சித்தாந்தன்
ஆதாமின் கடிகாரத்தில்
பறவைகள் உறங்குகின்றன.
தொன்மத்தின் கனவுகள் கிளைத்தபடியிருக்கும்
அவனது கடிகாரம்
யுகங்களின் மீதான துருப்படிந்த
கதைகளால் நிறைந்திருக்கின்றது.
ஆதாமின்
முதல் முத்தம் சிதறிய கதையை
அவனது
முதல் வெட்டகம் பிறந்த கதையை
அதில் யாரேனும் வாசிக்கக்கூடும்
ஏனெனில்
ஆதாமின் கடிகாரம்
ஏவாளைப் போலிருந்ததாயும்
அது அவனை
ஏவாளின் நிழல்வழி அலைத்ததாயும்
பிறகு வாசிக்கப்படக்கூடிய
எந்தப் பிரதிகளிலும்
அவனது கடிகாரம் சுழன்றபடியிருக்கவில்லை.
பறத்தலற்ற பறவைகளின்
இறகுகளிடை
அது சுருண்டுபோனதாய்
ஏவாளே புலம்பியதாக எழுதப்படவும்கூடும்.
உண்மை
அதாமிடம் ஒரு கடிகாரம் இருந்தது
நிச்சயமாக அது ஏவாளைப் போலாயில்லை.
00
0 comments:
கருத்துரையிடுக