சித்தாந்தன்
வீடு வந்து சேராத இரவைக் குறித்து
அச்சப்படாதிருங்கள்.
நாலாபுறமும் ஜன்னல்களைத் திறந்து வைத்து
ஒளியலையும் வெளிகளை வெறித்தபடி
விழித்திருங்கள்.
சலனமற்ற காற்றின் அசைவில்
அது
பனித்திவலைகளின் சாயலில் வந்து சேரக்கூடும்
நீங்கள் அச்சப்படாதிருங்கள்.
ஒரு புர்வீகமான கனவின்
இழையை அறுத்தெறிவது போலாய்
துயரங்களின் இழைகளை அறுத்து
எப்போதும் வற்றாத
ஒரு கீதத்தை இசைத்தபடியிருங்கள்.
அது இரவுக்கான கீதமாக இருக்கட்டும்.
நீங்கள்
விழித்திருக்கும் அதே தருணத்தில்
இரவு
உங்களின் குரலில் உங்களை அழைத்தவாறு
உங்களின் இமைகளின் கீழாக
கரும்படிவென படரக் கூடும்.
அதுவரை
உங்கள் விழிகளை அசையாது விழித்தபடியிருங்கள்.
அது ஒரு குழந்தையைப் போலாய்
வந்தபடியிருக்கக் கூடும்
அச்சப்படாதிருங்கள்.
00
0 comments:
கருத்துரையிடுக