அழிந்து விடுவதையும் தலைமையின் சிதைவையும் இப்பிரதியில் காட்சிப்படுத்துகிறார் சித்தாந்தன்.நாட்டுச்சூழலை நன்கு புரிந்து கொள்ளும் வாசகர்களுக்கு இப்பிரதி தரும் அனுபவம் அலாதியானது.

'அரசனும், குதிரைவீரனும், அழியும் காலத்து சனங்களும்' எனும் பிரதியும் நேரடியான கதை கூறலில் கூற முடியாத விடயங்களைத் துண்டு, துண்டாகப் புதியதொரு பரிசோதனை முயற்சியில் வெளிப்படும் பிரதி தான். கொடிய யுத்தம் உண்டு தீர்த்த மண்ணில் ஆரம்ப எரிநிலைப் பிரச்சினை கிளர்ந்த இடம் நூலகம். அந்த நூலகத்தில் சிதறிப் பரந்திருக்கும் தாள்களில் குழம்பியிருக்கும் வாசிப்பின் கூறுகளினூடு போர் நடத்துகின்ற அரசனின் அட்டூழியங்களும், குதிரை வீரன் காப்பாற்ற நினைக்கின்ற மண்ணினதும்,மக்களதும் அவல நிலையும், இறுதி யுத்த காலத்தில் ஒடுக்கப்பட்ட சிறு துண்டு நிலத்தில் லட்சக்கணக்கான மக்களின் நெருக்குதலும் நூலகத்தின் வரைபடம், கிளைக்குறிப்பு, வாசிப்பு, மீள்வாசிப்பு எனக் குறியீட்டுப்பாணியில் பேசப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட இரு பிரதிகளினதும் பொதுப்பண்பாக அரசியலை நேரடியாக விமர்சிப்பதன் மீதான அச்சம் கதைகளுக்கான புதிய வடிவத்தைக் கலைத்தன்மையோடு கொண்டு வருவதற்கான சாத்தியங்களைப் படர வைக்கிறது.

புத்தரின் பஞ்ச சீலக் கொள்கையைப் பின்பற்றும் சமரசின்ஹ  என்பவனின் குடும்பத்தில் இராணுவத்திலிருக்கின்ற மகனால் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள் குறித்தான வெறுப்பும், புறக்கணிப்பும்  வெளிப்படும் கதையாக 'புத்தரின் கண்ணீர்' அமைகிறது. கடந்து போன யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தரப்புகள் இரண்டுமாக இருந்தாலும் இறுதி யுத்தத்தில் மீறப்பட்ட அறம் சார்ந்த கொந்தளிப்பு இரு தரப்பினருக்கும் இருக்கிறது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது இக்கதை. யதார்த்தபாணியில் எழுதப்பட்ட இக்கதையில் யுத்தம் தொடர்பான விபரணப்பகுதி சற்றே கதையின் கலையம்சத்தை விஞ்சித் துருத்தி நின்றாலும்,கதையின் களத்திற்கு அது அவசியமான ஒன்று என்பதையும் மறுக்க முடியாது.

'எழிலரசன் என்கின்ற சகுனி' எனும் கதையும் யதார்த்தபாணியில் சாதாரண வாசகனும் இலகுவில் எட்டக்கூடிய வகையிலான கதையாக அமைகிறது.யுத்தத்தின் ஆரம்ப காலத்திலிருந்து, இறுதிக்காலம் வரை தாய் மண்ணிலிருந்து, யுத்தக்களத்திலிருப்பவர்களை அண்மித்திருந்தவர்களுக்கு இக்கதையில் ஊடாடியிருக்கின்ற உள்ளார்ந்த துயரத்தையும், வலியையும் அணுக்கமாக உணர முடியும். போர் ஒரு இளைஞனை எப்படி வனைந்திருக்கிறது என்பதற்குப் போரிலிருந்து தடுப்பு முகாம் வரை சென்று மீண்ட அத்தனை பேரினதும் ஓட்டு மொத்த சாட்சியாக ஒலிக்கிறது எழிலரசன் என்கின்ற சகுனியின் விரக்தியான குரல். கதையின் முடிவில் மனதில் படரும் வலி ஏற்படுத்தும் தாக்கம் சொற்களில் அடங்காதது.

 'X , Y மற்றும் கறுப்பு வெள்ளைப்பிரதி' இரு இலக்கிய நண்பர்களுக்கிடையிலான உரையாடல் மூலம் ஒருவனின் தொலைந்து போன பிரதிமீட்கப்படும் போது அதன் சுயத்தைத் தொலைத்து விடும் என்பதை மூன்று பிரதிகள் மூலம் கதைசொல்லி விளங்க வைக்க முயல்கிறான். மையம் தகர்தல், உருவப்பகுதி, அருவப்பகுதி என நகரும் இப்பிரதி எனக்கும் முழுமையான புரிதலை ஏற்படுத்தவில்லை. கோட்பாடுகள் தொடர்பான என் அறிவின் போதாமை காரணமாக இருக்கலாம். பிரதியில் சொல்லப்படுவது போல வாசிப்பு இயல்பான தேடலில் மீள, மீள வாசிப்பு செய்யும் போது ஏதாவது புரியலாம் என நினைக்கிறேன்.

மொத்தத்தில் இத் தொகுப்பு மூலம் புதியதொரு கதை சொல்லல் முறையைத் தேர்ந்தெடுத்து நேரடியாகச் சொல்ல முடியாதவற்றையும், சமூகத்தில் தான் கண்ட இருள் செறிந்த பகுதிகளையும் வாசகனுக்கு நல்லதொரு அனுபவமாக்கியுள்ளார் சித்தாந்தன்.

நன்றி- ஜீவநதி