11 ஆகஸ்ட், 2024

ஞானத்தின் கண்கள்

 சித்தாந்தன்


எழுந்தெரியும்

தீயின் சுவாலையில்

படர்கிறது பறவையின் சாயல்.

இலையெறிந்து

காற்றில் அசைகிறது மரம்.

தெறிக்கிறது

யாரோ துப்பிய வெற்றிலை எச்சில்.

படிகிறது

ஏதோவொன்றுக்காய் அடம்பிடிக்கும்

குழந்தையின் முகம்.

நெளிகின்றன

காலத்தால் பீடிக்கப்பட்ட

முதுமையின் ரேகைகள்.

காற்றில் இதழ்களை

விரிக்கிறது

படபடக்கும் புத்தகம்.

 

எரிந்தணைந்து அடங்கிய சாம்பலில்

புத்திருக்கின்றன

ஞானத்தின் கண்கள்.

00